புதிது புதிதாய்ச் சில அதிர்வுகள்
இரா.உமா
கடந்த 7.02.2009, சனிக்கிழமை அன்று, சென்னை அண்ணாநகரில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உதவி மையம் ( Lesbians Help Line) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையயான்று ஈர்க்கும் என்பது அறிவியல். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள், எதிர் துருவத்தை எதிரி துருவமாக உணர்வதால் இந்த மாறுபட்ட வாழ்க்கை ஏற்படுகிறது. மனத்தளவிலும், உடலளவிலும் பெண்ணும் பெண்ணும் ( Lesbians), ஆணும் ஆணும் (Homosexuals) சேர்ந்து வாழ்வது ஓரினச்சேர்க்கை.
வெளிநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களுக்கான சட்ட அங்கீகாரம் வேண்டிப் போராடி வருகின்றனர். சில நாடுகள் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி அளித்துள்ளன.அதனால் பலரும், தங்களுடைய ஓரினச்சேர்க்கை இயல்பை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முன்வருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.அப்படி வெளிப்படுத்திக் கொண்டவர்களில் விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலமானவர்களும் அடங்குவர்.
ஜோகனா சிகுர்தர்தோதிர் என்னும் பெண்மணி ஐஸ்லாந்தின முதல் பெண் பிரதமராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 60 வயதான இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய ஓரினச்சேர்க்கை இயல்பை ஒருபோதும் மறைத்ததில்லை.ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது உலகில் இதுவே முதல்முறை. உலகம் முழுவதும் இவர்களுக்கான அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன.
நம் நாட்டிலும், பெங்களூர், ஈரோடு, சென்னை ஆகிய இடங்களில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இயல்பான காதலுக்கே இன்னும் இடுகாட்டில்தான் தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறது நமது சமூகம். இந்நிலையில் இயற்கைக்கு மாறான உறவு சமூகத்தில் பெரும் அதிர்வுகளையும் அதன் தொடர்ச்சியாக விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக, ஓரினச்சேர்க்கையாளர்கள் 24 மணிநேரமும் உடலுறவு பற்றிய சிந்தனையில்தான் இருப்பார்கள் என்ற தவறான கருத்துக்களும் காணப்படுகின்றன. ஆனால் உண்மை அதுவன்று.
எதிர்பாலின இணைகளைப் போன்று இவர்களும் தங்களின் இணைகளைத் தேர்ந்தெடுப்பதில் பல குணாம்சங்களை அலசி ஆராய்ந்தபின்னரே முடிவெடுக்கின்றனர். ஒத்த கருத்துகள், சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவர்களுக்கிடையிலும் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அறிவியல் அடிப்டையிலான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு இடது கைப்பழக்கம் இருப்பதைப் போல, சிலருக்குத் தங்கள் இனத்தின் மீதுமட்டுமே ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்படுகிறது.இது பெரிய கிரிமினல் குற்றமன்று என்பது பாலியல் மருத்துவர்களின் கருத்து.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆம் பிரிவு ஓரினச்சேர்க்கையைக் கிரிமினல் குற்றம் என்கிறது. அச்சட்டப் பிரிவு பரிந்துரைக்கும் தண்டனை 10 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம். ஓரினச்சேர்க்கையாளர்களும், ஆதரவாளர்களும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி வருகின்றனர். ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனோநிலையே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. திருநங்கைகள் மீதிருந்த பாலியல் அடிப்படையிலான சமூக மனநிலை இப்பொழுது படிப்படியாக மாறிவருகிறது. அவர்களுக்கான உரிமைகள் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களும் பல துறைகளில் இன்று சாதனையாளர்களாக வலம் வருகின்றனர். பால் மாறுபாடோ, தனிப்பட்ட வாழ்க்கை முறைகளோ அவர்களின் திறமைகளைக் குறைத்துவிடவில்லை.
ஓரினச்சேர்க்கை என்பது வியாதியோ, மன்னிப்புக்கு அப்பாற்பட்ட குற்றமோ அல்ல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|