தமிழைக் காணவில்லை
இங்கே இரண்டு தொடர்வண்டிப் பயணச் சீட்டுகளின் நகல் படங்கள் வெளியிடப் பெற்றுள்ளன. ஒன்று கணினியில் அச்சிடப்பெற்ற பயணச்சீட்டு மற்றொன்று கணினி முறை வருவதற்கு முன்னர் அச்சிடப் பெற்றப் பயணச்சீட்டு. இவற்றில் கணினிச் சீட்டில் ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே அச்சிடப் பெற்றுள்ளன. பழைய பயணச்சீட்டில் முதலில் தமிழ், அடுத்து இந்தி, இறுதியில் ஆங்கில மொழிகளில் பெயர்கள் அச்சிடப் பெற்றுள்ளன. இந்த இரு பயணச்சீட்டுகளும் கொடுக்கப்பட்ட நாள் 15.02.09 அன்று. அதாவது தமிழ் அச்சிடப்ப பெற்ற சீட்டு அதிகமாக இருந்ததால் அது தீரும் வரைக் கொடுப்பார்கள். தீர்ந்த பின் தமிழும் தீர்ந்து விடும். பிறகு இந்தியும் ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலநிலை. தமிழ் உணர்வு மிக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நடுவண் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஆ.வேலு அவர்கள் கணினிச் சீட்டில் தமிழைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் ! செய்வாரா அமைச்சர் ?
முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவியைத் தொடர்ந்து தங்களின் தேக்குமரத் தேகங்களைத் தீக்கு இரையாக்கிய தன்மான மறவர்கள்
1. சீர்காழி இரவிச்சந்திரன், காங்கிரஸ்
2. மலேசியா ராஜா
3. மலேசியா ஸ்டிபன் ஜெகனேசன்
4. அமரேசன் வண்ணை
5. ஜோதி (எ) தமிழ்வேந்தன் கடலூர், வி.சி.க.
6. சிவப்பிரகாசம் தரமணி, தி.மு.க
7. கோகுல ரத்தினம், தி.மு.க விருதுநகர்
8. முருகதாசன், லண்டன்
என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியைத் தட்டியயழுப்ப என்னுடைய உயிரை வழங்குகின்றேன் என்று எழுதிவைத்துவிட்டு 12.02.09 அன்று முருகதாசன் ஐ.நா. அவையின் முன்புத் தன் உயிரை தீயிட்டு எரித்துக் கொண்டார். இவர், லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர். இவரின் நீண்ட கடிதத்தில் இருந்து சில பகுதிகள்...
மருத்துவமனைகள் அங்கு பாதுகாப்பானவையாக இல்லை. மருத்துவமனைகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. மருத்துவமனைகளைத் தாக்குவதை சிறீலங்கா அரசே நியாயப்படுத்துகிறது. அவர்கள் தொடர்தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொல்கின்றனர். வன்னியில் பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் அதனால் தாக்குவோம் என்கிறார்கள்.
உங்கள் மொழியில் கேட்கிறேன், பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், சிறார்கள் கொல்லப்படுகிறார்கள், வயிற்றில் இருக்கும் சிசுக்கள் கூடக் கொல்லப்படுகிறார்கள்.அவர்களும் பயங்கரவாதிகளா ?
முருகதாசனின் குரல் உலகத்தின் மனசாட்சியைத் தட்டியயழுப்புமா ?
ஏற்றும் போற்றும்
மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு அவர் விலகியதைச் சிலர் வியப்பாகப் பார்க்கின்றனர். நல்ல தமிழின உணர்வாளரான அவர், இத்தனை காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததுதான் நமக்கு வியப்பாக உள்ளது.
கட்சிப் பதவிகள், அரசுப் பதவிகள் என்று பல்வேறு பொறுப்புகளைப் பெற்றிருக்கமுடியும் என்றாலும், அவைகளுக்காக ஏங்கிக் கிடக்காமல், ஈழத்தமிழர்கள் போராட்டத்தை நெஞ்சில் நிறுத்தி, காங்கிரசை விட்டு வெளியேறி உள்ள தமிழருவி மணியனை இனி என்றும் தமிழ்ச் சமூகம் ஏற்றிப் போற்றும்.
உலக அரங்கில் ஒலித்தது தமிழ்
தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ‘ஆஸ்கார் விருது’ என்பது, திரையுலகக் கலைஞர்களின் நெடுநாள் கனவு. நீண்டதோர் ஆசை. இந்தியாவிலேயே சத்தியஜித்ரேயும், இன்னொருவரும்தான் அவ்விருதைப் பெற்றுள்ளனர். இப்போது ஏ.ஆர்.ரகுமான். அதுவும் ஒரே ஆண்டில் இரண்டு விருதுகள்.
ஆஸ்கார் விருது பெற்ற முதல் தமிழனை நாம் நெஞ்சார வாழ்த்துகின்றோம். நன்றி கூற மேடை ஏறிய ஏ.ஆர்.ரகுமான், “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் கூறியுள்ளார்.
அடடா...உலக அரங்கில் ஒலித்தது தமிழ்! அதற்காக இன்னொரு முறை அவரை வாழ்த்தி மகிழ்கின்றோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|