வானிலும் புலியின் சீற்றம்
இனியன்
முல்லைத் தீவிலே முடக்கி விட்டோம் என்று, சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தபோதுதான், கொழும்பிலேயே போய்க் குண்டு வீசியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள். எல்லா ஓடு பாதைகளையும் கைப்பற்றி விட்டதாய் இந்திய ஏடுகளும் எழுதித் தீர்த்தன. ஆனால் ஓடு பாதை இல்லாமல் கூட ஒரு விமானத்தை இயக்க முடியும் என்னும் புதிய தொழில்நுட்பத்தை பூமிக்குச் சொல்லியுள்ளனர் அந்தப் போராளிகள்.
கடந்த 20 ஆம் தேதி இரவு, கொழும்பு மாநகரமே இருளில் மூழ்கியது. துறைமுகத்திலும், இராணுவத் தளத்திலும், வருவாய்த்துறை அலுவலகக் கட்டிடத்தின் மீதும் புலிகள் வீசிய குண்டுகள் குறிதவறாமல் தன் இலக்கை எட்டியுள்ளன. உலகம் முழுவதும் இச்செய்தி பரவிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டது சிங்கள அரசு.
ஒரு வேளை இந்தியா வழங்கிய ராடார் காலம் கடந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அப்படியயல்லாம் எதுவும் நடக்கவில்லை.அந்த விமானத்தை இயக்கிய கேணல் ரூபன், லெப்டினன்ட் கேணல் சிரித்திரன் ஆகிய இருவருமே வான் கரும்புலிகள் என்பதால்,திட்டமிட்டு விமானத்தை அவர்களே மோதி உடைத்திருக்கின்றனர்.
இரண்டு விமானங்கள் வந்ததாகவும், இரண்டையும் வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இன்னொருவரோ, ஒன்றைத் தகர்த்து விட்டோம், இன்னொன்று தப்பிவிட்டது என்கிறார். வந்த விமானம் எத்தனை, சென்ற விமானம் எத்தனை என்கின்ற கணக்கு எதுவும் அவர்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.
மோதி விழுந்து கிடந்த விமானம் எங்கே உருவாக்கப்பட்டது என்பதில் கூட, இலங்கை அரசு இரண்டு கருத்துகளை வெளியிட்டுள்ளது. செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட 143 போர் ரக விமானம் என்கிறார் ஒருவர். இல்லையில்லை, அவர்களே சொந்தமாகத் தயாரித்தது போலத் தெரிகிறது என்கிறார் இன்னொருவர். இலங்கை அரசால், வெளிநாடுகளிலிருந்து விமானங்களை விலைக்கும், கடனுக்கும், இலவசமாகவும் வாங்க முடிகிறதென்றால்,விடுதலைப்புலிகளால் சொந்தமாகவே தயாரிக்கவும் முடிகிறது என்ற செய்தி அவர்கள் மூலமே வெளிப்பட்டுள்ளது.
புலிகள் முதன் முதலில், மாவீரர் கல்லறையில் பூக்களைத் தூவுவதற்கு மட்டுமே விமானங்களைப் பயன்படுத்தினர். அது 1999. அப்போதுதான் புலிகளிடம் விமானங்களும் உள்ளன என்பதை உலகம் அறிந்தது. எனினும் 2007 ஆம் ஆண்டு வரை, போர் விமானங்கள் எதனையும் புலிகள் பயன்படுத்தவில்லை. எட்டு ஆண்டுகள் அவர்கள் மெளனமாகவே இருந்தனர். 23.04.2007 இல்தான் பலாலி விமானத் தளத்தின் மீது அவர்கள் முதல் விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்துடுத்துத் தொடர்ச்சியான தாக்குதல்கள். 2007,2008 ஆண்டுகளில் மட்டும் ஒன்பது முறை விமானங்களின் மூலம் குண்டுகளை வீசி, சிங்கள அரசை நிலை குலையச் செய்துள்ளனர்.
இப்போது அவர்கள் நடத்தியுள்ளது 10 ஆவது முறை. இன்று வரை அவர்கள் இலக்குகள் தப்பவே இல்லை. இன்னொரு மிக முக்கியமான செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசு ஒவ்வொரு முறையும் மக்களைக் குறிவைத்தே குண்டுகளை வீசுகிறது. குடியிருப்புகள், மருத்துவமனைகள், முதியோர்இல்லம், குழந்தைகள் காப்பகம் ஆகியனவே சிங்கள அரசு விமானங்கள் தொடர்ந்து குண்டு போடும் இடங்களாக உள்ளன.
ஆனால், நேர் எதிராக, விடுதலைப்புலிகளின் குண்டு வீச்சு, ஒரு முறை கூட மக்களைப் பாதிக்கும் வகையில் அமையவில்லை.இராணுவத் தளங்கள், பொருளாதார மையங்கள்,விமான நிலையங்கள் என்பன மீதுதான் தாக்குதல் நடத்தப் பெற்றுள்ளது. இருவருக்குமான வேறுபாடு இங்குதான் உள்ளது. புலிகள் தற்காப்புப் போர் நடத்துகின்றனர், சிங்கள அரசு இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|