Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மார்ச் 2009

பட்டினப்பாலையில் அறிவியல் செய்தி
எழில்.இளங்கோவன்

Paradox பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகியவை சங்க இலக்கியங்கள். அகம், புறம் பற்றிய எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகையாகவும், அறம், ஒழுக்க நெறிகள் பற்றிப் பேசும் பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெண்கீழ்க் கணக்காகவும், பாட்டுடைத்தலைவனை முன்நிறுத்தி நாடு, நகரம், தமிழர்களின் வாழ்வியல், போர்கள், வெற்றிகள் போன்ற வரலாற்றுச் செய்திகளைக் கூறும் பத்து நூல்களின் தொகுப்பு பத்துப் பாட்டாகவும் வகைப்படுத்தி உள்ளார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.

இவற்றுள் பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாம் பாடலாக அமைந்துள்ளது பட்டினப்பாலை. இந்நூலின் பாட்டுடைத்தலைவன் கரிகால்வளவன். இச்சோழப் பேரரசனின் இயற்பெயர் திருமாவளவன். பட்டினப்பாலை என்ற அருமையான நூலை 301 வரிகளில் பாடிமுடித்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணணாருக்குப் பதினாறு நூறாயிரம் கழஞ்சு பொன் பரிசாகக் கொடுத்தான் மாமன்னன் திருமாவளவன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது.

இதை ஒட்டக்கூத்தரின் பிள்ளைத் தமிழும், சுந்தர சோழன் உலாவும், தமிழ்விடு தூதும் உறுதி செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பட்டினப்பாலையில் வியத்தகு செய்திகள் நிறையவே பொதிந்து கிடக்கின்றன. பட்டினப்பாலை நூலைத் தொடங்கும் போதே காவிரி ஆற்றின் சிறப்பைச் சொல்ல முனைகிறார் புலவர்.,

“வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

...........................................

வான்பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி” ( 1- 6 )

அதாவது வானம் வரண்டு, மழை பெய்யாமல் பொய்த்துப் போனாலும் கூட, மலைகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீர் காவிரியில் பாய்ந்து கடலில் சேரும் என்கிறார் புலவர். மழை எப்போது பொய்க்கும் ? புலவர் சொல்கிறார், வெள்ளி என்ற கோள் திசைமாறினால் மழை பெய்வது பொய்த்துப்போகும். எப்படி?

வானில் உள்ள ஒன்பது கோள்களுள் ஒன்று வெள்ளி. இதைச் சுக்கிரன் என்பார்கள். இந்த வெள்ளி என்ற கோள் வடக்குப்பக்கம் இருக்கும். இது வடக்கில் இருந்து தென்திசைக்கு நகர்ந்து சென்றால், அக்கோள் அங்கிருக்கும் வரை மழை பெய்யாமல் வானம் வரண்டு பொய்த்துவிடும். இது அறிவியல் கூறும் செய்தி.

இந்த அறிவியல் செய்தியை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சொல்லிவிட்டார் என்பது வியப்பில்லையா ? அது மட்டுமல்ல ! இச்செய்தியை உறுதிசெய்ய,

“கோள்நிலை திரிந்து கோடை நீடினும்”

என்று மணிமேகலையும்,

“கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

காவிரி புதுநீர் கடுவரல் வாய்த்தலை”

என்று சிலப்பதிகாரமும்,

“இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

அந்தன் காவிரி வந்துகலர் பூட்ட”

என்று புறநானூறும் கூறுவது தமிழரின்

அறிவியல் மாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதுபோல,

இன்னொரு அறிவியல் செய்தியையும் பட்டினப்பாலையில் பேசுகிறார் புலவர்.

“மதிசேர்ந்த மகவெண்மீன்

உருகெழுதிறல் உயர்கோட்டத்து”

என்பது பாடலின் வரிகள்.

மதி என்றால் நிலவு. மகம் என்பதை மக நட்சத்திரம் என்பார்கள். உண்மையில் அது வெள்ளை நிறமுடைய ஒருகோள். இக்கோள் எப்படி இருக்கிறதாம். உவமிக்கிறார் புலவர். அதாவது முடநுகம் போன்ற உருவமுடையதாம். நுகம் என்றால் நுகத்தடி.

மழை இல்லாத காலங்களில் நிலவுடன் தோன்றும் மக வெண்மீனாகிய மக நட்சத்திரம், ஒரு நுகத்தடியைப் போல இருப்பதாகக் கூறும் புலவரின் வானியல் அறிவு எத்தகையது என்பதைப் பட்டினப்பாலையின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இவை மட்டுமல்ல! இன்னமும் நிறையவே இதுபோன்ற செய்திகள் பட்டினப்பாலையில் பரந்து கிடக்கின்றன !



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.