அழிவின் விளிம்பில் 5 இலட்சம் தமிழர்கள் - தொல்.திருமாவளவன் சாகும்வரை பட்டினிப் போராட்டம்
அடுத்தவன் தேசத்தில் அரை அங்குலம் கூடக் கேட்கவில்லை. இன்னொரு இனத்தை அழித்து ஒழித்து ஆதிக்கம் செய்ய நினைக்கவில்லை. தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழ விரும்பும் ஓர் இனத்தை, உலக வல்லரசு நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து கொல்ல நினைக்கும் கொடூரம்தான், இன்று ஈழத்தில் அரங்கேறிக் கொண்டுள்ளது.
கூட்டம் போட்டோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம், ஊர்வலம் போனோம், மழையில் நனைந்து மனிதச் சங்கிலியாய் அணி வகுத்தோம், சட்டமன்றத்தில் ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றினோம், முதலமைச்சர் தலைமையில் பல கட்சித் தலைவர்கள் தில்லி சென்று பிரதமiரைச் சந்தித்தோம்- எதற்கும் இன்றுவரை அசைந்து கொடுக்கவில்லை, இந்திய அரசு. இறுதியாய்ச் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சனவரி 15 முதல் அமர்ந்துள்ளார். ஈழத் தழிழரை அழித்தே தீருவது என்று உலக நாடுகள் முடிவெடுக்குமானால், இந்தத் தமிழரையும் சேர்த்தே அழித்துவிட்டுப் போங்கள் என்னும் நிலைக்கே நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
முதலமைச்சர் தலைமையில் வேண்டுகோள் விடுத்து ஒரு மாதம் கடந்த பின்னரும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவில்லை. மாறாக, கிரிக்கெட் விளையாடும் அணியை அங்கு அனுப்புகின்றனர். கிரிக்கெட் விளையாடவில்லை. தமிழின உணர்வோடு இந்திய அரசு விளையாடுகிறது. சிவசங்கர மேனன் இலங்கைக்கு வருவது, போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக இல்லை என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே கூறுகின்றார். இந்திய அரசு அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.
இந்தச் சூழலில்தான் திருமாவளவன் இப்படி ஓர் அதிரடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் பட்டினிப் போராட்டத் திடலில் கூடி நிற்கின்றனர். உலகத் தமிழ் மக்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையில் உறைந்து கிடக்கின்றனர். இங்கிலாந்து பிரதமர் பிரவுன், இலங்கையில் உடனே போர்நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி விடுத்துள்ள அறிக்கை சற்று ஆறுதலாக உள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி ஏற்கவுள்ள ஒபாமா, முதல் நாளே மத்திய கிழக்குச் சிக்கலில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளார். நல்லது, பாலத்தீன மக்களும் அழிவின் விளிம்பில்தான் உள்ளனர். அவர்கள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டியவர்களே. அதே நேரம், ஈழ மக்களின் உயிர் மட்டும் உயிர் இல்லையா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. பதவியேற்ற முதல்நாள் மத்திய கிழக்கு சிக்கலில் கவனம் செலுத்தப்போகும் அதிபர் ஒபாமா, இரண்டாவது நாளிலாவது, ஈழம் குறித்தும் எண்ணத்தைச் செலுத்த வேண்டும் என்பது நம் விருப்பம்.
இந்திய அரசே, இனவெறிப் போரை உடனே நிறுத்து, சமாதானப் பேச்சு வார்த்தை நடத்து என்னும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துத் தொல்.திருமாவளவன் தன் பட்டினி அறப்போரைத் தொடங்கியுள்ளார். இரண்டுமே மிக நியாயமான கோரிக்கைகள் என்பதை உலகறியும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்ககையும், உலகெங்கும வாழும் தமிழர்களின் கோரிக்கையும் அதுதான். எனவே அக்கோரிக்கை நிறைவேற அனைவரும் துணைநிற்போம். ஈழத்தில் அமைதி திரும்பட்டும். கொடுங்கோலர் போர்வெறி தீரட்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|