‘பொங்கல்’
உனக்கொரு கேடா?
கவிச்சுடர் கவிதைப்பித்தன்
சுற்றிப் பகைசூழ்ந்து நின்றும ;- அதைச்
சூறை யாடிக்களம் வென்றும்
வெற்றி படைத்ததுவும் பொய்யா? - பகை
விருந்துக்கு நம் கால், கையா?
சிற்றில் சிதைந்தழிதல் போலே - தமிழ்த்
தீரர் புலிக்கொடியின் தேசம்
முற்றும் அழிந்துவரல் மெய்யா? - இங்கு
முந்திரிப் பருப்போடு நெய்யா?
போடும் நடையினிற் பீடா? - சதை
போர்த்திய வெறும்பிணக் கூடா?
ஓடும் குருதியிற் சூடா? - உன்
உடம்பினிற் சாக்கடை யோடா?
சாடும் சிங்களர்ப் பிடியில ; -நம்
தமிழினம் வதையுறக் கண்டும்
ஆடா தோ தசை?ஏடா! - தமிழ்
அன்னையின் பிள்ளைநீ யோடா?
ஈடா?இத்துயர்க் கீடா? - தமிழ்
இனம் அழி வதும்கண் கூடா?
ஆடா?இல்லை அடி மாடா? - நாம்
ஆண்ட இலங்கை மண் மேடா?
நாடா?தமிழகம் காடா?-’சில
நரிகளும்”வசித்திடும் வீடா?
போடா! இழிதகை மூடா!-அட
‘பொங்கல’; உனக்கொரு கேடா?!
-கவிச்சுடர் கவிதைப்பித்தன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|