ஆர்ப்பரிப்போம் ஈழத்தை அங்கீகரிப்போம்
ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. நாடு விடுதலை பெறுவதும், அதனை உலக நாடுகள் ஏற்பளிப்பு (அங்கீகாரம்) செய்வதும் என்பன அவை. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதலானவற்றிற்கு பல நாடுகளின் ஏற்பளிப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே கிடைத்துவிட்டது. ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பு அழைப்பாளராகக் கூட அழைக்கப்பட்ட பெருமிதம் கிடைத்தது. ஆனால் ஈழத்துப் போராளிகளுக்கு மட்டும், பெரும்பகுதி நிலத்தைத் தங்கள் கைவசப்படுத்திய பின்னும் கூட, உலக நாடுகளில் ஒன்றுகூட இன்றுவரை ஏற்பளிப்பைத் தரவில்லை.
அதுமட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் தடையும் விதித்துள்ளன. அந்த இயக்கம் எந்த மண்ணில் உருவானதோ, எந்த மண்ணில் இயங்குகிறதோ அந்த சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்படவில்லை என்பது விந்தையிலும் விந்தை. 2002ஆம் ஆண்டே அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது. இப்போதுதான் ராஜபக்சே தன் முப்படைத் தளபதிகளோடு தடைசெய்வது குறித்து விவாதம் நடத்துகிறாராம். எல்லாம் கோமாளிக் கூத்தாய் இருக்கிறது.
இந்தச் சூழலில், மத்திய அரசு பின்னே வரட்டும், மக்கள் நாங்கள் முன்னே செல்கிறோம் என்பது போல, 26.12.2008 அன்று, சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தமிழீழ அங்கீகார மாநாடு ஒன்றை நடத்தியது. சென்னையிலே மேடை, செங்கல்பட்டு வரை மக்கள் என்று மலைக்க வைக்கும் வகையில் மாபெரும் திரளாய் மக்கள் அங்கே திரண்டிருந்தனர். 80 விழுக்காட்டிற்கும் மேல் இளைஞர்களே அங்கு கூடி நின்றனர் என்பது இன்னொரு பெருமிதம். ஒரு நாட்டின் விடுதலையை இன்னொரு நாட்டு மக்கள் ஏற்பளிப்புச் செய்வது என்பது போற்றப்பட வேண்டிய புதிய வரலாறு. அவ்வரலாற்றைப் படைத்துக்காட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டுள்ளது.
இறையாண்மை என்பது மக்களைச் சார்ந்தது என்பதே அரசியல் உண்மை. அந்த அடிப்படையிலேதான் மேற்கு சகாரா, கிழக்குத் தீமோர், மாண்டிநீக்ரோ போன்ற நாடுகள் பல விடுதலை பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் முன்னிலையிலேயே கருத்துக் கணிப்பு நடத்தப்பெற்று, வெறும் 55.5 விழுக்காடு ஆதரவை மட்டுமே பெற்ற மாண்டிநீக்ரோ 2006 சூன் மாதம் தனிநாடு என்று அறிவிக்கப்பட்டது.
மற்ற தேசிய இனங்களுக்கெல்லாம் பொருந்தும் நீதி, தமிழினத்திற்கு மட்டும் ஏன் பொருந்தாது? இந்தக் கேள்வியை இன்று நாம் கேட்கிறோம். நாளை உலகம் கேட்கட்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|