இளைய தலைமுறையின் வழிகாட்டி
இரா. உமா
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையட்டி அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றினை குறுந்தகடு வடிவில் நக்கீரன் வெளியிட்டுள்ளது. படத்தின் பெயர் ‘‘அண்ணா - பெருங்கடலிலிருந்து சில துளிகள் .....’’.
அண்ணாவின் இலட்சிய விளக்கத்துடன் படம் தொடங்குகிறது. ஜனநாயக வழியில், நீதியான நல்லாட்சியை வழங்கிடத் தம்பிகளின் துணையை, ஆதரவை வேண்டுகிறது, கனிவுடன் கூடிய கரகரப்பான குரல்.
ஆர்ப்பரிக்கும் அலைகடலோரம் அமைதியாய் ஒவ்வெடுக்கும் அவரது நினைவிடத்திலிருந்து காட்சி விரிகிறது. அவர் பெயரைப் பெருமையுடன் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றோடு அவற்றில் பயிலும் மாணவர்களின் அண்ணா குறித்த கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காஞ்சியில் அண்ணா பிறந்த வீடு, பெற்றோரின் நிழற் படங்கள், அவரது உயிரனைய தொத்தாவின் நிழற்படம், அவர் படித்த பள்ளி, கல்லூரி போன்றவை அவரது இளம் வயதுப் பதிவுகளாகக் காட்டப்படுகின்றன. பெரியாருடனான முதல் சந்திப்பு தொடங்கி, அண்ணாவின் இலக்கியம், நாடகம், ஆங்கிலப்புலமை, பொது உடைமைச் சிந்தனை, தி.க.விலிருந்து பிரிந்தது வரை அண்ணாவின் இயக்கத் தொண்டு சான்றாக்கப்பட்டுள்ளது.
அவரது மனித நேயத்தின் ஒரு துளியாக, ராணடேயின் விடுதலைக்காகப் போப்பிடம் வேண்டுகோள் வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், முதல்வராக ஆனபோதும் அண்ணா கட்சி பேதம் பார்த்ததில்லை என்பதற்கு, காமராஜ், நேதாஜி, இந்திராவுடனான புகைப்படங்கள் சாட்சியாகின்றன.
1967 தேர்தலில் வென்று, வெற்றிவாகை சூடித் தன் தம்பிகளின் அன்பு வெள்ளத்தில் சாரட்டில் அமர்ந்து நீந்திவரும் அண்ணாவின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்! சிகிச்சை முடிந்து அண்ணா கலந்து கொண்ட இறுதி நிகழ்வு கலைவாணர் சிலை திறப்பு. அந்தக் காட்சியில் விடுவிடுவென அவர் நடந்து வரும் வேகத்தைக் காணும்போது, அணையப் போகும் விளக்கின் பிரகாசமோ என்று எண்ணி நெஞ்சம் கனக்கிறது.
அடுத்த காட்சியில் ஓய்வறியா அந்த உத்தமத் தலைவன் காலை நீட்டி அமைதியாக உறங்குகிறான். எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்த அவரது தம்பிகள், அவருடைய உடலைக் கண்டு அடக்க முடியாமல் கதறி அழும் காட்சி, காலங்கள் கடந்தும் கண்ணீர் விட வைக்கிறது. வாயிலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழும் மக்களைப் பார்க்கும் போது, தமிழகத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பு அது எனப் புரிகிறது.
இயக்குனர் கோவி.லெனின் காட்சிகளைத் தொய்வின்றி கோத்துள்ள நேர்த்தி, புதிதாக அண்ணாவை அறிந்து கொள்பவர்கள் கூட, எளிதில் விளங்கிக் கொள்ளும்படி அமைந்துள்ளது.
திரு.இராமநாதனின் தெள்ளத் தெளிவான குரலும், காட்சிக்கான விளக்கத்தை நிறுத்தி நிதானமாகக் கூறும் அழகும் பாராட்டிற்குரியது. பின்னணிக் குரலின் குரல்வளையை நெரிக்காத மென்மையான இசை திரு.கதிரவனுடையது.
அண்ணாவின் வாழ்நாள் குறுகியதாயினும் அவரது செயல்கள் கடலளவாகும். 45 நிமிடங்களில் அவரது வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் (துளியளவு) தொட்டுக் காட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். இதில் இடம்பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் அண்ணா பற்றிய கருத்துப்பதிவு, இன்னும் , இளைய தலைமுறையிடம் அண்ணா முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தப் படம் அந்தப் பணியைச் செய்யும் என்பது உறுதி.
இதில் இன்னும் ஒரு பதிவினைச் சேர்த்திருக்கலாம். அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பேட்டிகளையும் இடைஇடையே பதிவு செய்திருந்தால், அண்ணாவைத் தேடப் புறப்படும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுவதாக அமையும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|