வரலாறு திரும்பிவிட்டது
இரா. உமா
சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை இனி அரசே ஏற்று நடத்தும் என்று 02.02.2009, திங்கள் கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தில்லை வாழ் தீட்சிதர்களின் நாட்டாமைக்கு இத்தீர்ப்பு முடிவுரை எழுதியுள்ளது.
1925 ஆம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சியில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. பல கோயில்களின் நிர்வாகம் முழுவதும் அறநிலையத் துறையின் கைகளுக்கு வந்தன. அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில கோயில்களில், சிதம்பரம் நடராஜர் கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சோழர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், இடையில் ஒரு நூறு தீட்சிதர்களை மட்டுமே கொண்ட சிறு கும்பலிடம் கைமாறிப் போனது. அதுவரை அக்கோயிலில் ஆட்சிபுரிந்து வந்த அன்னைத் தமிழ் தெருவில் தூக்கி எறியப்பட்டது. தேவாரம் பாடத் தடை விதித்தனர் தீட்சிதர்கள்.
1987 ஆம் ஆண்டு, இக்கோயிலுக்கு ஒரு செயல்அதிகாரியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த நியமனத்தை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்குகளைத் தொடுத்தனர். தடை உத்தரவு பெற்றனர். இந்தத் தடையை நீக்கக் கோரி, தமிழக அரசும், சிவனடியார் ஆறுமுகச் சாமியும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் மீது கடந்த திங்கள் கிழமை சிறப்பானதொரு தீர்ப்பினை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி வழங்கியுள்ளார்.
தமிழைத் தீட்டு எனச் சொன்ன தீட்சிதர்களின் ‘திருட்டுத்தனம்’ அம்பலமாகியுள்ளது. கோயில் நிர்வாகத்தில் முறை கேடுகள் நடந்துள்ளன என்றும், ஏராளமான சொத்துக்களைக் கொண்ட கோயிலின் கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். 02.02.2009 அன்று இரவே கோயில் நிர்வாகத்தை அரசு கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. செயல் அதிகாரியாகத் திரு. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
84 வயதான சிவனடியார் ஆறுமுகச்சாமி இத்தீர்ப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழக அரசுக்குத் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நந்தனை எரித்த தீயின் மிச்சத்தில், தமிழையும், தமிழில் தேவாரம் ஓதும் ஆறுமுகச்சாமியையும் எரிக்கத் துடித்தது தீட்சிதர் கூட்டம். ஆனால் வரலாறு திரும்பிவிட்டது. இந்த முறை ஜோதியில் எரிந்தது ‘தீட்சிதர்களின் திமிர்’
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|