ஈழத்தமிழரா....? இலங்கைத் தமிழரா....?
ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது, இலங்கைத் தமிழர் என்றே கூற வேண்டும் என்கிறார் ஜெயலலிதா, இப்போது உருவாகியுள்ள புதிய அமைப்புகளுக்கும் ஈழத்தமிழர் என்றில்லாமல், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நல உரிமைப் பேரவை என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இலங்கை என்பதை விட, ஈழம் என்பதே பழமையான சொல். புறநானூற்றுப் புலவர் ஒருவரின் பெயர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பது. பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில் ‘ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்’ என்று ஒரு வரி உள்ளது. முக்கூடற்பள்ளு, மழை வரும் செய்தியை, ‘மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே’ என்று கூறுகிறது.
ஈழத்தமிழர் என்று சொல்வதற்கு என்ன தடை நமக்கு ?
எல்லை
சொந்த நாட்டுக்குள்ளேயே எல்லைக் கோட்டை ஏற்படுத்துகிற அரசு, நல்லரசாக இருக்க வாய்ப்பே இல்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றித் தமிழர்களின் எல்லையைத் தீர்மானித்துவிட்டோம் என்கிறது சிங்கள ராணுவம். இனி வரும் காலங்களில், மொத்த இலங்கையும் தமிழர்களின் வசமாகும்; அப்போது தமிழனின் வீரத்துக்கும் ஆற்றலுக்கும் எல்லையே கிடையாது என்பதை உலகம் மறுபடி உணரும்.
-கவிஞர் யுகபாரதி
(நன்றி: ஆனந்த விகடன்)
பரம்பரைத் தொழில்
இலங்கைத் தமிழருக்காக மனிதச் சங்கிலின்னு ஒன்னு நடந்தது. இந்த மாதிரி தமாஷ் எல்லாம் அப்பப்போ நடக்கும். ஒருத்தன் கைய இன்னொருத்தன் புடிச்சிக்கிட்டு நிக்கிறது. அது வேற ஒன்னுமில்லே....பக்கத்தில நிக்கிறவன், நம்ம பாக்கெட்ல கைய விட்டுப் பர்ஸை எடுத்திறக் கூடாது பாருங்க, அதுக்குத்தான்
-துக்ளக் சோ, 14.01.2009 துக்ளக் ஆண்டுவிழாவில் (ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது)
என்ன செய்வது...அவரவர் தொழில் அவரவர்க்கு நினைவு வரும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|