பொதிகை தொலைக்காட்சி இப்படி செய்யலாமா?
பொன்.ஏழுமலை
சாதியாலும், மதத்தாலும் நாம் இழந்த உயிர்களும், உரிமைகளும் அநேகம். இதற்காக நம் முன்னோர்கள் தொடங்கிய போராட்டங்கள் இன்று வரை நீடிக்கின்றன. இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு எல்லாம் ஒரு முடிவினைக் காணவேண்டும் என்ற நோக்கில் சமூக நலம் விரும்பும் இயக்கங்கள் பல போராடி வருகின்றன. இந்நிலையில் கடந்த 5.11.2007 திங்கள்கிழமை காலை 6.30 - 6.45 மணியளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர் ஆற்றிய “ஆன்மீக உரை” இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான ‘சமத்துவம்’ என்னும் பதத்தையே கேள்விக் குறியாக்குகின்ற விதத்தில் அமைந்திருந்தது. அந்த ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ பின்வருமாறு
(அ) சாதி தர்மம், குலதர்மம் காக்கப்படவேண்டும், கடைபிடிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் இந்து சமுதாயம் சிறக்கும், நாடு செழிக்கும்.
(ஆ) ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தர்மம் உள்ளது,
ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தர்மம் உள்ளது எடுத்துக்காட்டாக,
1) நமது உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்தால்தான் உடல் ஒழுங்காக இயங்க முடியும். நமது கையில் 5 விரல்கள் உள்ளன, அவை அளவில் மாறுபட்டிருக்கின்றன. செயல்பாட்டில் வேறுபட்டிருக்கின்றன. அப்படி இருப்பதனால்தான் கை செம்மையாக இயங்க முடிகிறது.
2) கால்பந்தாட்டத்தில் (Foot Ball), “Goal keeper” Goal Post இல் இருந்து ஆடவேண்டும். அவர் நடுப்பகுதிக்குச் சென்று ஆடக்கூடாது. அதுபோல் அவ்வாட்டத்தில் பல நிலைக்கு உரிய ஆட்டக்காரர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அதன்படிதான் ஆட முயலவேண்டும். மாறுபட்டு விளையாட முனையக்கூடாது.
இப்படிப் போகும் இவருடைய பேச்சு மனுதர்மத்தையும், குலதர்மத்தையும் தூக்கிப்பிடிப்பதாக உள்ளதேயன்றி, மனித தர்மத்தை, மனிதர்களின் சமத்துவத்தை ஒருசிறிதும் கருத்தில் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஒருசார்பான கருத்துக்களை அதிலும் இந்திய அரசியல் சட்டப்படிக் குற்றமாகக் கருதப்பட வேண்டிய பேச்சினை, நடுவண் அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. எனவே இதுகுறித்து தகுந்த விளக்கம் வேண்டும் என்று அத்தொலைக்காட்சியின் இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இக்கடிதம் கிடைத்து 15 நாட்களுக்குள் முறையான, தெளிவான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்றால், பொதிகைத் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும், பிற்போக்குத்தனமான கருத்துகளைத் தெரிவித்த அச்சொற்பொழிவாளரின் மீதும் வழக்குத் தொடருவேன். மேலும், ஒளிப்பரப்பப்பட்ட கருத்துகள் குற்றமுடையது என்று நிர்வாகம் ஏற்கும் பட்சத்தில் அதனைத் தெரிவித்தவரின் வாய்மொழியாலேயே வருத்தம் தெரிவித்தலே சரியானதாகும்.
எனவே, அறிவுப்பூர்வமான உண்மைகளின் அடிப்படையால், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுதான் அரசுத் தொலைக்காட்சி இயங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறேன். இதைப் போன்ற அடிப்படை உரிமை மீறல்கள் எங்கே, எந்த விதத்தில் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க ஒவ்வொருவரும் தைரியமாக முன்வரவேண்டும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|