சுபவீ விடைகள்
* பா.ம.க.விலிருந்து சி.ஆர். பாஸ்கரன், தே.மு.தி.க.விற்கு மாறியிருப்பது குறித்து...? - இளஞ்செழியன், பண்ருட்டி.
இதனால் பா.ம.க.விற்கு நட்டமும் இல்லை, தே.மு.தி.க.விற்கு இலாபமும் இல்லை.
* வைகோவின் அரசியல் இப்போது எவ்வாறு உள்ளது? - அ.தமிழ்க்குமரன், ஈரோடு.
தமிழக அரசியலில் அவரது நிலைப்பாடு பிழையானது. தமிழீழ அரசியலில் அவரது நிலைப்பாடு சரியானது. எனினும், கலைஞரைத் தமிழீழ மக்களின் எதிரியாகக் காட்ட முயல்வது, ஈழ மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்துக் கலைஞர் எழுதிய கவிதை, மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது என்று இயக்கப் பொறுப்பாளர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். ஈழ மக்களும் அவ்வாறே கருதுகின்றனர். கலைஞர் தங்கள் மீது பரிவோடு இருக்கிறார் என்ற நிலைதான் தங்களுக்கு நல்லது என்று தமிழீழ மக்கள் எண்ணுகின்றனர். எனவே கலைஞர் குறித்த வைகோவின் நிலைப்பாடு, அந்த மக்களுக்குக் கெடுதல் செய்வதாகவே முடியும்.
* தமிழக மக்களிடம் மேலோங்கி நிற்பது, தமிழ்ப் பண்பாடா, இந்துப் பண்பாடா? - இரா.புவனா, இடைப்பாடி.
இரண்டையும் தாண்டி, சாதியப் பண்பாடே இங்கு மேலோங்கி நிற்கிறது. சாதிய உணர்வுகள் தகர்க்கப்படாத வரை, மொழியுணர்வு மேம்பட வாய்ப்பில்லை. ‘சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று’ என்பதே சரியானது.
* சேதுக்கால்வாய்த் திட்ட ஊர்திப் பயணம் எங்கள் ஊருக்கு வந்தபோது, உங்கள் மாத இதழை வாங்கினேன். அத்திட்டம் பற்றி மத்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்?
- உ. சண்முகநாதன், புளியால், சிவகங்கை மாவட்டம்.
வரும் டிசம்பரில், குஜராத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் மௌனம் கலையலாம்.
* தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பற்றியும், காவல்துறையின் ‘ஈரல்’ குறித்தும் டாக்டர் இராமதாஸ் வெளிப்படுத்தியுள்ள கவலை நியாயம்தானே?
- டி.பி.துரை, சென்னை-18.
நியாயம்தான். ஆனால் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கலவரம் குறித்தும், மயூரா ஜெயக்குமாரை விஷ்ணு பிரசாத் குழுவினர் தாக்கியிருப்பார்களா என்பது குறித்தும் கேட்கப்பட்டபோது “அது எல்லாம் சகஜம்தான். எல்லாக் கட்சியிலும் உள்கட்சிச் சண்டை இருக்கத்தானே செய்கிறது” என்று கூறியுள்ளதுதான், சற்று நெருடலாக உள்ளது.
* தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதுவது தேசத் துரோகம் என்றால், வைகோ இரங்கல் தெரிவித்துள்ளது சரியா என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, வைகோ என்ன முதலமைச்சராகவா இருக்கிறார் என்று திருப்பிக் கேட்டிருக்கிறாரே...?
- தென்தமிழ்நாடன், திருவண்ணாமலை.
ஓ... முதலமைச்சரைத் தவிர மற்ற அனைவரும் தேசத் துரோகிகளாக இருக்கலாம் என்கிறாரா ஜெயலலிதா. கொஞ்சம் பொறுங்கள்... யார் தேசத் துரோகி என்பதைக் காலம் சொல்லும்.
* வரும் தேர்தலில் விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவார்களா?
- காளமேகம், அருப்புக்கோட்டை.
வரும் தேர்தல், நடிகர் சங்கத்திற்கா?
* விஜய் டி.வி. யில் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராசி பலனை நம்பக் கூடாது என்கிறீர்களா? - உமாராணி, பெங்களூரு-20.
நீங்கள் உங்களை நம்ப வேண்டும் என்கிறேன்.
* உங்களுக்குப் பிடித்த இசைப்பாடல் ஒன்று சொல்லுங்களேன். - செந்தூரன், அண்ணாநகர், சென்னை-40.
தமிழீழக் கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை அவலத்தைச் சொல்லும், புதுவை இரத்தினதுரையின் பாடல். “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல்/வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” என்று தொடங்கும்,
“ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே
காரிருட்டில் படகெடுத்துப் போவோம் - நேவி
கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்.
பேருமின்றி ஊருமின்றிப் பெற்றவளின் முத்தமின்றி
ஈரவுடல் கரையதுங்கும் காலை - புலி
இந்தநிலை மாற்றிடுவான் நாளை”
என அந்தப் பாடல் தொடரும் போது, கல் நெஞ்சும் கரையும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|