பழவீரர் மறைவு பேரிழப்பு
மொழி ஆய்வு மேம்பாட்டு நிறுவனத் தோற்றுநர் திரு. பழவீரர் (வயது 54) கடந்த 01-09-2007 காரிக்கிழமை இரவு 10:10 மணிக்கு சாலை நேர்ச்சியில் காலமானார். கெடா பாலிங்கிலிருந்து பெங்கலான் உலுவில் உள்ள தமது இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்த மகிழுந்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பாலிங் மருத்துமனையில் காலமானார்.
பெங்கலான் உலு நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பழவீரர் பணியாற்றினார். மலேசியத் திராவிடர் கழகத்தின் செலாமா கிளையின் செயலராக விளங்கி பின்னர் பாவலர் அ.பு. திருமாலனாருக்கு துணையாக இருந்து மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியப் பொதுச் செயலராக பழவீரர் 20 ஆண்டுகள் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன்புதான் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.
ஐயா பழநெடுமாறன் அவர்கள் தோற்றுவித்த உலகத் தமிழர் பேரமைப்பின் மலேசியப் பணியக ஒருங்கிணைப்பாளராகவும் பழவீரர் பொறுப்பேற்றிருந்தார். மலேசியத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் இனி ஈடுபாடு காட்டப் போவதாகப் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் பழவீரர் தெரிவித்திருந்தார்.
நாடு தழுவிய அளவில் தமிழ்க் காப்பிற்காக இரவு பகல் பாராது ஓய்வு ஒழிவின்றி எண்ணற்ற நிகழ்வுகளில் கலந்து பழவீரர் உரை நிகழ்த்தி இருக்கிறார். தமிழர்கள் தமிழ் அடையாளத்தை இழக்காமல் வாழ வேண்டும் என்பதில் பழவீரர் மிகவும் உறுதியானவர். தம்மைப் போலவே தம் குழந்தைகளையும் நாடு போற்றச் செய்த பெருமை பழவீரருக்கு உண்டு.
சித்த மருத்துவத் துறையில் பழவீரருக்கு பெரும் புலமை உண்டு. கடந்த சில ஆண்டு காலமாக சித்த வித்தைகளில் பெரும் ஈடுபாடு காட்டி பயிற்சியிலும் கடுமையாக ஈடுபட்டு வந்தார். வட மலேசியா முழுவதும் திருக்குறள் ஓதும் நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர் பழவீரர். மலேசியாவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழீழ மக்களின் துயர் துடைப்பிற்காகவும் பழவீரர் ஆற்றிய பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.
ஐரோப்பா மற்றும் ஆத்திரேலியா நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பழவீரர் எழுச்சியுரையாற்றியிருக்கிறார். அன்னாரின் இழப்பு தமிழ் உலகத்திற்கு பேரிழப்பாகும் என மலேசியத் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன. ஏழு பிள்ளைகளுக்கு தந்தையான பழவீரரின் வழியனுப்பு நிகழ்வு செலாமாவில் நடைபெற்றது.
தமிழ் முறைப்படி தமிழின உணர்வாளர்கள் இறுதி வணக்கம் செலுத்த குரோ சிவானந்தர் தவவனத்தின் தவ ஓகி போகர் அடிகள் தலைமையில் சித்த முறைப்படி நினைவகம் எழுப்பப்பட்டது.
பேச்சாளர், பாடகர், எழுத்தாளர், பாவலர், இசையமைப்பாளர், ஒளிப்பட நிபுணர், வரைகலையாளர், சித்த மருத்துவர், மண இணைப்பாளர் என பன்முக ஆளுமை நிறைந்தவர் பழவீரர்.
அவரின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|