இவன்தான் தமிழன்...
கவிவேந்தர் கா.வேழவேந்தன்
வந்தவர்க்கே பந்திவைப்பான் தமிழன்; வந்தோர்
வாய்மொழிக்கே தாள்திறப்பான் தமிழன்; வீட்டுள்
எந்தமொழி நுழைந்தாலும் தலைமேல் தூக்கி
ஏற்றி அதைப் போற்றிடுவான் தமிழன்; ஈன்ற
சொந்தமொழி நொந்தழிந்தே நைந்த போதும்
சுரணையின்றி உறங்கிடுவான் தமிழன்; இஃது
செந்தமிழ்த்தாய் பெற்றுவந்த சாபம்; இன்றேல்
திருந்தாத இவன்வந்தா பிறந்திருப்பான்?
ஒற்றுமையா? என்ன விலை? என்றே கேட்கும்
உன்மத்தன் மறுபெயர்தான் தமிழன்; ஈது
வெற்றுரையா? வரலாற்றை உற்றுப் பார்த்தால்
வீரமுடன் போரிட்டோர் யார்? யார்? சேரன்
முற்றுகையால் சோழர்களை வென்றான்; சோழன்
முனைப்போடு பாண்டியரைக் கொன்றான் என்றால்,
உற்றஉடன் பிறப்புடனே மோதி மோதி
உதிரநதி ஓடவிட்டோன் தமிழன் தானே!
இனப்பற்றா? என்ன பொருள்? என்றே கேட்கும்
என் தமிழன் மாண்புக்கோர் சான்றா? ஆங்கே
மனையிழந்தும், உறவிழந்தும், உயிர்கள் ஈந்தும்
மானப்போர் நிகழ்த்துகிறான் ஈழத் தோழன்
வினைப்போரில் தமிழீழம் வென்றால், ஐ.நா.
வெளிமுகப்பில் தமிழர்கொடி பறக்கும்; ஆனால்
தினையளவும் துணைநல்க முனைந்திடாமல்
திருக்கல்லாய்ச் சமைந்திருப்போன் தமிழன் தானே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|