சகிக்க முடியாத சிரிப்பு நடிகன்!
தமிழ்
அது அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. எடுத்த வாந்தியையே திரும்ப எடுத்தாலும் அடடா அற்புதமான வாந்தி என்று கையில் ஏந்த அவர்களுக்குள்ளேயே ஆட்கள் உண்டு. மீண்டும் ஒரு முறை அந்த கலையை அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள்.
துக்ளக் இதழில் மாஜி சிரிப்பு நடிகர் (நன்றி : தினத்தந்தி) திருவாளர் சோ, வாரா வாரம் என்ன வாந்தி எடுக்கிறாரோ அதே வாந்தியை தற்போது ஆனந்தவிகடன் இதழில் எடுத்திருக்கிறார். சந்தையில் துக்ளக் விலை போகவில்லை என்றதும், வாசகர்களிடம் நம்பர்1 ஆக இருக்கும் தங்கள் ஆத்து இதழான ஆனந்த விகடனில் அதே வாந்தியை எடுத்து, `சோ... எப்படி வாந்தியெடித்திருக்கா பார்த்தேளா' என்று பேச வைத்துவிட்டார். அந்தச் சாமர்த்தியத்துக்கு சபாஷ் போடலாம்தான்.
வழக்கம் போலவே ஈழத்தமிழர் மீதான எரிச்சல், தி.மு.க. ஆட்சி மீதான கொதிப்பு, தந்தை பெரியாரைக் கண்டு பய அலறல் என பேட்டி வாந்தி எடுத்திருக்கிறார் திருவாளர் சோ.
ஈழத்தமிழரின் துயர் துடைப்பதற்கான ஆதரவுக் குரல்கள் தாய்த் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன என்பதைக் கூட சோவால் செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போய் விடும் என்பார்களே, அதுபோல இங்கே ஆதரவுக்குரலே இல்லை என்கிறார். தமிழர்களை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முன்வராத சோ. அதன்பிறகு, அதே பிரச்சினையில் வைகோவைக் கைது செய்ய கலைஞருக்குத் துணிச்சல் இல்லை என்று சாடுகிறார். இது தூண்டிவிடும் வேலையின்றி வேறில்லை. அதன் பிறகு, தி.மு.க.வுக்கு ஆதரவளித்து வரும் பா.ம.க. குறித்த ஒரு விமர்சனம். எல்லாம் எதற்காக? இப்படியெல்லாம் சொன்னால் கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு வைகோவைக் கைது செய்வார், மருத்துவர் ராமதாசுடன் மோதல் போக்கைத் தொடங்குவார். ஆட்சி கவிழும் என்கிற `நல்லெண்ணம்' தவிற வேறெதுவும் இல்லை.
தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எந்த அணியில் இருந்தாலும் அவர்களைத் `துணிச்சலாக' விமர்சிக்கும் `நடுநிலையாளர்' சோ, தனது பேட்டியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றியோ, பாரதிய ஜனதா கட்சி பற்றியோ எதுவும் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தங்களுக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக இருந்தாலும் அவர்களின் நலனில் கவனமாகவே இருப்பார்கள் அவர்கள். ஆனால், மண்ணை விட்டு மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் பெரியார் மீது பாய்ந்து பிறாண்ட பார்க்கிறார்கள். ஏனென்றால், தமிழகம் இன்னமும் பெரியார் பூமியாக இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல்தான். பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து போனாலும் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களே என்ற பொச்சரிப்புதான். அதைப் பேட்டி என்ற பெயரில் வாந்தியாகக் கொட்டுவார்கள். அதனை ஆனந்த விகடன் போன்ற `நடுநிலை' ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். அட்டையில் அதனை இடம்பெறச் செய்யும். அவர்களின் இந்த வஞ்சகத்தை நம்மவர்களில் பலரும் புரிந்து கொள்வதில்லையே என்பதுதான் நமது வருத்தம்.
யாருக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதுபோன்ற சாணக்கியத்தனங்களை 70 ஆண்டு கால பொதுவாழ்வு நெடுகிலும் கண்டுவந்திருக்கிற 83 வயது நிறைந்த முதல்வர் கலைஞர் புரிந்துகொள்ளாமல் இல்லை. 100 நாட்களில் மக்களின் ஆதரவை பெருகச் செய்திருக்கிற ஆட்சியை வீழ்த்துவதற்குச் சாம, பேத, தான, தண்டம் என அத்தனையையும் பிரயோகித்துக் கொண்டிருக்கும் அவர்களை, அவர்கள் பாணியிலேயே சாணக்கியத்தனத்துடன் எதிர்கொண்டு வருகிறார். துக்ளக்கில் எடுத்த வாந்தியை ஆனந்த விகடனில் மீண்டும் எடுத்து, பரவலான வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு போன சோவின் சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ் போட்டால், அந்தச் சோக்களின் எதிர்பார்ப்பு நிறை வேறாதபடி அவர்கள் பாணியிலேயே செயல்பட்டு, அவர்கள் வாயில் அல்வா வைக்கும் கலைஞரின் திறமைக்கு இரண்டு மூன்று சபாஷ் போடலாம்.
சோ வகையறாக்களின் குடிகெடுக்கும் திட்டங்களுக்கு அல்வா கொடுத்துக்கொண்டே, தமிழர் நலனில் அக்கறையுள்ள செயல்பாடுகளைக் கலைஞர் தொடர்ந்து நிறைவேற்றும் போது சபாஷ்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|