செஞ்சோலை
பச்சியப்பன்
இந்தமுறை
பிள்ளைக்கறி கேட்டது புத்தன்!
நட்சத்திரம் மின்னிய வானத்தின் வழியே
வேர்களைத் தேடித்தேடி மழைத்தூறிய வானத்தின் வழியே
அவர்கள் மரணத்தை அழைக்கிறார்கள்!
சோலையைச் செய்திருந்தோம் நாம்
அவர்கள் அதைச் சுடுகாடாக மாற்றிப்போனார்கள்!
போதிமரத்தை அடியோடு வீழ்த்தி
ஈம விறகு தந்துவிட்டுப் போனார்கள்!
பாசத்திற்கு ஏங்கிய பிஞ்சுகளின் மீது பாசக்கயிறோடு வந்தார்கள்!
ஓடி ஒளிந்த சிவனின் நெற்றிக்கண்ணிலும்
ஒரு குண்டுவிழுந்து மண்டைச் சிதறியது!
தாலாட்டுக் கேட்ட முற்றத்தில் எல்லாம்
நரிகளின் ஊளை அப்போது கேட்டது!
பாவிகளே! பாவிகளே!....
தண்ணீர் கேட்டு வந்த நீங்களா இப்படி
எங்கள் குழந்தைகளின் இரத்தத்தைக் குடிப்பது?
தொட்டிலில் கிடந்த குழந்தையை எடுத்து பாடையிலா வீசுவது?
சிதைந்து கிடக்கின்றன மணல் வீடுகள்
நொறுங்கிக் கிடக்கின்றன நடைவண்டி
பொம்மைகளோடு சிதைந்து கிடக்கிறார்கள்
நடைபழகாத குழந்தைகள்!
பாவிகளே இந்த விளையாட்டுப் பூங்காதானா
உங்கள் இறையாண்மை காக்கும் வெறியர்களின் போர்க்களம்?
உங்கள் சிம்மாசனப் பேயாடலில்
குழந்தைகளையா பலிகொடுப்பது?
நீங்கள் கைநீட்டினாலும் கட்டையை ஊன்றி ஓடிவருமே
எங்கள் குழந்தைகள்!
இந்த வழியே நீங்கள் போனாலும் கையாட்டுமே அந்தக் குழந்தைகள்!
வாருங்கள்! வாருங்கள்!....
முத்தமிட்ட உதடுகளில் இரத்தம் வடிவதைப் பாருங்கள்!
ஆலிவ் இலையின் கடைசித் தளிர்போல
எங்கள் குழந்தைகளின் கண்கள் இருப்பதைப் பாருங்கள்!
கதறி அழ அம்மா இல்லை,
கையில் ஏந்த அப்பா இல்லை என்றா நினைத்தீர்கள்?
ஒரு கை அம்மா ஒரு கை அப்பா
அம்மையப்பனாய் எங்கள் அண்ணன் இருப்பது தெரியாதா உங்களுக்கு?
வீழ்ந்தது ஒன்றுதான் நம் வரலாறு என்றால் புறநானூறு நமக்கெதற்கு?
சாவது மட்டுமே தலைவிதியானால் பரணிகள் எதற்கு?
புலிக்குட்டிகளை நரிகள் திண்பதை வேடிக்கை பார்க்கவே பிறப்பு என்றால்
இந்த வாழ்க்கைதான் எதற்கு? அலறல் கேட்ட இந்தக் காது பதைக்கிறது....
விழுந்து கிடந்ததைப் பார்த்து இந்தக் கண்கள் பதைக்கிறது
ஒரு கல்லைஎடுத்து எறிய முடியாத இந்தக் கைகளால்
கவிதை எழுத கூசுகிறது!
போய்வாருங்கள் குழந்தைகளே! போய்வாருங்கள்!...
நீங்கள் புதைந்த இந்த மண்ணுக்குள்தான் எரிமலை இருக்கிறது!
நீங்கள் கலந்த இந்தக் காற்றின் மீதும் புயல் இருக்கிறது!
நீங்கள் மறைந்த அந்த வானத்தில் எங்கெங்கும் இடிகள் இருக்கின்றன!
போய்வாருங்கள் குழந்தைகளே! போய்வாருங்கள்!....
எல்லாம் முடிந்தபிறகு உலகெங்கும் பூக்களாய்ப் பூப்பீர்கள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|