கட்டுரை
என் வழி ‘தளி’ வழி:
தமிழகத்தின் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ, ராமச்சந்திரன்
இருபெரும் அணிகள், பணபலம், ஊடக ஆதிக்கம், தனி நபர் குற்றச்சாட்டுகள் எனத் தமிழக சட்டமன்றக் களம் மூன்றாம் உலகப்போர்க்களம் போல் இருந்ததை மறக்க முடியாது. இந்தக் களத்திலிருந்து, எந்தக் கட்சியின் துணையுமில்லாமல், சினிமாக் கவர்ச்சி ஏதுமில்லாமல் சுயேட்சையாகவே வென்றிருக்கிறார் தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன்.
நரைகூடி கிழப்பருவம் எய்திய பல மூத்த சட்டமன்ற உறுப்பனர்கள் உள்ள அவையில் 37 வயதே நிரம்பிய இளைஞராக நுழைகிறார் இராமச் சந்திரன். சட்டமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு திரும்பிய அவரைச் சந்தித்தோம்.
எந்த அலையும் இல்லை என வர்ணிக்கப்பட்ட இந்த தேர்தலில், 2 ரூபாய்க்கு அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வாக்குறுதிகளால் தி.மு.க. கூட்டணி அருதிப் பெரும்பான்மை பெற, அ.தி.மு.க அணிக்கு குறைந்த இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இருபெரும் அணிகளின் மோதலுக்கிடையே தளி தொகுதியில் ஒரு சுயேட்சையாக உங்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது?
ஏற்கனவே நான் ஒன்றியச் சேர்மனாக இருந்திருக்கிறேன். நான்கரை ஆண்டுகாலம் நான் வகித்த அந்தப் பதவியின் மூலம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன். தளி தொகுதி என்பது மிகவும் பின்தங்கிய தொகுதி. இங்கே தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. எந்த எம்.எல்.ஏவும், எம்.பியும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கமிஷன் பெறாமல் எந்தப் பணியும் செய்வதில்லை என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், நான் ஒன்றியச் சேர்மனாக எவ்வித கமிஷனும் பெறாமல் 80 கோடி ரூபாய் அளவுக்குத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். அதேபோல், தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானால், தொகுதிக்கு நிறைய செய்வேன் என்ற நம்பிக்கையில் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
அடிப்படையில் நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்? அந்த கட்சியில் "இடம் கேட்டீர்களா?
அடிப்படையில் நான் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவன். சீட் கேட்டேன். கொடுக்கவில்லை. அதனால் கட்சியிலிருந்து விலகிவிட்டுச் சுயேட்சையாக போட்டியிட்டேன்.
தளி தொகுதி என்பது பின்தங்கிய தொகுதி. இங்கே முதன்மையான பிரச்சினையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள். நீங்கள் இந்தத் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
சாலை வசதி இல்லாத கிராமங்கள் நிறைய இருக்கின்றன. அக் கிராமங்களுக்குச் சாலை வசதி செய்து தரப்படும். நாடு சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளாகியும் இன்னமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. குளத்துத் தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். அதுபோலவே சுகாதார வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்வேன். இத்தகைய அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தருவேன்.
இரண்டாவதாக, இந்தப் பின்தங்கிய தொகுதியில் பள்ளிக் கல்வியுடன் பலரும் படிப்பை முடித்து விடுகிறார்கள். ஏனென்றால் இங்கே அரசுக் கல்லூரி இல்லை. இந்த தொகுதிக்குட்பட்டு அரசுக் கலைக்கல்லூரி அமைய பாடுபடுவேன். படித்துவிட்டு வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களுக்காக, ஓசூரை ஒட்டியுள்ள தளி தொகுதியில் ஒரு தொழிற்பேட்டை உருவாக்கப் பாடுபடுவேன்.
விவசாயத்தை முழுமையாக நம்பியிருக்கிற இந்தத் தொகுதியில் ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பட்டா இல்லாமல், சாகுபடி நிலங்களாக உள்ளன. அந்த விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கப் பாடுபடுவேன். அங்கே பொதுப்பணித்துறை சார்பில் அணைகட்டும் திட்டம் நிலுவையில் உள்ளது. அதனைப் கட்டுவதற்கு பாடுபடுவேன். மக்கள் கொடுத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி 5 ஆண்டுகாலம் அவர்களின் நலன்களுக்காக உழைப்பேன்.
தளி தொகுதியில் தமிழகத் தலைவர்கள் மட்டுமின்றி தேவகவுடா, வெங்கையா நாயுடு, அத்வானி போன்ற தேசியத் தலைவர்களும் பிரச்சாரம் செய்தார்கள். இதையெல்லாம் மீறி வெற்றி பெற முடியும் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
நாங்கதான் வெற்றிபெறுவோம் என்பதைத் தொடக்கத்திலேயே சொன்னோம். எத்தனை தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தாலும், ஒன்றிய சேர்மனாக நான்கரை ஆண்டுகாலம் நான் செய்த பணிதான் இந்த வெற்றி வாய்ப்புக்குக் காரணம்.
ஒருவேளை, இந்த தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை இல்லாமல் சமபலத்துடன் தொகுதிகளைப் பெற்று, ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ வான நீங்கள் ஆதரித்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால், நீங்கள் யாரை ஆதரித்திருப்பீர்கள்?
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட பிறகு, இத்தகைய கற்பனைகளுக்கு இடமே இல்லையே! இருந்தாலும் அப்படியொரு நிலை என்றால் எனக்காக உழைத்த நண்பர்களிடம் ஆலோசித்தே முடிவெடுப்பேன். சுயேட்சை எம்.எல்.ஏ வான உங்களை தி.மு.க, அ.தி.மு.க தரப்பிலிருந்து தங்கள் பக்கம் வருமாறு அணுகினார்களா?
அணுகினார்கள். ஆனால் நான் சுயேட்சை எம்.எல்.ஏ வாகத்தான் நீடிக்கப் போகிறேன்.
37 வயதில் எம்.எல்.ஏ வாக சட்டமன்றம் சென்ற தங்களுக்கு மூத்த உறுப்பினர்கள் எப்படி வரவேற்பளித்தார்கள்? முதல் சட்டமன்ற அனுபவம் எப்படி?
மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் எனது குரலைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்பாக பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனது தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் பற்றிப் பேசினேன். முதல்வர் தனது பதிலுரையில் எனது கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு இளைஞரான நீங்கள் சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்களில் ஒரு பகுதியினர் சினிமா நடிகர்கள் பின்னால் செல்கிறார்கள். இன்னொரு பகுதியினர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமைகளாகியுள்ளனர். அரசியல் விழிப்புணர்வு சிறிதும் இல்லை. பொது நல விஷயங்களில் பங்கேற்பதில்லை. ஓர் இளைஞராக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள். என்ன தீர்வு சொல்கிறீர்கள்?
எங்கள் தொகுதியைப் பொறுத்தவரை எனக்கு முழுக்க முழுக்க வேலை செய்தவர்கள் இளைஞர்கள்தான். நீங்கள் சொல்பவர்கள் நகரத்தில்தான் உள்ளார்கள். சினிமா கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவை ஒரு பக்கம் உள்ளது. இதிலிருந்து மீண்டு, இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|