தூய்மையிலார் திருந்துவரோ?
பைந்தமிழ்ப் பாவலர் மு.வே.கங்காதரன்
குடிமகளின் காப்பியமாய்க் குலமகளாய் தலைமகளாய்
முடிசூடும் பாண்டியர்கள் முரசொழிய, அரசியலைப்
படியாதார் தாமறியப் பலபாடம் புகட்டியதே;
குடிமகளே முறைசெய்து குலமேன்மை காத்தனளே!
சிலம்புமுதற் காரணமாய்ச் சினந்தெழுந்த வரலாறாய்
நலம்விளைத்த சிலம்பென்னும் நற்றமிழின் மணிமுடியாய்
விலையிலா தம்முடலை எந்நாளும் பயன்படுத்திக்
கருக்கொண்ட நாள்முதலாய்க் கனித்தமிழ்க்கே உயிர்வாழும்
கலைஞரெனும் சிறப்புடையார்; களவாழ்க்கை வரலாறாய்
உலைவதிலை ஒருபோதும் ஒண்டமிழைக் காப்பதிலே;
வலையெதிலும் வீழ்தலிலார்; வாழ்நெறியும் பகுத்தறிவே;
அலைமோதும் புரட்சிமனத் தய்யாவின் மாணாக்கர்!
கண்ணகியைக் கண்டக்கால் கண்ணெரிச்சல் கொண்டோர்கள்,
கண்ணகியின் சிலையினையே கணப்பொழுதில் அகற்றினரே!
பண்ணினரே பெருங்கேடு பாராண்ட காலத்தே;
உண்ணிறைந்த வன்மங்கள் ஒருகோடி யதன்மேலாம்!
கடற்கரையில் கண்ணகியைக் கண்டுவிட்டோம்; வென்றுவிட்டோம்!
மிடல்மீண்டும் நிலைபெறுமே; மேன்மையெலாம் இனியுறுமே;
கடல்கடந்த தமிழர்களும் களிமகிழ்வில் வீங்குகிறார்;
உடல்வேறாய் உயிர்ரொன்றாய் ஓங்குகின்ற தமிழினமே!
பண்பாட்டின் சின்னமெனப் பலர்புகழும் கண்ணகியைப்
பண்பாடே அறியாதார் பலவாறாய் எழுதுகின்றார்;
கண்கூடும் இவரெல்லாம் காப்பதுமோர் தனிமானம்;
மண்மீதில் இவர்மானம் மாறாத அவமானம்!
கண்ணகியின் சிலைதொட்டால் கனன்றெரியும் தமிழர்விழி!
பண்டையநாள் முதற்கொண்டே பகைவர்களின் இனப்புரட்டு
மண்டும்; ஒரு பெருங்கடலாய் மாத்தமிழர் அணிதிரளத்
துண்டுகளாய்ச் சிதறும்முன் தூய்மையிலார் திருந்துவரோ?
விளையாட்டுப் பாவையென வீணர்களும் உரைக்கின்றார்!
விளையாட்டை வேரறுக்க விரைந்தொன்றாய்க் கூடிடுவோம்!
விளையாட்டை இனிமேலும் வீணர்களும் தொடராமல்
விளையாட்டை நிறுத்துமொரு வினையாண்மை காட்டிடுவோம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|