அயம் Ferrum
சித்த மருத்துவர் பிரின்ஸ்
சில நூற்றாண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வரும் அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு மருந்திற்கும் குறிப்பிட்ட ஆயுட் காலம் (Expiry) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆயுட்காலத்திற்குப் பிறகு குறிப்பட்ட மருந்தில் அதனுடைய மூலப்பொருட்களில் வேதி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. அதனாலேயே ஆயுட்காலம் முடிவுற்ற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்பது வன்மையாக வலியுறுத்தப்படுகிறது. இதனையே சித்தர்கள் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளனர்.
சித்த மருத்துவத்தில் 3 மணி நேரமே ஆயுட் காலம் உடைய குடிநீர் (Decoction) முதல் ஐந்து நூற்றாண்டுகள் ஆயுட்காலம் கொண்ட சுண்ணம் வரை 32 வகையான மருந்துகளைப் பற்றிச் சொல்லியுள்ளனர் சித்தர்கள். நம்முடைய உணவில் பயன்படுத்தும் சுக்குமல்லி காபி முதல் மிளகு ரசம் வரை அனைத்துமே குடிநீரில் அடங்கும். குடிநீர் என்பது மூலிகைப் பொருட்களை அதனுடைய எடைக்கு 8 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகக் குறுக்கி அதனை உட்கொள்வதாகும். இவ்வாறு செய்வ தன் மூலம் பொருட்களில் உள்ள நீரில் கரையும் வேதிப்பொருட்கள் அந்த நீருடன் கலந்துவிடும். அதனை நாம் உட்கொள்வதன் மூலம் மருத்துவப் பயன்களைப் பெறச்செய்ய முடியும். இது ஒரு வகையான Extraction முறை ஆகும். அதாவது அந்த மூலிகையில் இருக்கும் நீரில் கரையக் கூடிய வேதிப் பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ள ஒரு சிறந்த வழிமுறை ஆகும்.
நாம் உபயோகிக்கும் மருந்துப் பொருட் களில் நீரில் கரையக் கூடியவற்றை குடிநீர் மூலம் பெற்றுக் கொள்வது போல, கொழுப்பில் கரையக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தவும் சித்தர்கள் ஒரு சிறந்த வழிமுறையைக் கண்டு பிடித்து வைத்திருந்தனர். அதுவே தைலம், நெய் போன்றவை ஆகும்.
எள், நெய் மற்றும் ஆவின் நெய் போன்ற வற்றை மூலப் பொருள்களாகக் கொண்டு தைலம், நெய் ஆகியவை செய்யப்படுகின்றன. மூலப்பொருளில் மருந்துகளை சேர்த்துக் காய்ச்சும் போது மூலிகையில் இருக்கும் வேதிப் பொருட்கள் கொழுப்பு அமிலத்துடன் சேர்ந்து மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வாறு செய்யப் படும் பொருட்கள் எளிதில் வயிற்றிலுள்ள என்ஸைம்களால் (Enzyme) சிதைக்கப்பட்டு உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கடந்த இதழில் அன்னபேதி Ferrous Sulphate எவ்வாறு செந்தூரமாக மாற்றப்பட்டு உபயோகிக்கப்படுகிறது என்பது பற்றிப் பார்த்தோம்.
இந்த இதழில் அயம் Ferrum சித்த மருத்துவத்தில் எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதைப் பார்ப்போம்.
(அயம் குருதியின் தன்மையை மேம்பாடு அடையச் செய்யும்.)
இதனையே, சித்தர்கள்
"பாண்டுவெண் குட்டம் பருந்தூல நோய்சோபை
மாண்டிடச்செல் மந்தங்கா மாலைகுன்மம் பூண்ட
பெருந்தாது நட்டமும் போம் பேதிபசி யுண்டாங்
கருந்தாது நட்டமிடுங்கால்'' என்று பாடியுள்ளனர்.
அயமானது பாண்டு Anema வெண்குட்டம் leucoderma, பருந்தூலம் சோகை Drupsy மற்றும் தாது நட்டம் போன்ற நோய்களில் மிகுந்த பயன் தரும். அயத்தினைச் செந்தூரமாக்கி வழங்கும் போது மேலே குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் எளிதில் விலகும். அயச் செந்தூரம் அப்படியே எடுத்துக்கொள்ளும் போது மலக்கட்டினை ஏற்படுத்தும். எனவே அதனை திர்பலை என்னும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்துச் செய்யப்படும் சூரணத்துடன் வழங்குவது சிறந்தது. அடுத்த இதழில் அயத்தினைப் பற்றியே மேலும் அலசுவோம்...!
தொடரும்
மருத்துவர் பிரின்ஸ்
98404 28 028
[email protected]
drprince [email protected]
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|