கட்டுரை
இரண்டாம் சுதந்திரப் போர் ஆசிரியர் கி.வீரமணி
இன்றைக்கு உயர்சாதி ஆணவ ஆதிக்கச் சக்திகள், சில பத்திரிகைகள், சில முதலாளிகள், சில ஊடகங்களை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கத்தை மிரட்டலாம். பிரதமரை மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.
"இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ளதை அமல்படுத்து' என்று கேட்பதற்கு ஒரு போராட்டத்தை இந்த நாட்டிலே நடத்த வேண்டியுள்ளது.
நேரு பிரதமராக இருந்த பொழுது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் 1951 ஆம் ஆண்டு நடத்திய மாபெரும் கிளர்ச்சியின் விளைவாக அரசியல் சட்டத்தில் 15(4) சட்டத் திருத்தம் புகுத்தப்பட்டது. 1951 முதல் 2006 வரை ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கின்றார். சென்னை அய்.அய்.டியில் 400 பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அதில் 282 பார்ப்பனர்கள். 3 சதவிகிதம் பேர் உள்ளவர்கள் ஏறத்தாழ 60 சதவிகிதம் அனுபவிப்பதா? இது இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் டெக்னாலஜியா? இந்தக் கல்வி நிறுவனத்திற்கு ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறார்கள.
அக்கிரகாரத்திற்கு தாரை வார்ப்பதற்கா ? அன்னதானம் வழங்குவதற்கா? நூற்றுக்கு 3 பேர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு 282 இடங்கள்! பிற்படுத்தப்பட்டோர் 52 பேர்; கிறித்தவர்கள் 15 பேர்; முஸ்லிம்கள் பூஜ்யம்; ஒரு இடம் கூடக் கிடையாது; ஜெயின் மூவர்.
சென்னை அய்.அய்.டி., இயக்குநர் எம்.எஸ். அனந்த் அய்யங்கார் ஒரு புத்தகம் எழுதியிருப்பாரா? அல்லது ஒரு பி.எச்.டி., மாணவரையாவது உருவாக்கியிருப்பாரா? 1981முதல் 2006 வரை அய்.அய்.டி. இயக்குநர் எம்.எஸ். அனந்த் 6 கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கின்றார். ஆனால், அதே சென்னை அய்.அய்.டியில் வசந்தா கந்தசாமி என்பவர் 20 வருடமாக உதவிப் பேராசிரியராக இருக்கின்றார். அவர் 27 புத்தகங்களை எழுதியிருக்கின்றார். 632 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். அவர் 15 பி.எச்.டி. மாணவர்களை உருவாக்கி இருக்கின்றார். இது தான் இங்குள்ள அய்.அய்.டியின் நிலைமை.
எங்களுக்கு இடமில்லை என்று சொன்னால்கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், உங்களுக்குப் படிக்கவே தகுதி இல்லை என்று எங்களைப் பார்த்துச் சொன்னால், எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
எங்களுடைய ரத்தம் கொதிக்கிறது. அப்படிச் சொல்கிறவரை என்ன செய்யவேண்டும்? இப்பொழுது மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உள்ளதால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்பட உள்ளது. மண்டல் அவர்கள் தனது அறிக்கையில் 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு 27 சதவிகிதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கை எழுதி 26 ஆண்டுகள் ஆகிறது. இப்பொழுது 105 கோடி மக்கள் உள்ளனர்.
திடீரென்று ஒரு பத்திரிகையில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கச் சில விஷமச் சக்தியினர் தவறான பிரச்சாரத்தைப் பரப்புகின்றனர். கயிறு திரித்துப் பார்க்கின்றனர். பிற்படுத்தப் பட்டவர்களைப் பற்றி ஒரு சேம்பள் சர்வே நடத்தியிருக்கிறார்களாம். 36 சதவிகிதம் பேர்கள்தான் நாட்டில் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்று கயிறு திரித்துச் செய்தியை வெளியிட்டிருக்கின்றனர்.
இன்றைக்கு உள்ள நிலவரப்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 80 சதவிகிதமாகும். பிற்படுத்தப்பட்டோர் 36 சதவிகிதமாம்! அதுவும் 36 சதவிகிதப் பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம்களைக் கழித்து விட்டால் 31 சதவிகிதம் பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று முழுப் பூசணிக்காயைப் படி சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். எனவே, நாம் விழிப்போடு இருக்கவேண்டும்.
இது இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான போர்ப் பிரகடன ஆரம்பம் என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விரைவில் நாட்டில் செல்லுவோம். அங்கு யாரை முற்றுகையிட வேண்டுமோ, அவர்களை முற்றுகையிடுவோம்.
மருத்துவர் ராமதாசு:
ஒடுக்கப்பட்ட மக்களுடைய இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆதிக்கச் சக்திகள் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றார்கள். நாங்கள் கொதித்துப் போயிருக்கிறோம். எங்களுடைய உணர்வுகளைக் காட்டக் கூடிய கருவிகளே இல்லை. இருந்தாலும் எங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
வி.பி. சிங் அவர்களது ஆட்சிக் காலத்தில் மண்டல் கமிசன் உத்தரவு பிறப்பித்தார்கள். அதன் விளைவாகப் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கின்றன. மொத்தம் உள்ள 100 இடங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 22.5 இடங்கள் கிடைக்கின்றன. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகிதம் கொடுத்துவிட்டால், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50.5 இடங்கள் தான் கிடைக்கும் என உயர்சாதியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
நீங்கள் எங்களோடு வந்து இதில் போட்டி போடுங்கள். மலம் எடுக்கப் போட்டி போடுங்கள். நாற்று நட, எங்களோடு வந்து போட்டி போடுங்களேன். கீழான வேலைக்கெல்லாம் நாங்கள். உயர்ந்த வேலைக்கெல்லாம் நீங்களா?
யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள அய்.ஏ.எஸ்., தேர்வில் நான்காவது இடத்தைப் பெற்ற ஜெ. கணேசன் வேலூரைச் சேர்ந்தவர். 84 ஆவது இடத்தைப் பெற்றவர் ப. சரவணகுமார், இவர்கள் இருவருமே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வி.பி. சிங் அவர்கள் ஓ.பி.சி.,க்கு 27 சதவிகிதம் வேலையில் இட ஒதுக்கீடு அளித்தார். கல்வியில் இதுவரை இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இப்பொழுது தான் அர்ஜுன்சிங் அவர்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
தமிழகத்தில் உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் இதற்கு நல்லதொரு முடிவை ஏற்படுத்தவேண்டும்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சூழ்ச்சியை முறியடித்தாக வேண்டும். நாங்கள் டில்லி செல்லுவோம். அங்கு உள்ளவர்களையும் ஒரு கலக்கு கலக்குவோம்.
இட ஒதுக்கீட்டு மாநாட்டுப் பேச்சிலிருந்து...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|