Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை
தமிழ்

ஈழம் வரைபடத்தில் இந்தியாவுக்கு கீழே தீ போல எரிந்துகொண்டே இருக்கிறது. காலடியில் நெருப்பு எரியும் போதும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறது இந்திய அரசு. திருப்பெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொல்லப்பட்டபிறகு, இந்தியாவின் நிலை மட்டுமல்ல, தமிழக அரசியல் கட்சிகளின் நிலையிலும் மாற்றமும் மவுனமும் நிலைத்துவிட்டன. இந்த மவுனத்தை உடைக்கும் வார்த்தைகளை விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டார்.

V.Prabakaran "ராஜீவ்காந்தி படுகொலையை பொறுத்தவரை மிகப் பெரிய சோக சம்பவம் என்றுதான் நான் கூறுவேன். அது வரலாற்று ரீதியிலும் பாரதூரமான சோகமான சம்பவம். அதற்காக நாங்கள் மிகவும் ஆழமாக வருந்துகிறோம். இந்திய அரசும் இந்திய மக்களும் பெருந்தன்மையுடன் கடந்த கால நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இலங்கை இனப்பிரச்சனையை மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இனி எந்த சூழ்நிலையிலும் இந்திய நலன்களுக்கு எதிரான செயல்களில் விடுதலைப்புலிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என இந்திய அரசிடம் நாங்கள் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறோம். எனவே, இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், எனத் தெரிவித்தார் பாலசிங்கம்.

இது உலகளாவிய அளவில் உற்று நோக்கப்பட்ட பேட்டி. இலங்கை இனப்பிரச்னையில் இந்தியா உதவ முன்வந்தால்தான் அங்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்பதற்கான குரல். படை வலிமையில் சிங்கள அரசை எல்லா வகையிலும் எதிர்கொள்ளும் நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் என்பதையும், ஐ.நாவின் அங்கீகாரம் மட்டுமே தேவைப்படும் தனிநாட்டை அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள் என்பதையும் சர்வதேச பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இந்தியாவிலிருந்து தமிழீழப் பகுதிகளுக்கு செல்லும் பத்திரிகையாளர்களும் இவற்றைக் கவனித்து பதிவு செய்யத் தவறவில்லை.

ஆனால், இந்திய அரசு மட்டும் தமிழர் நலனில் பாராமுகமாக இருப்பதுடன், சிங்கள பேரினவாத இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருவதிலேயே அக்கறை செலுத்தி வருகிறது.

உலகெங்கும் பல நாடுகளில் அரசுகளுக்கு எதிரான புரட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்தார்கள். ஆயுதம் தாங்கும் மாவோயிஸ்ட்டுகளை இந்திய அரசு ஏற்கவில்லை. அதற்காக நேபாள மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டதா?

பாலஸ்தீனத்தில் ஹமாசின் கை ஓங்குவதில் இந்தியாவுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதற்காக பாலஸ்தீன விடுதலையை இந்தியா புறந்தள்ளிவிடுமா? மற்ற நாடுகளின் மீதெல்லாம் பரிவுப் பார்வைக் காட்டும் இந்தியா, தன் காலடியில் உள்ள ஈழத்தை மட்டும் வஞ்சிப்பது ஏன்?

விடுதலைப்புலிகள் என்ற ஒற்றையான தட்டையான பார்வையில் இந்திய இனப்பிரச்னையை இந்திய அரசும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகளை மாற்றாமல் இருக்கும் இந்திய உயரதிகாரிகளும் நோக்குவது ஏன்?

அங்கே பேரினவாத அரசால் அழித்தொழிக்கப்படுபவர்களும், பாலியல் வன்முறைக்குள்ளாகிறவர்களும் தமிழர்கள்தானே என்பதாலா? ஆரியத்தின் அரசாட்சி தமிழர்களின் நலனை புறந் தள்ளுகிறதா? இலங்கையில் இனப்படுகொலைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவை நோக்கித்தான் அகதிகளாக தமிழர்கள் வருகிறார்கள். இப்போதும் அதே நிலைதான். இது இந்தியாவுக்கும் கூடுதல் சுமைதான். இந்த அடிப்படையிலேனும் ஈழப்பிரச்சனையில் தமிழர் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு செயல்படுமா என்பதை தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமையில் அக்கறை உள்ள அனைத்து இனத்தவரும் கவனிக்கிறார்கள்.

இந்திய அரசின் நிலையிலும் குரலிலும் மாற்றம் வரவேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இந்தியாவை ஆளும் நடுவண் அரசில் தி.மு.க., பா.ம.க. ஆகிய தமிழக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரசார் முக்கிய துறைகளில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மனது வைத்தால், ஈழ விஷயத்தில் தமிழர் நலன் சார்ந்த வகையில் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுக்க வைக்க முடியும். 10 விழுக்காட்டு பங்குகளை விற்றே தீருவோம் என பிடிவாதமாக இருந்த நடுவண் அரசின் நிலைபாட்டை தமிழக முதல்வரின் குரல் மாற்றிவிடவில்லையா? நெய்வேலி குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்போது, ஈழ விஷயத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியாதா? அந்த நல்ல மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் உணர்வுள்ள தமிழர்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.