மறுமலர்ச்சிப்பாதையில் இந்தியா
- பொருளாதாரம் சுகுமார்
இன்னும் சில மாதங்களில் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 60ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம். 1947 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை நாம் பெற்ற வெற்றி, தோல்விகள், ஏற்ற இறக்கங்கள், எதிர்கொண்டு வரும் சவால்கள், புதிய வாய்ப்புகள் என்று பல்வேறு அம்சங்களை அலசும் முயற்சியாக இத்தொடர் அமையும்.
"யானையைப் பார்த்த ஐந்து பார்வை அற்றவர்கள்" என்ற உருவகக் கதையை உங்கள் நினைவுக்குக் கொண்டு வரவும். யானையைக் குறித்து, அக்கம் பக்கம் உள்ள அனைவரும் சிலாகித்துப் பேசுவதும், புகழ் பாடுவதும், அதைக் குறித்துப் பல்வேறு பழமொழிகள் கேட்டு ஆச்சரியமடைந்தனர் பார்வை அற்ற ஐவர் குழு நண்பர்கள். யானை யைக் குறித்து ஆராய்ச்சி செய்யலாம் என்று முடிவு செய்து ஐவரும் யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டுப் பார்த்தனர். பின்னர் பல மணிநேரம் கழித்து ஐந்து பார்வையற்ற நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து விவாதித்தனர்.
தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்து உணர்ந்தவர் சொன்னார் யானை உலக்கை போன்றது. வாலைத் தொட்டவர் சொன்னார் யானை கயிறு போன்றது. வயிற்றுப் பாகத்தைத் தொட்டு உணர்ந்தவர் சொன்னார் அது சுவர் போன்றது. தந்தத்தைத் தொட்டவர் சொன்னார் அது பளிங்குக்கல் போன்றது. காதைத் தொட்டவர் சொன்னார் யானை முறம் போன்றது. உண்மை என்னவென்றால், யானை அவர்கள் சொன்ன எல்லாக் கருத்துக்களையும் உள்ளடக்கியது. உருவகக் கதையின் தத்துவம் இதுதான். பொருளை முற்றிலும் உணர வேண்டும். பரந்த, விரிந்த பார்வை வேண்டும், கசடறக் கற்க வேண்டும்.
மேற்சொன்ன உருவகக் கதை அனைத்துத் துறைக்கும் பொருந்தும். இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் முற்றுப்பெறப் போகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறை மாற்றங்கள் நம்மைப் புதுப்பித்துள்ளன. இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி என்ற கோணத்தில் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி குறித்துச் சில கருத்துக்களைப் பதிவு செய்ய விழைகிறேன்.
சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மூன்று காலக்கட்டங்களாய்ப் பிரித்து நோக்கலாம். (அ) 1947 முதல் 1975 வரை (ஆ) 1975 முதல் 2000 வரை (இ) 2001 முதற்கொண்டு தொடரும் இந்நாள் வரை என்று அறுபது ஆண்டுக் கால வளர்ச்சியை ஒருங்கிணைந்துப் பார்க்கும் போது சில சமயம் பரவசம் ஏற்படுகிறது. சில சமயம் வருத்தம் ஏற்படுகிறது. வளர்ச்சியின் மாற்றங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பொது மக்களை இன்னும் பயன்கள் சேரவில்லை என்ற கோபம் ஏற்படுகிறது.
உதாரணத்திற்கு, சுதந்திரம் அடைந்த போது இருந்த மக்கள் தொகைக்கு அன்று நம்மால் சோறுபோட முடியவில்லை. இன்று மக்கள் தொகை மும்மடங்கு பெருகிய நிலையிலும் அவர்களுக்கு சோறிட்டப் பின்னரும் சில ஆண்டுகளுக்கான உணவு கையிருப்பு நம்மிடம் உள்ளது. இருந்தும் இந்தியர் பலருக்கு இன்னும் இரண்டு வேளை சோறு கிடைக்கவில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. 1975 இல் வருடத்திற்கு 35000 கார்களை உற்பத்தி செய்த இந்தியா, இன்று வருடத்திற்கு 10 இலட்சம் கார்களை உற்பத்தி செய்கிறது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் சராசரி இந்தியன் பயணம் செய்ய வாகனங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சுதந்திரம் பெற்ற இந்தியா தொடர்ந்து தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமா என்ற கேள்வி பிறந்தது. பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமையைப் பார்க்கையில் அந்தக் கேள்வி எழுந்தது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்தியா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாய்த் திகழ்கிறது. `எமர்ஜென்சி' என்ற இருளைத் தேர்தல் மூலம் விரட்டியடித்ததில் நாம் பெருமை கொள்ளலாம். ஆனால் நம்மை ஆளும் அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சித் தேர்தல் நடத்தவில்லை எனும்போது கவலையாய் உள்ளது.
கட்சிப் பதவி பெறுவதற்குப் பணம், ரௌடித் தனம், அராஜகம், சட்டைக் கிழிப்பு, அரசியல் வன்முறைகள் மற்றும் கொலைகள் நம்மைப் பயம் கொள்ளச் செய்கின்றன. ஒருபுறம் 2010 ஆம் ஆண்டு இந்தியா சந்திரனில் தன் விண்கலத்தை இறக்கும் என்ற செய்தி. மறுபுறம் கையால் மலத்தை அள்ளும் குறிப்பிட்ட ஜாதியைப் பற்றிய செய்தி. இவை முரண்பட்ட இந்தியாவை நம் கண்முன் நிறுத்துகின்றன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|