இடையூறு தரும் கடவுளர்!
கவிவேந்தர் கா. வேழவேந்தன்
கடவுளரே காக்கின்றார் என்றே நித்தம்
கதைக்கின்றார் வைதிகர்! ஆனால் கோயிற்
கடவுளரே களவாடப் படுவ தெல்லாம்
கண்ணெதிரே காண்கின்றோம்! பக்தி யோடு
கடவுளரைத் தரிசிக்க மலைகள் செல்வோர்
கடும்விபத்தில் சாவதுமேன்? சக்தி வாய்ந்த
கடவுளரின் உண்டியலைக் காப்பதற்குக்
காவல்ஏன்? பூட்டும்ஏன்? விடையும் உண்டா?
ஆடியொன்று தேடிவந்தால் ஊரார் ஆடும்
ஆர்ப்பாட்டம் ஒன்றிரண்டா? கொஞ்சம் உள்ள
மாடுமனை விற்றேனும் திருவிழாவை
வாணவெடி கிளப்பியன்றோ தூள்செய் கின்றார்!
ஆடுகளை எருமைகளைப் பலியாய்க் கேட்போன்
ஆண்டவனா? அவன்தானா உயிர்கள் காப்போன்?
வாடுகின்ற பசிமழலை கதறும் போது
வகைவகையாய் அபிடேகம் ஏன்கேட்கின்றான்?
வாதாபி கணபதியின் ஊர்வலத்தில்
வன்முறைகள் வெடிப்பதுமேன்? மசூதி தன்னைச்
சேதாரம் செய்ததனால் குருதி யாறும்
தினம்பொங்கி ஓடுவதேன்? இராமன் என்போன்
ஏதோஓர் பாலத்தை அமைத்தான்: அஃதை
இடிப்பதனைத் தடுத்திடுவோம் என்றோர் கூட்டம்
சூதாகத் துடிப்பதுமேன்? எனவே மாளாத்
தொல்லையன்றிக் கடவுளரால் நன்மை உண்டா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|