பிட்டி. தியாகராயர், சி. நடேச முதலியார், டி.எம். நாயர் அஞ்சல் தலைகள் வெளியீடு
தில்லைவனம்
17.9.2008 அன்று சென்னையில், பிட்டி. தியாகராயர் (1852-1925), சி. நடேச முதலியார் (1875 - 1937), டி.எம். நாயர் (1868 - 1919) ஆகிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர்களின அஞ்சல் தலைகளை, நடுவண் அமைச்சர் ஆ. இராசா வெளியிட, தமிழக முதல்வர் கலைஞர் பெற்றுக்கொண்டார். கலைஞர் அவர்கள், “திராவிட முன்னேற்றக் கழகம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மக்களின் நலன்களை விட்டுக்கொடுத்துவிடாது'' என்றார்.
நடுவணரசு நடத்திவரும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்குரிய பிரிவினரை போதிய அளவு தேர்வு செய்ய முடியவில்லை என்றால், அந்த இடங்களைப் பொதுப்போட்டி இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் பொதுத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும். இப்படிச் செய்வதன்மூலம் நாம் நமது உரிமைகளை இழக்க முடியாது. இந்த உரிமைகள் நமக்கு மட்டும் ஆனவை அல்ல. எதிர்கால தலைமுறைக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் ஆனவை. இந்தியத் தலைமை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்துக்கு நல்ல பயன் ஏற்படும். இல்லாவிட்டால் இதுபோன்ற அஞ்சல் தலைகளை வெளியிடுவ தால் மட்டும் பெரும்பயன் விளையப் போவதில்லை என்றும் கூறினார்.
"இடஒதுக்கீட்டை முனை மழுங்கச் செய்யும், முயற்சிகளை நாம் முறியடித்து பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், பட்டியல் குலத்தினர் ஆகியோரைப் பாதுகாக்க வேண்டும்' என்றும் முதல்வர் கூறினார்.
சவுந்தர பாண்டியனார் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் பெயரால் சென்னை நகரில் அமைந்த பகுதி இன்று பாண்டி பசார் என்று சுருக்கப்பட்டுவிட்டது. காங்கிரசுத் தலைவர் குமரி அனந்தன் கேட்டுக்கொண்டபடி, இனி பாண்டி பசார் என்பது சவுந்தரபாண்டியன் கடைவீதி என்று அழைக்கப்படும் என்றும் அறிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் அஞ்சல்துறை உயர் அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
- து. தில்லைவனம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|