வெள்ளைக் காக்கைகள்
பாவலர் வையவன்
கற்சிலைக்கு முன்னால் நின்று
பக்தியோடு பாடிக்கொண்டு
இடக் கையால் மணியாட்டி
வலக்கையால் கற்பூரத் தட்டை
என்னாலும் ஆட்டமுடியும் சாமி ...
ஏராளமான மந்திரங்களை
மனப்பாடமாய் மூச்சிரைக்கக் கத்தி
நெருப்பிலே நெய்யூற்றிப் புகையாக்கி
கல்யாணமும் கருமாதியும்
என்னாலும் செய்யமுடியும் சாமி ...
அதெப்படிடா முடியும் அம்பி?
நீ சூத்திரனோல்லியோ ...
அதுக்குத் தகுதி வேண்டாமோ?
அப்படியா சரி... நான்
அய்.அய்.எம்.எஸ்., அய்.அய்.டி., அய்.அய்.எஸ்.,
இதுலல்லாம் சேர்ந்து படித்து
என் தகுதியை உயர்த்திக்கப் போறேன்.
அதுவும் முடியாதுடா அம்பி!
அப்புறம் அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட்லாம் எதுக்கு இருக்கு?
மண்டாட்டம் பேசறியே!
அதுக்கெல்லாம் திறமை வேண்டாமோ?
நூற்றுக்கு நூறு வாங்கணும்...
எழுபது, எண்பதெல்லாம்
போறாதுடா அம்பி!
உன்னைவிட மார்க்கு அதிகமா எடுத்த
ஓ.சி. கேண்டிடேட்ஸ் இருக்காளோல்லியோ
அவா படிச்சு அந்த வேலைக்கு வந்தாத்தான்
அந்த பதவிகளுக்கும் ஒரு கவுரவம்.
மணியாட்டனும்னா
தகுதி இல்லங்கறேள்
படிச்சு மேல வர்ரேன்னா
திறமை இல்லங்கறேள்
நாங்க வேற என்னதான் செய்யறது சாமி ...
நன்னா கேட்டேடா அம்பி! சமத்து
கோயிலுக்கு போனா
உண்டியல்ல காசப் போடு!
பூத்துக்குப் போனா
பொட்டியில ஓட்டப் போடு!
உசிருள்ள வரைக்கும்
ஓயாமப் பாடுபடு!
ஏதோ கெடச்சத சாப்டுட்டு
மெகா சீரியல் பாத்துண்டே சாவு!
இதெல்லாம் ஆண்டவனாப் பாத்து
அவாவாளுக்கு எழுதிவச்சதுடா அம்பி!
புரிஞ்சுதோன்னோ!
நல்லாப் புரிஞ்சுதுங்க சாமி!
நீங்க - தகுதி திறமைங்கற பேர்ல
கழுதைப் புண்ணைத் திங்கிற
காக்காக் கூட்டமுன்னு ...
த்தூ... போங்கடா!
நீங்களும்
உங்க தகுதியும்... திறமையும்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|