மலரட்டும் சம உரிமை ...
அவையரசு
எல்லாமே செய்வதாய் ஓட்டுபோடச் சொல்வீரே
நல்லாவே வென்றுவந்தால் ஆட்சியும் அமைப்பீரே
சொல்லாமல் செய்வதாய் சொன்னவற்றை மறப்பீரே
கல்லாதான் நிரம்பியது; குல்லாவே கவிழ்ந்ததய்யோ!
பொற்கால ஆட்சியயன்று புதுக்கதைகள் விடுவீரே
சொற்கோல நாவினிலே சுவைக்கோலம் இடுவீரே
தற்கால தமிழ்மனிதன் தமிழ்மறக்கச் செய்வீரே
போர்க்கோல மறவரினம் புகழ்மங்கி போனதய்யோ!
கரைவேட்டி தரைதட்ட தலைமட்டும் வானுயரும்
நுரைதள்ளும் போதையிலே இருள்மட்டும் புகழ்மறைக்கும்
உரையாற்றும் சொற்பொழிவால் ஒலிவாங்கிக் கதறியழும்
நரைதட்டும் தலைவரெலாம் அடிநாளில் தொண்டர்தானோ!
கட்சிக்கும் பதவிக்கும் தலைமுறைகள் அழித்தீரே
ஆட்சிக்கே அவருழைப்பை அடுக்கடுக்காய்ச் சுவைத்தீரே
மாட்சியுடன் வாழுதற்கே குடிகளை அமைத்தீரோ?
ஆட்சிதனில் மாற்றமுண்டு காட்சிமாற்றம் இல்லையய்யோ?
காலந்தான் நின்றிடுமா மணிக்காட்டி பழுதுபட?
பாலந்தான் உடைந்தாலும் பயணவண்டி சென்றிடுமா?
நாலுந்தான் தெரிந்தோரே நல்லுணர்ச்சி நாம்பெற்றால்
ஆளுந்தான் சமவுரிமை அந்நாளே பொன்னாளய்யா!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|