புலிப்பேச்சு
பாவலர் வையவன்
எண்பத்து ரெண்டுமுதல் ரெண்டாயிரத் தெட்டுவரை
என்னென்ன அரசியலின் கூத்து?-எல்லாம்
சிரிப்பாகத்தான் வருதுங்க பாத்து!
தேர்தலுக்குத் தேர்தலிங்கு புலிகள்பற்றிப் பேசுவதில்
மார்தட்டிக் கொள்ளும்தமிழ் நாடு-ஆட்சி
கிட்டும்வரை எழுதுமவர் ஏடு!
நெடுமாறன் வைகோவைப் பொடாவினிலே வைத்தவரே
கொடுக்கின்றார் புலிபற்றிப் பேச்சு-அம்மைக்கு
அப்படியோர் நிலைமைவந் தாச்சு!
ஆண்களொடு பெண்களுமாய்ப் புலியயல்லாம் களம்நின்று
மாண்டிடுவார் நாளும்போர் மூட்டம்-நம்தலைவர்
ஆடுகிறார் ஆடுபுலி ஆட்டம்!
ஆளுகின்ற சிங்களவன் தமிழர்களை மீனவரை
நாள்தோறும் கொல்கின்றான் அங்கே-கேட்பதற்கு
நாதியில்லை நேற்றுவரை இங்கே!
தமிழகத்து உறுப்பினர்தம் பதவிகளைத் துறந்துவிட்டால்
நடுவிலங்கு காங்கிரசே ஆடும்-திரைமறைவில்
போட்டுவந்த துணியவிழ்ந்து ஓடும்!
சிங்களரை மிரட்டுவதாய்ப் பம்மாத்து காட்டுவது
இங்குள்ள காங்கிரசின் மாயம்-ஒருநாளில்
வெளுத்துவிடும் நீலநரிச் சாயம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|