கார்த்திக் இராசாராம்
இராமியா
கார்த்திக் இராசாராம் 1985இல் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (அய்.அய்.டி.) இருந்து பொதுவியல் (Civil Engineering) பட்டம் பெற்று, பின் அமெரிக்காவில் எம்.பி.ஏ., படித்து அமெரிக்காவிலேயே வேலை செய்து கொண்டிருந்தவர். இவர் 2008ஆம் அண்டு அக்டோபர் மாதம் முதல் வார இறுதியில் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியாரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்நிகழ்ச்சியும், இதைப்பற்றி மற்றவர்கள் கூறியுள்ள கருத்துகளும் இரண்டு படிப்பினைகளை நமக்கு வழங்குகின்றன.
முதலில் 45 வயது நிரம்பிய கார்த்திக் இராசாராம் இக்கொடிய முடிவிற்கு வரக்காரணம், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி. இந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவருடைய செல்வமும் நிதி நிலைமையும் முற்றிலும் வற்றிவிட்டது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத ஒன்றான பொருளாதார நெருக்கடியில் பலர் மாட்டிக்கொண்டு சொல்லொணாத் துயரை அநுபவித்துக் கொண்டு உள்ளனர்.
முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை உழைக்கும் மக்களை அடிமையாகவே வைத்துக் கொள்கிறது. ஆனால் சுரண்டும் கூட்டத்தையும் நிம்மதியாக வாழவிடவில்லையே.
இப்படிப்பட்ட அமைப்பு தேவையா? இதற்குப் பதிலாக சோசலிசப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டால் உழைக்கும் மக்கள் அனைவரும் சுதந்தரமாகவும், சுகமாகவும் இருக்கலாம் அல்லவா? சுரண்டும் கூட்டத்தினரும் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட, உழைக்கும் வர்க்கமாக மாறி நிம்மதியாக வாழ்க்கையைத் தொடங்கலாமே? உழைக்கும் மக்கள் இல்லாமல் சுரண்டும் வர்க்கம் இருக்க முடியாது. ஆனால் சுரண்டும் வர்க்கம் இல்லாமல் உழைக்கும் மக்கள் நிலைக்க முடியுமே!
இரண்டாவதாக, கார்த்திக் இராசாராமைப் பற்றி அவருடைய பேராசிரியரும், முன்னாள் மேலதிகாரியும் தெரிவித்துள்ள கருத்துகளைக் கவனிக்கவேண்டும். அவருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர் டி.டி. நரேந்திரன் என்பவர் அவர் புத்திசாலியான பையன் என்று கூறமுடியாது என்றும் சுமாரான மாணவன் என்றும் கூறியிருக்கிறார். அவருடைய முன்னாள் மேலதிகாரியான கிரக் ராபின்சன் என்பவர், அவர் நம்பகத் தன்மை அற்றவர் என்றும், தொலைபேசியில் பேசினால் தவிர்த்து விடுவார் என்றும், அலுவலகக் கூட்டங்களுக்கு வராமல் இருந்து விடுவார் என்றும், சிலசமயம் தொடர்ந்து சிலநாள்களுக்கு எந்தவிதத் தகவலும் தராமல் அலுவலகத்திற்கு வராமல் இருந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதில் சிந்திக்க வேண்டிய விவரம் என்னவென்றால் நம் நாட்டு பேராசிரியர் டி.டி. நரேந்திரனும், அயல்நாட்டு கிரக் ராபின்சனும் கூறிய கருத்துகள் ஒத்துப் போகின்றன. ஆகவே அவை உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அப்படியானால் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிகவும் புத்திசாலியாக இல்லாத, சுமாரான அறிவுத்திறன்கொண்ட, ஒழுங்கீனமான ஒருவர் பார்ப்பனராக இருந்துவிட்டால் இடம் கிடைக்கும் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்தால் இந்நிறுவனத்தின் தரம் கெட்டுவிடும் என்று கதறுகிறார்களே! எப்படி? இப்பொழுதே அறிவுத் திறன் குறைந்தவர்கள், அதுவும் ஒழுங்கீனமானவர்கள் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? இதனால் கெடாத தரம், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்வதாலா கெடப்போகிறது?
ஒதுக்கீடு முறையில் வாய்ப்பு பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொதுப் போட்டியில் சென்ற உயர்சாதிக் கும்பலினரைவிடத் திறமைசாலிகள் என்று பல இடங்களில் மெய்ப்பித்து இருக்கிறார்களே! இதிலிருந்தே பொதுப்போட்டி முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கத் திறனற்றது என்று தெரியவில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களே! இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் மேலும் வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வலு உண்டாகட்டும். இந்திய நாட்டிற்கு திறமைசாலிகள் தேவை. ஆகவே இடஒதுக்கீடும் அவசியம் தேவை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|