கிருத்துவர்கள் மீதான தாக்குதல் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்டோர்
வே.மதிமாறன்
கிருத்துவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் என்று திரும்பத் திரும்ப ஒரு செய்தி இந்தியா முழுவதிலும் பேசப்படுகிறது. ஆனால் அது கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல. தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களே. இந்தத் தாக்குதல்கள் மதக் கலவரம் மட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதி இந்துக்கள் நடத்தும் வன்கொடுமை. இந்தியா முழுவதிலும் கிருத்துவர்கள் மீதான வன்முறை. இந்து அமைப்புகளால் பெரும்பாலும் உயர்சாதி கிருத்துவர்கள் மீதோ, இடைநிலை சாதி கிருத்துவர் மீதோ நடத்தப்பட்டதல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதுதான் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மலைவாழ் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கிருத்துவராக மாறுகிறார்கள் என்பதற்காக அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை. கிருத்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறித் தங்களின் அடிமைகள் கைமீறிச் செல்கிறார்கள் என்கிற காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும்தான்-நிலப்பிரபுக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்டவர்கள் போன்ற சமூகத்தில் உள்ள சில சாதி வெறியர்களால் மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறைகள் ஏவப்படுகின்றன.
ஸ்டெயின்ஸ் பாதிரியார் போன்ற தாழ்த்தப்பட்டவர் அல்லாத கிருத்துவர்கள் கொலை செய்யப்பட்டதுங்கூட, அவர்கள் மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வேலை செய்தார்கள் என்பதினால்தான். அதுபோலத்தான் தாழ்த்தப்பட்ட கிருத்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. அதே காரணத்திற்காகத்தான் சில நேரங்களில் கிருத்துவப் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட கிருத்தவர்கள்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில்கூட விழுப்புரத்தில் வன்னியக் கிுத்துவர்கள் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்களைக் கொடூரமான முறையில் தாக்கினார்கள்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கம்யுனிஸ்டுகள் யூனியன் அமைப்பதினால், கம்யூனிஸ்டுகளுக்கு நேர் எதிரானவர்கள் இந்து அமைப்புகள் என்ற காரணத்தினால், பல கிருத்துவ முதலாளிகள் பா.ச.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகளுக்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இரப்பர் தோட்ட முதலாளிகளாக உள்ள சிரியன் தேவாலயக் கிருத்துவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக, இந்து அமைப்புகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.
கிருத்துவ நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புடைய கிருத்துவரான ஜேப்பியார் போன்ற கல்வி வள்ளல்கள் இதுபோன்ற வள்ளல் தனங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் மாவோயிய வாதிகளாக இருப்பவர்கள் மிகப்பெரும்பாலும், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே. இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நேர் எதிரானவர்களாக இருக்கிற ஆதிக்க சாதி நில பிரபுக்களைக் கொன்று, நிலங்களைப் பிடுங்கி நிலமற்றவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக மாவோ இய வாதிகளை ஒன்றும் செய்ய முடியாத நில பிரபுக்கள் அவர்கள்மீது உள்ள சினத்தை அவர்கள் சார்ந்த சமூக மக்கள்மீது திருப்புகிறார்கள். உள்நாட்டுக் கூலிப் படையை ஏவிப் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்துக் கொன்று போடுகிறார்கள். இதுபோக, இயல்பாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், உயர் சாதிக்காரர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்கள்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பை இந்து அமைப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது இந்து அமைப்புகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வெறுப் புணர்வுகொண்ட உயர்சாதிக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்.
1991ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்ச்சி எழுந்தது. சாதி இந்துக்கள் துணை யில்லாமல், அவர்கள் தனித்து இயங்கத் தொடங்கினார்கள். தமிழகம் முழுக்க அம்பேத்கர் மன்றம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைய பொதுக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் சாதி இந்துக்கள் மத்தியில் பெரும் வயிற்றெரிச்சலை உருவாக்கி விட்டன. அந்த எரிச்சல்தான் பா.ச.க.வின் ஆதரவுப் போக்காகப் பேருரு எடுத்தது.
எனக்குத் தெரிந்து 17 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள வந்தவாசி யில் பா.ச.க.வில் பெருமளவில் பங்கெடுத்து, அதை வழிநடத்தி யோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவினரான முதலியார் சாதியைச் சார்ந்தவர்கள்தான். இவர்கள் வழிநடத்திய பா.ச.க. இசுலாமியர்களோடு இணக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள்மீதுதான் வெறுப்பைக் காட்டியது. இசுலாமியர்களின் பொதுக்கூட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை.
அம்பேத்கர் கூட்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நிறைய தடைகளை உருவாக்கினர். வாஜ்பாய், அத்வானி போன்றவர் களையயல்லாம் அழைத்து வந்து வந்தவாசியில் மாநாடும் நடத்தியிருக்கிறார்கள். (அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும், வணிகப் போட்டிக்காகவும் இந்து அரசியல்வாதிகளும்-இந்து முதலாளிகளும் ‘இந்து' என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையில் இறக்குவார்கள் என்பது வேறு.)
அதுபோக இந்தியா முழுவதிலும் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் இசுலாத்திற்கு எதிராக இந்து மதவெறியை நிறுவுவது போலவே, கிருத்துவத்திற்கு எதிராகச் செய்வதில்லை. அதற்குக் காரணம், சாதி மற்றும் வழிபாட்டு முறைகளில், பழக்க வழக்கங்களில், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றில் இந்துக்களுக்கு அணுக்கமாகவே நடந்து கொள்கிறார்கள் கிருத்துவர்கள்.
ஒரே சாதியில் இன்னும் நெருக்கமாகச் சொன்னால், ஒரே குடும்பத்தில் இந்துக்களும், கிருத்துவர்களும் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள். தமிழகத்து தென் மாவட்டங்களில், நாடார் சமுதாயத்தில் இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிருத்தவர்களாகவும், இந்துக்களாவும் பெருமளவில் இருக்கிறார்கள். தேவர் சாதியிலும் இப்படி இருக்கிறார்கள். எல்லாச் சாதியிலும் இப்படிக் கிருத்துவர்களும், இந்துக்களும் கலந்து புழங்கத்தான் செய்கிறார்கள். ஒரே சமூகத்தில் 100 விழுக்காடு கிருத்துவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மட்டும்தான். அதனால்தான் மண்டைக்காடு கலவரம் நாடார்களுக்கும், மீனவர்களுக்கு மிடையே நடந்தது. அது கிருத்துவர்களுக்கும், இந்துக்களுக்குமான கலவரம் என்றால், இந்து நாடார்கள் கிருத்துவ நாடார்களுக்கு எதிராக ஏன் இல்லை? கிருத்துவ நாடார்கள், கிருத்துவ மீனவர்களுக்கு ஆதாவாக ஏன் இல்லை?
இதுபோக, கிருத்துவ நிறுவனங்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும்-உலகளவில் இசுலாம் பற்றியும், உலக அரசியலில் பாலஸ்தீன விவகாரத்திலும் ஒத்த கருத்து நிலவுகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற கிருத்துவ நாடுகள் இசுரேலுக்கு ஆதரவாக, பாலஸ்தீனத்திற்கு எதிராக இருக்கிறது. அதுவே இந்து அமைப்புகள், கிருத்துவ நிறுவனங்களின் நிலையுமாக இருக்கிறது. (கிருத்துவர்களுக்கல்ல)
இவை எல்லாவற்றையும்விட கிருத்துவ நிறுவனங்களுக்கும், எழுப்புதல் கூட்டங்களுக்கும் எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறதோ அதே நாட்டில் இருந்துதான் இந்து அமைப்புகளுக்கும், ஆன்மீகப் பேரொளியாய் அறிவுரை சொல்லுகிற அய்டெக் இந்து சாமியார்களுக்கும் பணம் வருகிறது. இந்த மோசடி இந்துச் சாமியார்களுக்குக் கிருத்துவ நாடுகளிலும் பல ஆசிரமங்கள் உள்ளன. (வெளிநாட்டில் இருந்து, சுனாமி நிதியை வாங்கிச் சூறையாடியதில் இரண்டு பேருக்கும் சம பங்கு இருக்கிறது.) அதனால் இந்த இரு நிறுவனங்களுக்குள்ளும் ஒரு டெலிபதி ஒற்றுமை தவிர்க்க முடியாமல் இருக்கிறது.
ஆகவே பாதிக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள் கிருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் தாக்கப்படுவதில்லை. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதாலேயே தாக்கப்படுகிறார்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|