Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
மக்களுக்கான மருத்துவம் ஓமியோபதி
சே.கோச்சடை

சமூக மாற்றம் என்பது எல்லாத் துறைகளிலும் நடக்க வேண்டும். இப்போதுள்ள முதலாளிய வல்லாதிக்கச் சமூகம் தனக்கேற்ற மெய்யியல், பொருளியல், உற்பத்தி முறை, மருத்துவம், கல்வி பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தச் சமூகத்தைக் கட்டிக் காக்கும் பணியை அவை செய்கின்றன. கல்வியைக்கூடக் கடைச் சரக்காக்கிவிட்ட முதலாளியம் மருத்துவத்தை விட்டுவைக்குமா? மனித உயிர்களோடு விளையாடும் சூதாட்டமாக மருத்துவத்தை மாற்றிவிட்டது.

உலகின் பன்மயத்தை ஒழித்து ஒருமுனைச் சமூகமாக மாற்றுவதற்கு நாடோறும் முயலுகின்ற முதலாளியம் மருத்துவத்தின் பன்மயத்தையும் ஒழிக்க முயலுகிறது. ஒவ்வொரு நாட்டின் அமைப்பைப் பொருத்து மக்கள் தமக்கேயான மருத்துவ முறையைக் கொண்டுள்ளனர். ஆனால் முதலாளியம் பன்முக அடையாளங்களை அழித்துக் கொண்டுள்ளது. மருத்துவ முறைகளை ஆதாயம் ஈட்டும் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கு ஏற்ற மருத்துவ முறையாக அலோபதி உள்ளது.
எதிரிக்கு எது நல்லதோ அது நமக்குக் கெட்டது என்று பெரியார் கூறுவார். அதைப் போலச் சுரண்டும் வர்க்கத்துக்கு நல்லதான அலோபதி உழைக்கும் வர்க்கத்துக்குக் கெட்டது. இன்றைக்குத் தனியார்துறையில் வணிக மயமாகிவிட்ட மருத்துவமனைகளில் ஏழைகள் நுழைய முடியாது.

ஆயுர்வேத, சித்த மருத்துவமும் பொருட்செலவு பிடிப்பதாக உள்ளது. நாமே மருந்து தயாரிக்கத் தேவையான மூலிகைகள் தாராளமாகக் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மிகமிகக் குறைந்த பொருட் செலவில், பக்க விளைவு இல்லாமல் எளிதில் கற்றுச் செய்ய முடிவது ஓமியோபதி மருத்துவமே ஆகும். ஓமியோபதியின் பெயரால் பலர் அரைகுறையாக மருத்துவம் பார்ப்பதால் அம் மருத்துவத்தின்மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது. முறையாகக் கற்று ஓமியோபதியால் வளரவும், ஓமியாபதியை வளர்க்கவும் விரும்புகின்ற புரட்சியாளர் களுக்காகச் சில சொல்லுவேன்.

ஓமியோபதியைத் தமிழில் ஒல்லியல் மருத்துவம் என்பர். மற்ற மருத்துவ முறைகளில் நோயைத் தீர்க்க மருந்து கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் நோய் தீர்க்கப் பயன்படும் மூலிகைகள் எந்த இடத்தில், எந்தக் காலத்தில் விளைந்தன என்பதைப் பொருத்து அவற்றின் பண்புகள் அமையும். மரபுவழி மருத்துவத்தை மேம்படுத்திப் பயன்படுத்தும் கியூபாவில் மூலிகைகள் எந்தெந்த இடத்தில் விளையும், அவைகளின் மருத்துவப் பண்புகள் என்ன என்பதை முறைப்படி ஆராய்ச்சி செய்ததில், விளையும் நிலம், பாய்ச்சிய நீர், போட்ட உரம் ஆகியவற்றுக்கேற்ப அவற்றின் பண்புகள் அமைவதைக் கண்டனர்.

நம் சித்த மருத்துவத்திலும்கூட குறிப்பிட்ட நோயைத் தீர்ப்பதற்கான மூலிகைகளை எந்தெந்த இடத்தில் சேமிக்க வேண்டுமென்பதற்கான விதிகள் உண்டு. இக் காலத்தில் தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் புகை, நுகர்பொருள் கழிவுகள், வேதியியல் உரம், பூச்சி மருந்துகள் ஆகியவற்றால் விளைநிலமும், காற்றும், நீரும் மாசுபட்டுள்ளன. எனவே தூய்மை கெடாத சுற்றுச்சூழல் நிலவிய அந்தக் காலத்தில் ஒரு மூலிகைக்கு இருந்த பண்புகள் இக்காலத்திலும் இருக்காது. அந்த மூலிகைகள் அக்காலத்தில் தீர்த்த நோய்களை இக்காலத்தில் போக்கமாட்டா. நலமாக்கும் ஆற்றல் மாறிவிடும். அதேபோல ஒரு மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் நுண்ணுயிர்கள் அதற்குப் பழக்கமாகி, நோய் எதிர்ப்புத் தன்மை பெற்றுவிடும். அதைவிடக் கூடுதல் வீரியமுடைய மருந்துகள் தேவைப்படும்; அல்லது வேறு மருந்தை நாடவேண்டியிருக்கும்.

ஆனால் ஓமியோபதி மருந்துகள் நலமான மனிதரிடம் கொடுத்து அவை தோற்றுவிக்கும் துயரக்குறிகள் வருகிறபோது கொடுத்துத் துயர் நீக்கி முழு நலம் அடையச் செய்பவை. எனவே எக்காலத்துக்கும் இம் மருந்துகள் பொருந்தும். ஒரு மனிதரிடம் ஒருவகையான குறிகள் தோன்றினால்-அவை எந்தக் காரணத்தால் தோன்றினாலும்-அதற்கு ஒரு மருந்தே தரப்படுகிறது. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய மெய்யியலாகும். இதில் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி என்று பொத்தாம் பொதுவாக நோய்க்குப் பெயரிட்டு அதற்கு மருந்து தரப்படுவதில்லை. முழுமனிதரிடம் உண்டாகும்

உடற்குறிகளுடன் மனக்குறிகளைச் சேர்த்து முழுமையைக் கண்டறிந்து மருந்து தேர்வு செய்யப்படுகிறது. எனவே, பத்துப் பேருக்கு ஒருவகைக் காய்ச்சல் அடித்தால், பத்துப் பேரின் மனக்குறிகள் அல்லது முதன்மைக் குறிகள் மாறிவந்தால் பத்து மருந்துகள்-ஒவ்வொருவருக்கும் ஒரு மருந்து-வரும். அதைப் போல குறிகளின் முழுமையைப் பொருத்தும் அவை மாறும் தன்மையைப் பொருத்தும், ஒருவருக்கு வயிற்று வலியைத் தீர்க்கும் மருந்து இன்னொருவரின் புற்றுநோயைப் போக்கும்.
ஓமியோபதி அறிவியலும், கலையும் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுவார்கள். மருந்து கொடுத்து மெய்ப்பித்தல், வீரியப்படுத்தல் ஆகியவை அறிவியல் முறையில் செய்யப்படுகின்றன. குறிகளை வைத்து மருந்து தெரிவு செய்யப்படுவதால் அதிகச் செலவுபிடிக்கும் மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை.

துயர்க் குறிகளைத் துயர்படுவோர் மருத்துவரிடம் கூறுவதும், அதை மருத்துவர் உள்வாங்கி மதிப்பிடுவதும் அகவயமானது. அவரவர் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்ப மதிப்பிடப்படும். ஒரு காட்சியை உள்ளவாறே படம்பிடிப்பது ஒளிப்பட அறிவியல். அக்காட்சியை ஓவியர்கள் உணர்ந்தவாறு தீட்டுவது ஓவியக்கலை. ஒரே காட்சியைப் பல்வேறு ஓவியர்கள் தீட்டும் ஓவியங்கள் எல்லாம் ஒன்றுபோல அமைவதில்லை. அதைப்போல ஓமியோபதியர்கள் ஆர்கனான் ஆஃப் மெடிசின் கூறும் மெய்யியல் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பதால் அதை அறிவியல் என்றும், அவர்கள் உணர்ந்தவாறு மருந்தைத் தேர்வு செய்வதால் கலை என்றும் கூறுவார்கள். ஒருசில மருத்துவர்கள் மனக்குறிகளுக்கு முதன்மை அளிப்பர்.

வேறுசிலர் உடற்குறிகளுக்கு முதன்மையளிப்பர். குறிகளுக்கு மதிப்பெண் வழங்குவதும் பட்டறிவுக்கும், படிப்பறிவுக்கும் ஏற்ப மாறுபடும். மனக் குறிகளும் உடற் குறிகளும் சேர்ந்த முழுமைத்துவஅடிப்படையில் தேர்வு செய்யப்படும் மருந்துகள் வெவ்வேறாக அமைய வாய்ப்புண்டு. மருந்தின் பண்புகளை விளக்கும் நூல் ‘ருந்துப் பண்பேடு' அல்லது ‘ருந்தியல் களஞ்சியம்' எனப்படும். ஓமியோபதி மெய்யியலை ஊன்றிப் படித்தபிறகு ஒருவர் மருந்துப் பண்பேட்டில் மூழ்கித் திளைக்க வேண்டும். ஒருசில மருந்துகளை நாள்தோறும் கற்க வேண்டும். நாள்தோறும் புதிதாகச் சில மருந்துகளையாவது கற்க வேண்டும், என்று மேதைகள் தி.சா. இராஜூ, த.ச. இராசாமணி போன்றோர் கூறுவர். இப்படிப் படித்தபிறகு நம்மிடம் வருகிற துயரைக் காணும்போது துயர்க் குறிகளைத் தொகுத்தபிறகு ஒரு மருந்தைக் காண்பதைப் போலிருக்கவேண்டும், "அதோ சல்ஃபர் வருகிறார்' என்பதைப் போல உணரவேண்டும்.

எல்லா அறிவியல் துறைக்கும் ஒரு மெய்யியல் அடிப்படை உண்டு. ஓமியோபதி மெய்யியலான "ஆர்கனான் ஆஃப் மெடிசினில்' 291 மணிமொழிகள் உள்ளன. மணிமொழிகளைப் போலவே அவற்றுக்கு வில்லியம் போயரிக் எழுதியுள்ள விளக்க உரைகளும் சிறப்பானவை. அவைகளையும், ஆழந்து பயில வேண்டும். அடிப்படை மெய்யியலை அறிந்து மருத்துவம் பார்த்தால் ஓமியோபதியை வளர்க்க முடியும். ஓமியோபதியால் வளரவும் முடியும்.

இந்த இரண்டைப் போலவே இன்றியமையாத மூன்றாவது நூல்தான் மருந்துகாண் பேரேடு ஆகும். மருந்துப் பண்பேட்டையும், மெய்யியலையும் நன்கு கற்ற மருத்துவருக்கு மருந்து காண்பேரேடு இன்றியமையாததில்லை. எனினும் எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பதும், திரும்ப நினைவுக்குக் கொண்டுவருவதும் எளிதில்லை. இதற்காகவே மருந்துப் பண்பேட்டை வைத்திருக்க வேண்டும் என்கிறோம். ஓமியோபதி வல்லுநர்கள் தம் பட்டறிவில் கண்ட துயர்க் குறிகளை வகைப்படுத்தி அவைகளுக்கு வழங்கிய மதிப் பெண்களையும் சேர்த்து எழுதப்பட்டதே மருந்து காண் பேரேடு ஆகும்.

முதல் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஜே.டை. கெண்ட் மருந்து காண்பேரேட்டையும், பிறகு போயரிக் மருந்து காண் பேரேட்டையும் ஊன்றிப் பயில வேண்டும் என்பர். பிற வல்லுநர் களின் மருந்து காண் பேரேடுகளும் உண்டு. படிப்பது நன்று. இந்த நூல்களை எல்லாம் எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஹானிமன், ஜே.டை. கெண்ட், போயரிக், போனிங் ஹாசன், ஆலன், வித்தல்காஸ் டி.எஸ்., அய்யர் போன்ற பல மேதைகள் பல நூல்களை எழுதியுள்ளனர். மருத்துவத்தை மக்களுக்காகச் செய்ய நினைத்த / நினைக்கின்ற ஈகிகள் நம் நாட்டிலும் உண்டு. அந்த வகையில் ஓமியோபதியைப் பரப்பிய பெருமை வங்கத்துக்கும், தமிழகத்துக்கும் உண்டு.

மரு. மூர்த்தி, மரு.வி.எஸ். சுப்பிரமணியன், மரு.தி.சா.இராஜூ, மரு.த.சா. இராசாமணி, மரு. மர்சியால், மரு. க. கோவிந்தன், மரு. விக்டர், மரு. கே. இராஜூ, மரு.அம்பலவாணன் போன்ற பலர் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும், தமிழில் புதிய நூல்களை எழுதியும், தமிழுக்கும், மக்களுக்கும் அரும்பணி ஆற்றியுள்ளனர். இதைப்போல இன்றைக்கு ஓமியோபதி மருத்துவர்கள் தம் பட்டறிவைத் தொகுத்து எழுதி வைக்கவேண்டும். இப்படி முறையாகக் கற்று எளிதில் நடைமுறையில் கையாளக் கூடிய ஓமியோபதியில், இன்றியமையாத மருந்துகளை ஒரு சிறு பையில் எடுத்துச்செல்ல முடியும். எனவே அடிப்படை ஏழை மக்களிடம் சமூகப் பணியாற்றுகிறவர்கள். சமூக நோய்களைத் தீர்ப்பதோடல்லாமல் அம் மக்களின் துயரையும் அகற்றி உடலையும் ஓம்ப முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com