Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
உலகத் தமிழர்களுக்கு முகம் தந்தவர்களை அழிய விடாதீர்கள்
உலகத் தமிழர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் வேண்டுகோள்!
வே. ஆனைமுத்து

பண்டைத் தமிழர்கள் இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்தது, வங்கக் கடலில் கப்பல்களைச் செலுத்தியது, கடாரத்தையும், இலங்கையையும் வென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். புறநானூறு காட்டும் தமிழ் மறத்தி புலியை முறத்தால் அடித்ததும் அந்தக் காலம். அப்படி அடித்த தமிழச்சி தான் மறத்தி என்று கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஒரோ தடவை எதிர்பாராமல் நடப்பது. அது இன்றும் நடக்கிறது.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி''-என்பது வெறும் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவனால் பாடப்பட்டது. அவன் கற்பனையில் மிதந்தவன். ஏன்? அவனேதான், “மேல் மூவரும் மனம்புகல, வாய்மையான் வழி ஒழுகின்று''-என்று எழுதி, மேல் வருணத்தார் மூவருக்கும் அவர்களின் மனம் பூரிக்கும் வண்ணம் உண்மையாகத் தொண்டு செய்வதே வேளாண் மாந்தர் கடன் என்று, அதே புறப்பொருள் வெண்பா மாலையில் பாடிவைத்த மரத்தமிழனும் ஆவான்.

தமிழன் வருண வேறுபாட்டுக் கொள்கையை அன்றே ஏற்று வாழ்ந்தான். தமிழர் ஓரினம் என வாழ முடியாமல் பிரித்து வைத்தது வருணம்தான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பங்காளிச் சண்டை போடவும், நாடுகளை இழக்கவும் அதுவே காரணம். இன்றும் பங்காளிச் சண்டைக்கு அடிமைப்பட்டிருப்பவன் தமிழன்தான். தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வாழ்பவர்கள்-ஈழத்தில் தொன்று தொட்டு வாழ்பவர்கள்; இலங்கை, மலேசியா, பர்மா, தென் ஆப்பிரிக்கா, ஜாவா, சுமத்ரா என 60 நாடுகளில் வாழும் ஒரு கோடித் தமிழர்கள்-புலம் பெயர்ந்த தமிழர்கள்.

இவர்கள் எல்லோரும் பங்காளிச் சண்டையில் கை தேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்கள் இதில் மிகவும் பெயர் பெற்றவர்கள். இருப்பினும் இவர்களிடையே முளைத்த தம்பி பிரபாகரன்தான் உலகத் தமிழர்களுக்கு இன்று முகம்-முகவரி கொடுத்தவன்.
எல்லா வல்லமைகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரம் படைத்த ஒரு தனிச் சுதந்தர இலங்கை நாட்டு அரசுக்கு முகம் கொடுத்து, அவர்களுக்குச் சிம்மசொப்பனமாக உருவெடுத்து, ஈழமக்களை நசுக்க வந்த வலிமையான இந்தியப் படையையும் புற முதுகு காட்டி ஓட்டிவிட்ட வரலாற்றுப் பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே உண்டு. அவர்களே இன்று உலகத் தமிழரின் முகமும்-முகவரியும் ஆவர்.

அந்த முகம் சிதைக்கப்பட தமிழகத் தமிழர்களும், இவர்களை நல்ல அடிமைகளாக வைத்துக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தும் பார்ப்பன-பனியா அரசைத் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மேய்க்கும் நேருவின் குடும்பமுமே மிகப் பெரும் காரணம். இப்படிச் சொல்லுவது அடுக்குமா என்று எல்லோரும் எண்ணலாம். இந்தியாவை விட்டு 1947இல் வெள்ளையன் வெளி யேறினான். காஷ்மீர் ஒரு சிக்கலாக இருக்கவேண்டும் என்றே கருதி, அப்படியே விட்டுவிட்டுப் போனான், வெள்ளையன். அதைத் தீராத சிக்கலாக ஆக்கிய பெருங்கேடர் காஷ்மீரிப் பண்டிதப் பார்ப்பனர் நேருதான்.

இலங்கையை விட்டு 4.2.1948இல் வெளியேறினான், ஆங்கிலேயன். அவனே எழுதிவைத்துவிட்டுப் போன-சாலிஸ்பரி எழுதிய இலங்கை அரசியல் சட்டம், அங்கு தொன்றுதொட்டு வாழும் ஈழத் தமிழருக்கும், 1830க்குப் பிறகு நிரந்தரமாக அங்கு வாழும் தோட்டத் தொழிலாளத் தமிழர்க்கும் எந்தப் பாதுகாப்பும் தரவில்லை. தோட்டத் தொழிலாளத் தமிழர்கள் நாடற்றவர்கள்-குடியுரிமை அற்றவர்கள்-Stateless என, 1948இலேயே சட்டம் செய்தான் சிங்ளவன். அதைத் தட்டிக்கேட்க எல்லா உரிமைகளையும் பெற்றிருந்த பண்டித நேரு அப்படிச் செய்யவில்லை.

அன்று டில்லித் தலைநகர்த் தலைமைச் செயலகத்தில் கொடிகட்டிப் பறந்த தமிழ்நாட்டு-மலையாளத்துப் பார்ப்பனர்கள் நேருவை அப்படிக் கேட்கத் தூண்டவில்லை. ஏக இந்தியா பேசும் தமிழ்நாட்டுப் பாரத மாதா புத்திரர்களும் தட்டிக் கேட்கவில்லை. இந்த 2008இலும் வாழ்விட உரிமை-வாக்குரிமை பெறாத தோட்டத் தொழிலாளர் அங்கு பல இலக்கம் பேர் உள்ளனர். அவர்களிடையே 10.6.2005 முதல் 23.6.2005 வரை ஊடாடிய நான் இதை அறிந்தேன்.

1956, 1972களில் தமிழ் மொழி உரிமையைப் பறிக்க-ஈழத் தமிழ் இளந் தலைமுறையின் வாழ்வுரிமைக்கு உலை வைக்க சிங்களவன் செய்தான். இவற்றைப் முதலானவற்றைப் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் கவலைப்படவில்லை. தேசியத் தமிழர்கள், அது அந்த நாட்டு-அயல்நாட்டு நடப்பு என்று கை கட்டி வாய் பொத்தி நின்றார்கள். ஈழத் தந்தை செல்வநாயகத்துடன் 26.7.1957இலும், 25.3.1965இலும் செய்துகொண்ட தமிழர் உரிமைக் காப்பு ஒப்பந்தங்களைச் சிங்களவர்கள் கிழித்துப் போட்டார்கள். அப்போது அண்டை நாட்டுப் பிரதமர்களாக விளங்கிய நேருவோ, சாஸ்திரியோ, ஏனென்று கேட்கவில்லை. கேட்டிருக்க வேண்டிய, பாரம்பரிய அரசியல்-பண்பாட்டுத் தொடர்பு இரு நாடுகளுக்கு இடையே இருந்தும் கேட்கவில்லை.

இதற்குப் பின்னர், 14.5.1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஒட்டி, தனி ஈழம் சமைப்பதற்காகத் தேர்தல் களத்தில் புகுந்த தமிழீழத் தலைவர்கள் தலைமை, பதவி, பணம், மதுப் புட்டி முதலான வசதிகளுக்கு அடிமைப்பட்டுப் போனார்கள். தமிழனின் தன்னலப் புத்தியைப் புரிந்துகொண்ட கிழட்டு நரி செயவர்த்தனே, அங்கு 1979இல் அவசரகால ஆட்சியை அறிவித்து, ஈழத் தாயகத் தமிழர்கள் உயிருக்கும் மானத்துக்கும் அஞ்சி ஊரைவிட்டே ஓடச் செய்தார். வசதியும், படிப்பும் உள்ளவர்கள் தொலைதூர நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர்; நடுத்தர ஏழை மக்கள் தாய்த் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்.

இங்கு வந்த ஈழத் தமிழர்களுக்குப் பிரதமர் இந்திராகாந்தி உதவினார் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் உளவுக் குழுக்கள் மூலம் வேவும் பார்த்துக் கொண்டு, அவர்களைப் பிரித்தே வைத்தார், அவர். இங்குள்ள தமிழர்களும், ஈழத் தமிழர்களைப் பிரித்தே வைத்தார்கள். அப்படி ஏற்பட்ட பிரிவினையும், நரிக்குணம் மண்டிய செயவர்த்தனாவின் தந்திரமும் எந்த முன் அநுபவமும் இல்லாத கற்றுக்குட்டியான இராசிவ் காந்தியை, சிங்களவனுக்குத் துணை செய்வதற்காக இந்திய அமைதிப்படையை அனுப்பத் தூண்டின.

பிரதமர் என்ற நிலையில் அங்கே சென்ற இராசிவ் காந்தியை வரவேற்கும் வேளையில் துப்பாக்கியின் பின்புறத்தால் சிங்களப் படைவீரன் ஒருவன் ஓங்கி அடித்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டு, திக்சித் (Dixit) என்ற இந்தியத் தூதுவர் மூலம் பிரபாகரனைக் கொன்றுவிடவும் ஆலோசனை கூறி, ஏமாந்து போய், இங்குவந்து பதவியை இழந்தார், இராசிவ்காந்தி, பிரதமர் விக்கிரமசிங்கே பதவியை விட்டுப்போய், சந்திரிகா குமாரதுங்கா பதவியில் இருந்த காலத்தில்தான் 27.5.2005இல், நான் கிளிநொச்சியை அடைந்தேன்.

2004இல் இலங்கையை நாசப்படுத்திய ஆழிப்பேரலை அழிவுக்கு உள்ளான தமிழர், சிங்களர் மறுவாழ்வு பெற்றிட உலகநாடுகள் அளித்த தொகையைப் பயன்படுத்தி இலங்கை அரசும்-விடுதலைப் புலிகளும் இணைந்து அவரவர் பகுதியில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தையே 23.6.2005இல் சிங்களவர்கள் எதிர்த்தார்கள். இதையும் நான் நேரில் அங்கே பார்த்தேன்.

இன்று அதிபராக உள்ள மகிந்த இராசபக்சே 2005 நவம்பரில் பதவி ஏற்றார். அவர் அமர்த்திய அனைத்துக் கட்சிப் பேராளர்களின் (APRC) குழு அளித்த அறிக்கை, முதலில் 1987இல் இராசிவ் காந்தி-செயவர்த்தனே செய்துகொண்ட ஒப்ந்தத்தையே காற்றில் பறக்கவிட்டது. அதுகண்டு வெகுண்டிருக்க வேண்டியவர் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். ஆனால் அதற்கு மாறாக-மாமியார் வீட்டுக்கு வரும் மருமகளைப் போல, நினைத்த போதெல்லாம் இராசபக்சே இந்தியாவுக்கு வரவும், போர்ப்படை உதவி கோரவும், பெறவும் வழிவிட்ட கேடர் இன்றைய இந்தியப் பிரதமரே ஆவார். அத்துடன் இலங்கை அனைத்துக் கட்சிப் பேராளர்கள் குழுவின் தீர்மானத்தையும் இந்தியப் பிரதமர் வரவேற்று ஆதரித்தார். அதாவது சிங்களவர்களுக்கு-இராசிவ் காந்தியைவிடப் பெரிய கையாளாக இன்றைய இந்தியப் பிரதமர் மாறினார்.

இவருக்குப் பாதுகாப்பு அமைச்சராக வந்த ஏ.கே. அந்தோணியும் வெளிப்படையாக, இலங்கை அரசுக்கு இந்திய அரசு போர்ப்படை உதவி அனைத்தையும் செய்யும் என்று 19.6.2007இல் வெளிப்படையாக அறிவித்தார். பயங்கர வாதத்தை ஒடுக்க ஆயுதம் தருவோம் என்றே அவர் அறிவித்தார். இந்தத் துணிச்சலில்தான் இராசபக்சே அரசு அங்கே-”புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுச் சரண் அடைய வேண்டும்; விடுதலைப் புலிகளைக் கொன்று பயங்கரவாதத்தை அழிப்பேன்; பிள்ளையன் இருப்பது போலப் புலிகளும் சட்டமன்ற அரசியலுக்கு வந்துவிடட்டும்'' என்று ஆணவத்தின் முகட்டின்மேல் நின்று கொக்கரிக்கிறார்.

இது மன்மோகன் சிங்கிற்கு-புஷ்´ன் கைவாணமாக ஆகிவிட்ட இவருக்கு இனிப்பாக இருக்கிறது. ஆனால் தமிழகத் தமிழ் மக்களுக்கு-உலகத் தமிழ் மக்களுக்கு இது நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது; ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் வாழ்வைக் குலைத்து அடிமை நிலைக்குத் தள்ளுவதாக இருக்கிறது. இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, காணாமற் போன தமிழ்நாட்டுத் தேசியத் தமிழர்களுக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. புலிகளின்பாலும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையிலும் அக்கறையுள்ள தமிழர்கள், அவர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமனதோடு ஆதரவு தரமுடியாமல் அவர்களைத் தடுமாற வைக்கிறது.

உலகத்தின் எந்த மூலையிலாவது பயங்கரவாதத்தை ஒழித்திட அமெரிக்காவால் முடிந்ததா? பயங்கரவாதம் தோன்றிட அடிப்படையே சுரண்டல்தான்-இன ஒடுக்கல்தான்-மொழி உரிமை மறுப்புத்தான். ஒரு வீட்டில் மகனும் மகளும் எதிர்பார்க்கும் உரிமைகளைத் தர அப்பனும், அம்மாவும் மறுத்தால், அவ் வீடே ஒரு பயங்கரவாதக் களம் ஆகிறது. ஓர் இனத்தின் உரிமையை இன்னொரு இனம் பறிக்கிறபோது பயங்கரவாதம் எப்படி ஒழியும்?

1927 முதற்கொண்டும், 1956 முதற்கொண்டும் ஈழத் தமிழரின் உரிமைகளைப் பறித்தும் மறுத்தும் வருகிற வன் னெஞ்சச் சிங்களக் காடையர்களுக்கு எதிரான பயங்கரவாதம் எப்படி ஒழியும்? ஏன் ஒழியும்? உரிமை மறுக்கப்படுகிறவரையில் பயங்கரவாதம் ஒழியாது; ஒழியக்கூடாது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், இந்திய வல்லாதிக்கப் பார்ப்பன-பனியா ஆட்சியினர்க்கும் இது நன்றாகப் புரிய வேண்டும். ஏன்? அரசியல் வராமல் தீர்வு-ஈழத் தமிழர்க்குத் தனி அரசியல் உரிமை வழங்கப்படாமல், அப்படி வழங்கமறுத்தால் போரிட்டு அதைப் பெற முயலாமல், எப்படி பயங்கரவாதம் ஒழியும்?

உலகமே நன்றாகப் பார்த்திருக்க-வானூர்திப் படை, கப்பல் படை, காலாட்படை என முப்படைகளையும் முழுவீச்சில் ஏவி-வன்னி, ஓமந்தை, முகமாலை, மணலாறு, இரணமடு ஏரி, இங்கெல்லாம் குண்டுகளை வீசி ஆயுதம் தாங்காத அப்பாவி மக்களையும், சில விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசு கொன்று குவிப்பது எதற்காக? 22.2.2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது முதற்கொண்டும், 2005 நவம்பரில் இராசபக்சே பதவிக்கு வந்தபிறகும் விடுதலைப் புலிகளின் அரசியல் கோரிக்கைக்குச் சிங்கள அரசு முன்வைத்த அரசியல் தீர்வு என்ன?

இலங்கைக்கு ஆயுதங்களும், வானூர்தி ஓட்டுநர்களும், ராடார்களும், ராடார் பொறியாளர்களும் வேண்டும் என்று கேட்க வரும் இராசபக்சேவிடம், தமிழர்களின் வரிப்பணத்தையும் வாக்குச் சீட்டு ஆதரவையும் பெற்றுக்கொண்டு இயங்கும் இந்திய அரசின் பிரதமர்-"ஈழத் தமிழர்க்கு இலங்கை அரசு வழங்கப் போகும் உரிமை என்ன?' என்று ஏன் கேட்கவில்லை? இது மட்டுமா?

தன்னாதிபத்திய இந்தியாவின் குடிமக்கள் தமிழக மீனவர்கள். கடலில் இந்தியாவுக்கான எல்லையைக் கடந்தாலே, இலங்கைக்கான எல்லையில்தான் இவர்கள் புகுவார்கள். அப்படிப் புகுவதும் அங்கே மீன்பிடிப்பதும் தவறு என்றால், மீனைப் பறிமுதல் செய்துகொண்டு, படகுகளைப் பற்றி வைத்துக்கொண்டு, மீனவர்களைக் கைது செய்து விசாரணை செய்து தண்டனை வழங்கத்தானே சிங்கள அரசுக்கு உரிமை உண்டு? அதற்கு மாறாகக், கண்டவுடன் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றுவிட அவர்களுக்கு ஏது உரிமை? அப்படிச் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு, அதற்குப் பிறகும் இலங்கை அரசுக்கு ஆயுதம்தர இந்திய அரசுக்கு ஏது உரிமை?

இலங்கைச் சிங்கள மீனவர் இந்தியக் கடலில் தப்பி நுழைந்து மீன்பிடிக்கவில்லையா? அவர்களில் ஒருவரையேனும் இந்தியக் கடலோரக் காவல்படை சுட்டது உண்டா? அப்படிச் சுடுவது நியாயமா? இல்லை. இவ்வளவு அப்பட்டமான உண்மைகள் இருக்க, கச்சத்தீவையும், மீன்பிடி உரிமையையும் இலங்கைக்குக் கமுக்கமாக விட்டுக்கொடுத்த வன்னெஞ்ச இந்திய அரசுக்கு, அப்படிச் செய்ய உரிமை கொடுத்தது யார்? தில்லித் தலைமைச் செயலகத்திலுள்ள பார்ப்பன-பனியா உயர் அதிகாரிகளும், இந்திராகாந்தியும்தான் காரணம் என்றால்-அது 2008இலும் நீடிக்க வேண்டும் என்றால், இந்திய அரசில் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அடங்கிக் கிடக்கவேண்டிய தேவை என்ன?

2005 நவம்பருக்குப் பிறகு, ஈழத் தமிழர்பேரிலும்-குறிப்பாகப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக் களப்புப் பகுதிகளிலும் கண் மண் தெரியாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட முப்படைத் தாக்குதல் நடக்கவும், நீடிக்கவும் எல்லா வகைகளிலும் துணைநிற்கிற பிரதமர் மன்மோகன் அரசுக்கு வேண்டுகோள் மட்டும் விடுத்த நம் தமிழக முதல்வர் 6.10.2008இல் இப்படிக் கூறித் தட்டிக்கேட்டார்.

மத்திய அரசு டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, இலங்கைத் தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை அவர் மூலமாகத் தெரிவித்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். (முரசொலி, 8.10.2008)
இவ்வேண்டுகோளின்பேரில் பிரதமரோ, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்சியோதான் உடனடியாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழரின் பேரில் அக்கறை இருந்திருந்தால், பிரணாப் முகர்சியே அடுத்த நாள் நேரில் சென்று, அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் ரோகிதா பொகொல்ல காமாவிடம் விவாதித்திருக்க வேண்டும், அல்லவா?

இங்கேதான் இரகசியம் இருக்கிறது. இந்திய அரசு தந்த ஆயுதங்களைக் கொண்டு, விடுதலைப் புலிகளைக் கொன்று குவியுங்கள் என்று ஏவிவிட்ட திருடர்களே இந்திய அரசு அமைச்சர்கள்தான். எனவேதான், இவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கிய-இலங்கை பற்றிய எல்லா ஆவணங்களையும் நன்றாகப் படித்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் என்கிற உயர் அதிகாரி இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரிக்கை செய்ய ஏற்பாடு செய்தனர்.
அவர் செய்த எச்சரிக்கையின் உள் அடக்கம் என்ன?

அதாவது “கொஞ்சம் அடக்கிச் செயல்படுங்கள், ‘Lanka asked to show Restraint’ (The Economic Times, 7.10.2008 Delhi) என்று இலங்கை அரசுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வளவுதான். அதன் பொருள் என்ன?. அதாவது, கடுமையான தாக்குதல் தொடுத்து கொடுமையாகக் கொல்லாதீர்கள்; மெதுவாக மெதுவாக அவர்களைக் கொல்லுங்கள் என்பதுதான் எம்.கே. நாராயணன் விடுத்த வேண்டுகோளின் உள்ளடக்கம். “முப்படைத் தாக்குதலை நிறுத்துங்கள். ஈழத் தமிழர்க்கான அரசியல் தீர்வுக்கு வழிகாணுங்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு எந்த வடிவிலும், போர்ப்படை உதவியைச் செய்ய மாட்டோம்'' என்று, பிரதமர் மன்மோகன்சிங் மட்டுமே சொல்ல முடியும்; அவர் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும்.

மானமும் பொறுப்பும் உள்ள தமிழர்களும்-பொறுப்பும் கவலையும் உள்ள தமிழ்நாட்டு புதுவை மாநிலத்து 58 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைத்தான் செய்யும்படி பிரதமரிடம் வற்புறுத்தவேண்டும். இந்த வடிவில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக வேண்டு கோள்விட முதல்வர் கலைஞருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இப்படி நாடாளுமன்றத்தில் உடனடியாக அறிவியுங்கள் என்று பிரதமரை வேண்டிக்கொண்டு தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட முழு உரிமை முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. அங்ஙனம் அவர்கள் செய்ய வேண்டும் எனப் பணிவுடன் வேண்டிக் கொள்ளுகிறோம்.

இதுவே, குறைந்தபட்ச கோரிக்கைதான். இந்தியஅரசு தமிழகத் தமிழரைத் துச்சமாக மதிக்கிறது-ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் இந்திய அரசு செய்கிறது என்பதை ஏற்கெனவே மகிந்த இராச பக்சேவும் மற்றும், இப்போது அவருடைய தம்பியும் அவருடைய மூத்த ஆலோசகருமான பாசில் இராசபக்சேவும் வெளிப் படையாக அறிவித்துவிட்டனர். அந்த அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது :

“இத்தீவு நாட்டில் மகிந்த இராசபக்சே அரசு மேற்கொண்டுள்ள போரின் விளைவாக ஏற்பட்ட-மானிட உரிமை அடிப்படையிலான-புது தில்லி தெரிவித்த கவலையைப் போக்க சில நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்யும் என்றும்; தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க அதிகபட்சமான ஆதரவை இந்தியாவிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை உறுதிசெய்தும், சண்டே அப்சர்வர் (12.10.2008 இதழ்) என்ற அரசு வார ஏட்டுக்கு அளித்த நேர்காணலில் பாசில் இராச பக்சே தெரிவித்துள்ளார்''.

“E. Muralidhar Reddy Colombo : Maintaining that Srilanka has gat ‘mazimum Support’ from India in crushing the LTTE, Basil Rajapaksa, a senior advisor to the President has said that the Mahinda Rajapaksa government would take ‘some measures’ to address concerns of New Delhi over humanitarian Issues triggered by the ongoing war in the Island nation. - In an interview to the state run weekly, “Sunday Observer”, 12.10.2008.

இந்தியப் பார்ப்பன-பனியா ஏகாதிபத்திய அரசின்-பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசின் முகமூடியைப் படார் என்று, பாசில் இராசபக்சே இதன்மூலம் கிழத்தே போட்டார். இந்தச் சூழ்நிலையில், ஈழவிடுதலை ஆதரவு பற்றிய கவலையும், பொறுப்பும் உள்ளோர் ஒரு செய்தியை நன்கு மனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

பிரதமர் இந்திராகாந்தி 1971-1975இல் பங்களாதேஷ் விடுதலைபற்றி எடுத்த நிலைப்பாடும், 1981-1984இல் ஈழப் போராளிகள் ஆதரவு பற்றி அவர் எடுத்த நிலைப்பாடும் காங்கிரசுக் கட்சியின் அதிகாரம் வாய்ந்த நிலைப்பாடு அன்று. 1987இல் இராசிவ்காந்தி மேற்கொண்ட பொறுப்பற்ற நிலைப் பாடும், இன்று டாக்டர் மன்மோகன்சிங் மேற்கொண்டுள்ள பெருங்கேடான நிலைப்பாடுமே இதற்குச் சான்று. இனியும் இது இப்படியே நீடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள்-குறிப்பாக, இன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றிருப்பவர்களும், அவ் அணிக்கு வெளியே உள்ளவர்களும் இதில் ஒரே நிலைப்பாட்டை மேற்கொண்டு, இந்திய அரசுக்கு அழுத்தம் தந்து, இந்த அரசு அகற்றப்படும் என்ற அச்சத்தை உண்டாக்கினால் அன்றி, இந்திய தேசிய காங்கிரசுத் தலைமையிலான அரசோ, பாரதிய சனதா தலைமையிலான அரசோ ஈழத் தமிழர் முழுத் தன்னாட்சி பெறுவதற்குக் கூட உதவாது. ஏன் எனில் இந்த இருபெரும் கட்சியினரும் தேசிய இனவிடுதலைக் கொள்கையை ஏற்காதவர்கள்; ஒன்றுபட்ட ஒற்றை இந்தியா காப்புவாதிகள்.

நம்மை இன்று எதிர்நோக்கியுள்ளவை உலக ஏகாதிபத்தியமும், இந்திய ஏகாதிபத்தியமும் ஆகும். இவ்வளவு பெரிய-மானிட உரிமைக்கு எதிரான ஆற்றல்களை எதிர்த்து, முழுச் சுதந்தர (Sovereign Independent) ஈழம்தான் வேண்டும் என்றால், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். தன்னாட்சி (Autonomy) என்ற அதிகாரப் பகிர்வுத் தன்னாட்சி (Divided Sovereignty) என்பதை நோக்கி உரிய முயற்சிகளை முன்னெடுப்பதைப் பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ் ஈழ விடுதலை ஆதரவு இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைந்து முயற்சிகளை மேற்கொள்ளுவது நல்லது. இது இன்று அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்துப் பிள்ளையனின் மாகாண ஆட்சியை ஒத்தது அன்று. அது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டு மாநில அரசு பெற்றுள்ள கொஞ்ச-உரிமைகள் கூட இல்லாதது, ஈழத் தமிழரை அடிமைகளாகவே வைத்திருக்க உதவுவது.

2008 அக்டோபர் முதல் 2011க்குள் உள்ள தம் ஆட்சிக்காலத்தில், முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்குப் பெரும் பொறுப்பேற்று எல்லாப் பங்களிப்புகளையும் செய்ய வேண்டும் என மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com