ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் போராளி மருத்துவர் பிநாயக் சென் விடுதலை
மருத்துவர் பிநாயக் சென் இரண்டு ஆண்டுகள், 11 நாள்கள் சிறை வாசத்திற்குப் பின் 25.5.2009 அன்று இராய்ப்பூர் சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார். நீண்ட போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் இவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 59 அகவை மருத்துவர் பிநாயக் சென் செய்த குற்றம்தான் என்ன?
ஏழை, எளிய, மலைவாழ் மக்களுக்குக் குறைந்த பணத்திற்கும், பணம் இல்லாமலும் மருத்துவத் தொண்டு செய்ததுதான். மக்கள் குடியுரிமைச் சங்கத்தின் (PUCL) தேசியத் துணைத் தலைவராகவுள்ள பிநாயக் சென் மருத்துவர் என்ற முறையில் சிறைவாசிகளுக்கும் மருத்துவம் செய்து வந்தார். அதைப் பயன்படுத்தி பிலாஸ்பூர் சிறைவாசியாக உள்ள மாவோயிஸ்டுத் தலைவருக்கு தூதஞ்சலராக (கூரியர்) செயல்பட்டார் என்று கூறி, 2007 மே 14 அன்று, சட்டீஸ்கர் சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டம் 2005 மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்-1967 ஆகியவற்றின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மீதான குற்றச் சாற்றினை எண்பிப்பதற்கான ஆதாரம் எதுவும் அளிக்கப் படவில்லை. வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் மக்கள் நல நடுவத்தில் ஆசியராகப் பணியாற்றியுள்ளார். இவர் சிறந்த மக்கள் மருத்துவப் பணிக்காக விருதுகள் வழங்கி பெருமைப் படுத்தப்பட்டுள்ளார்.
1981இல் இருந்து பிநாயக் சென் மக்கள் குடியுரிமை அமைப்புகளில் அக்கறையுடன் ஈடுபட்டு, பணியாற்றியுள்ளார். சட்டீசுகர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு என்று அம்மாநில அரசும் காவல் துறையும் "சல்வா ஜூடும்' என்ற பெயரில் குண்டர் படையை உருவாக்கியுள்ளது. ஏதுமறியாப் பொதுமக்களைக் கொடுமைக் குள்ளாக்குகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் காரணம் ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறு மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்து வந்ததும் போராடியதுமே பிநாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டதற்கு காரணமாகும்.
உலகம் முழுவதும் இருந்து நோபல் பரிசு பெற்ற 22 அறிஞர் பெருமக்களும், 2000 மருத்துவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கையயாப்பமிட்டு வேண்டுகோள் விடுத்தும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தியதால் விளைவாக உச்சநீதிமன்றத்தன் பிநாயக் சென் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போதும் அரச பயங்கரவாதத்தால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பிநாயக் சென் கூறியுள்ளார்.
எனவே, மக்களாகிய நாம் பிநாயக் சென் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் போராளிகளைப் பாதுகாப்பதும், அரச பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடுவதும் இன்றியமையாக் கடமையாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|