நீதான்...
பாவலர் வையவன்
நறுமணம் வீசும் நல்ல
நறைசெறி பூவே; நெஞ்சில்
அறு சுவை யூட்டி அன்பால்
அமைதமிழ் நாவே; என்றும்
பொறுமையாய் என்னைக் கட்டிப்
போட்டிடும் நூலே; என்தன்
வெறுமையை விரட்டி வெற்றி
விளைத்திடும் வீரப் பெண்ணே!
தமிழரின் துயரைத் தீர்க்கத்
தடைகளாய் இருப்பவற்றை
உமிகளாய் ஊதித் தள்ள
உதவிடும் உரமே; உன்தன்
அமிழ்தினும் இனிய பேச்சோ
ஆற்றலைக் கூட்டும்; நீதான்
தமிழனாம் எனக்கு வாய்த்த
தனிப்பெருந் தலைவி; தோழி
கிளர்ந்தெழும் ஆசை நெஞ்சின்
கீழிருந் தின்பம் செய்வாய்
வளர்ந்திடும் காதல் உன்பால்
வாழ்வெலாம் களிவெள் ளந்தான்
களர்நிலம் போல இங்குக்
காய்ந்திடும் மொழிகள் தம்முன்
தளர்விலா விளைச்சல் நல்கித்
தமிழனென் மானம் காப்பாய்!
புனைந்திடும் கவியால் என்னைப்
புரிந்தவள் நீதான்; நாளும்
நினைந்திடும் என்னுள் ளத்தில்
நிறைந்தவள் நீதான்; நூலோர்
இணைந்திடும் சங்கம் கண்டு
இருந்தவள் நீதான்; நானும்
வனைந்தமண் பானை பாட்டில்
வளர்தமிழ்ப் பொங்கல் நீதான்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|