அரசியல் குறிஞ்சி
தமிழேந்தி
இடக்குகள் செய்தல்; எங்கள்
இனமக்கள் உரிமை தன்னை
முடக்குதல்; தமிழ்நாட் டோடு
முரண்படல் என்ப வற்றால்
வடக்கினை வேப்பங் காயாய்
வரித்திட்டோம்; ஆனால் நீயோ
அடுக்களைப் பைங்கூழ் போல், எம்
அகத்தினைக் குளிர்வித் தாயே!
தொப்பையைத் துருத்திக்கொண்டு
தொல்லையுங் கொடுத்துக் கொண்டு
எப்போதும் யாமே என்று
எகத்தாளம் போட்டுக்கொண்டு
முப்போதும் எமக்கே என்று
மொத்தமாய் விழுங்கி யோரைக்
குப்புறக் கவிழ்த்தாய்; பூவில்
கொள்கைக்கு ஆப்பு வைத்தாய்
வயல்பெற்ற மழைபோல் மண்டல்
வரலாற்றை வடித்த உன்தன்
செயல்போற்ற மொழிகள் உண்டோ?
செய்நன்றி மறத்தல் நன்றோ?
இயல்பற்ற உடலைப் பெற்றும்
இயக்கமாய் வாழ்ந்த வன்நீ
மயில்பெற்ற தோகை போல
மக்கள்யாம் உன்னைப் பெற்றோம்
அரசனார் மரபில் வந்த
ஆளென்பார் உன்னை; ஆட்சி
முரசெனும் கட்டி லைநீ
முனிவன்போல் துறந்த வள்ளல்
சருகெலாம் ஆட்டம் போடும்
சாக்கடை அமைப்புக் குள்ளே
அரிதாகத் தோற்றம் கொண்ட
அரசியல் குறிஞ்சி நீயே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|