இன்றைய நெருக்கடி பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ
இராமியா
இன்று அமெரிக்கப் பொருளாதாரமும், அதன் தொடர் விளைவாக உலகப் பொருளாதாரமும் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றன. இதே போன்று 1929-33இல் ஆண்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி வெடித்தது. உலகமெங்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பசி, பட்டினி தலைவிரித்தாடியது. ஆனால் அதே காலகட்டத்தில் சோவியத் யூனியன் தனது சோசலிசப் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தியது. 1917இல் நடந்த புரட்சியின் பின் சோசலிசப் பொருளாதார உற்பத்தி முறையை மேற்கொண்ட சோவியத் யூனியன் அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி என்ற நிலையை 1932இல் உறுதிப்படுத்தியது. 1932 முதல் சோவியத் யூனியன் சிதறும் வரையில் கல்வியும் வேலை வாய்ப்பும் மக்களின் அடிப்படை உரிமைகளாக இருந்தன; இக்கால கட்டத்தில் விலைவாசி உயர்வு இல்லை. அதாவது 1932இல் என்ன விலைவாசி இருந்ததோ அதே விலைவாசிதான் 1990 வரையிலும் இருந்தது.
1929-33களில் நெருக்கடியில் முதலாளித்துவ உலகில் மக்கள் படும் வேதனைகளையும், சோசலிச உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழுவதையும் கண்டபிறகுதான் “சோசலிசத்தில் சுதந்தரம் இல்லை'' என்று முதலாளித்துவ அறிஞர்கள் கூறுவது பித்தலாட்டம் என்று புரியத் தொடங்கியது. அக்காலக் கட்டத்தில் முதலாளித்துவம்தான் மக்களை அடிமைப்படுத்துகிறது; சோசலிசம் மக்களுக்குச் சுதந்தரம் அளிக்கிறது என்பதைப் பல அறிஞர்கள் புரிந்து கொண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் புரொட்டஸ்டண்ட் கிருத்துவ மதத்தின் தலைவரான கான்டெர்பரி பாதிரியார் யஹவலட் ஜான்சன் ஆவார். அவர் “ஆறில் ஒருபங்கு உலகில் சோசலிசம்'' என்ற தன் நூலில் இரும்புத் திரை நாடு, சர்வாதிகார நாடு என்று கூறப்படும் சோவியத் நாட்டில்தான் மக்கள் சுதந்தரமாக வாழ்கிறார்கள் என்றும்; சனநாயகம், மக்களாட்சி என்று நீட்டி முழக்கிக் கூறப்படும் பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார முறை சுரண்டல் கும்பலின் மக்கள் மீதான அடக்குமுறை என்றும் தெளிவாக விளக்கினார்.
1929இல் வெடித்த பொருளாதார நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. உற்பத்தியாகி விற்பனை யில்லாமல் தேங்கிக் கிடந்த பல பொருள்கள் இரண்டாம் உலகப் போரில் அழிந்தன. கோடிக் கணக்கில் மக்கள் மடிந்தனர். பொருட்கள் நாசமானதால் மறு உற்பத்திக்குத் தேவை ஏற்பட்டது. உடனே முதலாளித்துவப் பொருளாதாரச் சக்கரமும் சுழலத் தொடங்கியது. அவ்வப்போது பொருளாதார நெருக்கடி என்ற இழுவை நோய் உலக நாடுகளைப் பாதித்தது. ஆனால் இப்போது 1929ஆம் ஆண்டைப் போன்று மிகப் பெரிய அளவில் பாதித்து உள்ளது.
இந் நெருக்கடியைப் பற்றி 13.10.2008 அன்று புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டை இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க எடுக்கும் நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் பொருளா தாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும், உலகில் மிகப் பலர் வேலையை இழப்பர் என்றும், விலைவாசி உயரும் என்றும், இத் துயரங்களைப் பொறாமல் மக்கள் பலர் தீவிரவாதத்திற்கு இரையாவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சில மாதங்ளுக்கு முன்னர் மக்களின் அரசியல் பக்குவமின்மை, சுரண்டல்காரர்களுக்கு வசதியாக உள்ளது என்று இவர் கூறியிருந்தார். அரசியல் தலைவர்கள் (முக்கியமாக மார்க்சியவாதிகள்) கூலி உயர்வுப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அரசியல் மற்றும் மெய்ஞ்ஞானக் களங்களிலும் வேலை செய்திருந்தால் இன்றைய சூழ்நிலையில் புரட்சியைச் சந்தித்து இருக்க முடியும். அப்படிச் செய்யமாட்டோம் என்று அடம் பிடித்ததன் மூலம் புரட்சியைப் புறந்தள்ளிவிட்டு, புரட்சிவீரர் சொல்வது போல் தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
(1929ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போது பல்கேரியாவின் ஜார்ஜ் டிமிட்ரோவ், சீனத்தின் மாசேதுங் போன்ற தலைவர்கள் அரசியல் மற்றும் மெய்ஞ் ஞானக் களங்களில் மக்களைப் பயிற்றுவித்து இருந்ததன் விளைவாக, இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும், சீனத்திலும் சோசலிச ஆட்சி மலர்ந்தது என்பது நினைவுகூரத் தக்கதாகும்).
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|