Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
தமிழ்நாட்டில் நம் தலையாயப்பணி இந்தியாவில் நம் இன்றியமையாப்பணி

- வே.ஆனைமுத்து

தமிழ்நாடு என்பது கி.பி. 1311க்குப் பின்னர் அரசியல் எல்லையை இழந்தது; 1801க்குப் பிறகு பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணம் என்பதன் ஒருபகுதியாக இருந்தது. பிரிட்டிஷார் இந்தியா முழுவதிலும் 1835இல் பொதுப் பள்ளிகளை அமைத்தனர். அவையே அரசாங்கப் பள்ளிகள்.

அரசாங்கப் பள்ளிகளில் அந்தந்தப் பகுதியில் 5 ஆம் வகுப்புவரையில் தாய்மொழி வழியாகவே எல்லாப் பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. ஆனால் இந்தியா முழுவதிலும் 6, 7, 8, 9, 10 ஆம் வகுப்புகளில் எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியாகவே கற்பிக்கப்பட்டன. அதனால் மேல்சாதி -மேல்தட்டு மக்களே உயர்நிலைக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் பெற முடிந்தது. தாழ்த்தப் பட்டோர் 1920க்குப் பிறகே தடையின்றிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். சூத்திரச் சாதியினருள் பெரும்பகுதி மக்கள் படிப்பில் நாட்டம் கொள்ள முடியவில்லை.

இந்த இக்கட்டுக் காரணமாக ஏற்பட்ட விளைவு என்ன? 1835 -1947க்கும் இடைப்பட்ட 112 ஆண்டுகளில், வெறும் 16% இந்தியரே கை யயழுத்துப் போடத் தெரிந்து கொண்டனர். இதில் ஆங்கிலம் அறிந்தவர்கள் 2% பேரே. அவர்கள் எல்லோ ரும் பார்ப்பனர்களும் சில மேல்சாதிச் சூத்திரருமே ஆவர். 1920க்கும் 1937க்கும் இடையில் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக் கட்சியினர் சிற்றூர்ப்புற -கீழ்ச்சாதி மக்கள் படிப்பதற்கென அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். பனகல் அரசர் (1921 -26), டாக்டர். பி. சுப்பராயன் (1926 -29), பொப்பிலி அரசர் (1932 -1937) ஆட்சிக் காலங்களில் கல்வி நீரோடை சிற்றூர்களில் பாய்ந்தது.

இந்தச் சூழலில் முதன் முதலாக இந்திய தேசியக் காங்கிரசு சென்னை மாகாணத்தில் 1937இல் ஆட்சிக்கு வந்தது. சி.இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் ஆனார். நீதிக் கட்சி ஆட்சி சிற்றூர்களில் தொடங்கிய தொடக்கப் பள்ளிகளில் 2,200 பள்ளிகளை அவர் மூடினார். காந்தியாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, இந்தி மொழியை ஒரு கட்டாயப் பாடமாக 120 உயர் பள்ளிகளில் ஆச்சாரியார் திணித்தார். அம் முயற்சியைத் தமிழகமே திரண்டு, பெரியார் தலைமையில், எதிர்த்தது. அந்த எதிர்ப்பைத் துச்சமாகக் கருதிய ஆச்சாரியார், தம் செயல் திட்டங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் பதவியைத்தான் தூக்கி எறிந்தார்.

இக்கேடுகளை விளைவித்த ஆச்சாரியார் தான், சென்னை மாகாணத்தின் நான்கு மொழி மாநிலங்களிலும் -முறையே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் பயிற்று மொழியாக ஆக்கிய நல்ல பணியைச் செய்தார். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், 100க்கு 90 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புவரையில் முற்றிலும் தமிழ்வழியிலேயே இப்போது பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்படி உள்ள பல பள்ளி களில் ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய தகுதி பெற்ற ஆசிரியர் அமர்த்தப் பெறவில்லை; தகுதிபெற்ற தமிழாசிரியர்கள் வேண்டப்பட்ட எண்ணிக்கையில் அமர்த்தப்பெறவில்லை. இது மாபெருங்குறை.

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிடக் கட்சிகள் எந்தச் சமாதானமும் இன்றி இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் ஆவர். இவற்றை விடவும் கேடான தன்மையில் எல்லாப் பாடங்களையும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கிற மெட்ரிகுலேசன் பள்ளிகள், அர சு நிதி உதவி பெறும் பள்ளிகள் -தன் நிதிப் பள்ளிகள் ஏறக்குறைய 3000 தொடங்கப்படுவதை மனமார ஊக்குவித்தவர்களும் திராவிடக் கட்சி ஆட்சியினரே.

1990க்குப் பின்னர், இந்தப் போக்கு, எல்லா மொழி மாநிலங்களிலும் தொற்றுநோய் போல் விசையாகப் பரவிவிட்டது. 1950களில் மணிபால் -கருநாடக மாநிலத் தில் தனியார் பொறியியல், சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டு மேல்சாதி -பணக்கார மாணவர்கள் மட்டும் அங்கே போய்ச் சேர்ந்தனர். தமிழ்நாட்டில் 1980க்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், பல கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினரும், மத நிறுவனத் தாரும், சாதிச் சங்கத்தினரும் - “கல்வி அறத் தொண்டு'' என்ற கவர்ச்சியான போர்வையையும் பெயரையும் போர்த்திக்கொண்டு, மெட்ரிகுலேசன் பள்ளி முதற்கொண்டு கலை-அறிவியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மருத்துவம், சட்டம் முதலான தொழில்சார்ந்த படிப்புகளைத் தொடங்கி, மாணவர் ஒருவருக்கு ரூபா. 25,000 முதல் 25 இலக்கம் வரையில் -தங்கள் தங்கள் அதிகாரத்துக்கு உள்பட்ட எண்ணிக்கை இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் நிதி திரட்டிக் கொண்டு -மதிப்புக்கு உரியவர்களாகவும் தொண்டுப் பழங்களாகவும் வாழ்கின்றனர். இதுவும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள நிலையே ஆகும்.

இவற்றை அன்னியில் பட்டம்பெற்ற வேலையற்ற ஆடவர், மகளிர் எல்லா ஊர்களிலும் எல்லா வகுப்புகளிலும் நிரம்ப உள்ளனர். அவர்களே முயற்சித்து மழலையர், குழந்தைகள் பள்ளிகளைத் தொடங்கி நடத்துகின்றனர்; அல்லது தனியாரிடம் குறைந்த ஊதியத்துக்குப் பணி செய்கின்றனர். இது இன்றைய இருப்புநிலை; ஈனமான நிலை. இதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த நிலையைக் கண்டு கொதிப்பும் சீற்றமும் வராமல் ஒரு செயலற்ற நிலைமை தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் இருக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

1. ஆங்கில வழியில் உயர்கல்வி பெற்றால் உலகின் எந்த மூலையிலும் வேலைபெறலாம் என்கிற தவறான எண்ணம் இருப்பது;

2. தொழில்நுட்பக் கணினி, மற்றும் பொறியியல், உயிரியல், வேதியியல், முதலான உயர் படிப்புகளைப் பெற்றுவிட்டால், வெளிநாடுகளில் கைநிறையச் சம்பளம் தரும் வேலை பெறலாம் என்று எண்ணுவது;

3. இக் கல்வி நிறுவனங்களை அர சு நடத்தி னாலும், அங்கு எல்லோருக்கும் இடம் கிடைப்ப தில்லை என்பது;

4. பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரையில் படிக்க விரும்புகிற எல்லோர்க்கும், இன்று உள்ள முதலாளித்துவ அர சு அமைப்பி லேயே, இலவசமாகக் கல்வி அளித்திடுவது இந்திய அரசின் கொள்கையாகவோ, ஒரு மாநில அரசின் கொள்கையாகவோ இல்லாமை.

இதில் உள்ள பொய்ம்மைகள் என்ன?

1. ஆங்கில வழியில் படித்துவிட்டால் எங்கேயும் வேலை கிடைக்கும் என்பது பொய்.

2. அப்படி உயர்கல்வி கற்ற எல்லோருக்கும் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை கிடைக்கும் என்பதும் பொய்.

இவை நல்ல பொய்கள், ஏன்?

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் 1800 ஆம் ஆண்டு முதல் குடியேறிய “இந்தியர்'' என்போரின் -தமிழர் உள்ளிட்டவர்களின் வாரி சுகளாக, 2008இல் வெறும் 270 இலக்கம் பேர்களே உள்ளனர். இவர்கள் “இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள்'' (Non - Resident Indians - NRI) என அழைக்கப்படுகின்றனர்.

இந்த 270 இலக்கம் பேர்களுள் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் உள்பட -ஒட்டு மொத்தத்தில் 1980க்குப் பிறகு 50 இலக்கம் பேர் இங்கேயிருந்து அயல்நாடுகளுக்குச் சென்று வேலை பெற்றிருக்கக் கூடும்; தமிழ்நாட்டார் இதில் 10 இலக்கம் பேர் இருக்கலாம். இதில் பகுதிப்பேர் மேல்சாதி -பணக்காரப் பிரிவினர்.

1. இந்தப் பொய்மை பற்றித் தமிழகத்தில் இன்று உயர்நிலை, மேல் நிலை, கல்லூரிக் கல்வி பெறுகிற மாணவர்களுள் ஒரு பத்து விழுக்காடு பேருக்காவது நாம் புரிய வைத்திருக்கிறோமா?

2. தமிழ்நாட்டிலுள்ள 17,000 வருவாய் ஊர்களில் (Revenue Villages) ஓர் இரண்டாயிரம் ஊர்களுக்காவது சென்று நாம் பரப்புரை செய்துள்ளோமா?

3. உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி ஆசிரியர் களைக் கண்டு, கூட்டி, அமர்த்தி அவர்களிடம் இது பற்றிய ஒரு நல்ல கருத்தை நாம் உருவாக்கி இருக்கிறோமா?

4. இத்துணை முயற்சிகளும் தமிழக அரசுக்கு நெருக்கடியையும் தலைவலியையும் உண்டாக்குவதற்கு இன்றியமையாத தேவை. இந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டாலன்றி எந்த அர சும் தானாகவே மக்களுக்கு வேண்டியதைச் செய்யாது.

தமிழ் வழிக் கல்விக்குக் கொள்கை அளவில் சார்பான ஒரு திராவிடக் கட்சியும், தமிழ் வழிக் கல்விக்கு நேர் எதிர் நிலையை மேற்கொண்டுள்ள இன்னொரு திராவிடக் கட்சியுமே -40 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப் படைக்கின்றன; இனியும் இது நீடிக்கும். தமிழ் மக்கள் சரிபாதியாகப் பிரிந்து இவர்களை நத்தியே கிடக்கின்றனர்.

இப்படிப்பட்ட தமிழ்ப் பெருமக்களுக்கும் -பெற்றோர்களுக்கும் தமிழ்வழிக் கல்வியின் இன்றி யமையாமையையும்; ஆங்கிலவழிக் கல்வியே வேலை தரும் என்கிற பொய் நம்பிக்கை ஊட்டும் பாதை என்பது கானல் நீர் போன்றது -அதை எவரும் அள்ளிக் குடிக்க முடியாது என்பதையும் புரியவைக்கவேண்டும். ஆறு கோடித் தமிழ் மக்களுள் ஒரு கோடிப் பேருக்காவது நாம் புரிய வைக்கவேண்டும்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினராகிய நாம் முன்னின்று, இத்தகைய நோக்கங் கொண்ட எல்லோரையும் இணைத்துக் கொண்டு, இந்தப் பணியில் ஓர் அய்ந்தாண்டுக் காலத்துக்குத் தொய்வில்லாமல் செயல்படுவது இன்றி யமையாதது. அது தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி வர நல்ல அடிப்படை அமைத்ததாக ஆகும். அடுத்து, இந்திய அளவில் நாம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத பணி வகுப்புவாரி விகிதாசார இடப்பங்கீடு (Proportional Communal Representation) கோட்பாட்டை வெற்றி பெறச் செய்வதாகும்.

சட்டப்படியும் நடப்புப்படியும் இந்து, இசுலாம், சீக்கியம், கிறித்துவம் முதலான மதங்கள் இருக்கின்றன. எனவே மத வகுப்புகள் இருக்கின்றன. இந்துச் சட்டப்படியும் நடப்புப்படியும் பார்ப்பனர்கள், சற் சூத்திரர், சூத்திரர், ஆதித் திராவிடர் என்னும் சாதி வகுப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட வகுப்புகளின் இருப்பு நிலையை உணர்ந்து தான் மகாத்மா புலே, பண்டித அயோத்திதாசர், இரட்டமலை சீனிவாசன் போன்றோரும்; சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேச முதலியார் போன்றோரும்; தந்தை பெரியார், மேதை டாக்டர் அம்பேத்கர், டாக்டர் இராம் மனோகர் லோகியா போன்றோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையைத் தந்தனர்; அக்கொள்கை நிறைவேற்றத்துக்காக அவர்கள் பாடுபட்டனர்.

சுதேச இந்தியாவில் சாகு சத்திரபதி சிற்றரசர், மைசூர் நான்காவது கிருஷ்ணராஜ உடையார் போன்றோர் 1902 -1920களில் வகுப்புவாரி உரிமையை அமல்படுத்தினர். சென்னை மாகாணத்தில் மட்டுந்தான் -அரசுக் கல்வியிலும், அரசு வேலையிலும் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் -எல்லா மத வகுப்புகளுக்கும், சாதி வகுப்புகளுக்கும் பங்கிட்டுத் தரும் கொள்கை 1921இல் நீதிக் கட்சி ஆட்சி யினரால் நிலைநாட்டப்பட்டது.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆதித் திராவிடர் என்கிற 3 சாதி வகுப்புகள்; இ சுலாமியர், கிறித்தவர் என்கிற 2 மத வகுப்புகள் -ஆகிய 5 வகுப்புகளுக்கும் 100 விழுக்காடு இடங்களும் பங்கீடு செய்து தரப்பட்டன. இதில் பார்ப்பனர் அல்லாதாருக்கும், ஆதித் திராவிடருக்கும் விகிதாசாரப் பங்கீடு இல்லை. இது 1928இல் முதன் முதலாக சென்னை மாகாணத்தில் நடப்புக்கு வந்தது. இதில் உள்ள பங்கீட்டுக் குறைபாட்டை அப்போதே பெரியார் சுட்டிக் காட்டினார். பிற்படுத்தப் பட்டோருக்கும் ஆதித் திராவிடருக்கும் விகிதாசாரப் பங்கீடு வேண்டும் என்று 1934 இலேயே கோரினார்.

1947இல் தான் முதன்முதலாக சென்னை மாகாணத்தில் “இந்து பிற்படுத்தப்பட்டோர்'' என்ற சாதி வகுப்புக்கு 14% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைக் கோரிப் பெற்றவர் பெரியார். இதன் விளைவாக 1947 முதல் 1954 வரையில், தமிழகம் உள்ளிட்ட சென்னை மாகாணத்தில் - 1. பார்ப்பனர், 2. இந்து பார்ப்பனர் அல்லாத முற்பட்டோர், 3. இந்து பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், 4. ஆதித்திராவிடர் என்னும் நான்கு சாதி வகுப்புகளுக்கும், 5. இ சுலாமியர், 6. கிறித்துவர் -ஆங்கிலோ இந்தியர் என்கிற இரண்டு மத வகுப்புகளுக்கும் -ஆக 6 வகுப்புகளுக்கும் அரசுக் கல்வியிலும், அரசு வேலையிலும் மொத்தம் உள்ள 100 விழுக்காடு இடங்களும் பங்கீடு செய்து அளிக்கப்பட்டன.

இப்படிப்பட்ட வகுப்புவாரி இடப்பங்கீடு 1928 முதல் 1954 வரையில் சென்னை மாகாணத்தில் மட்டும் நடப்பில் இருந்தது. இந்த விகிதாசாரப் பிரதிதிநித்துவ உரிமை மக்கள் நாயகத்தின் அடிப்படைக் குறிக்கோள் ஆகும். இது மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் சமூகங்களின் தலைவர்களுக்கும் தெரிந்திருக்க இடமே இல்லை. ஏனெனில் சமூக இயல் வரலாறு; அரசியல் வரலாறு என்னும் எதிலும் அல்லது எந்தக் கல்வித் திட்டத்திலும் இது இடம்பெறவில்லை, நிற்க.

இந்தியாவில் பட்டியல் வகுப்பினர் என்னும் தீண்டப் படாத வகுப்பு மக்களின் சாதிப் பட்டியல் (Schedule of Castes) 1935ஆம் ஆண்டிலேயே மேதை அம்பேத்கர் அவர்களால் திரட்டப்பட்டு விட்டது. அப்படிப் பட்டியலிடப்பட்ட சாதிகள் - Scheduled Castes என்னும் சாதி வகுப்புகள் ஆகும். அந்தப் பட்டியலில் அடங்கிய சாதி வகுப்பு மக்களுக்கு -மாகாணச் சட்டமன்றங்களிலும், இந்தியச்சட்டமன்றத்திலும் தனிப் பிரதிநிதித்துவத்தை 1932இல் டாக்டர். அம்பேத்கர் பெற்றார். அது 1937இல் நடப்புக்கு வந்தது.

அத்துடன் பட்டியலிடப்பட்ட சாதி வகுப்புக்கு மத்திய அரசாங்க வேலைகளில் மட்டும் 8.33% பங்கீட்டை 11.8.1943இல் அம்பேத்கர் பெற்றளித்தார். அதை 12.5% விழுக்காடாக 1947இல் உயர்த்திப் பெற்றவரும் அவரே. ஆனால் மாகாண அரசு வேலையில், சென்னை தவிர்த்த வேறு எந்த மாகாணத்திலும். 1950வரையில் இவ்வகுப்பினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இது இந்தியாவிலுள்ள இவ்வகுப்பு மக்களுக்கு இன்றள வும் உயர் பதவிகளில் விகிதாசாரப் பங்கு கிடைக்க முடியாமற் போனதற்குக் காரணமாகிவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 16(4) என்பது அர சு வேலையிலும் பதவியிலும் போதிய பிரதிநிதித்துவம் பெறாத "எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கும்' இடங்களை "ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. இது பட்டியல் குலத்தார், பட்டியல் பழங்குடியினர் -இனிப் பட்டியிலிடப்பட வேண்டிய இவர்களைப்போன்ற “மற்ற பிற்படுத்தப்பட்டோர்'' என்னும் மூன்று வகையான பிற்படுத்தப்பட்ட சாதி வகுப்புகளைக் குறிப்பது ஆகும். இதனை விதி 338(3)இல் மேதை அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இது இப்போது 338(10) என உள்ளது.

மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியல் உருவாக்கப்படுவதற்கான ஏற்பாட்டை அரசமைப்பு விதி 340இல் அம்பேத்கர் அளித்திருந்தார். அதன்படி காகா கலேல்கர் குழுவினால் 1955இல் உருவாக்கப்பட்ட மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புக் கான சாதிகள் பட்டியலையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு, 1956 முதலே இந்தியாவிலுள்ள பிற்படுத்தப் பட்டோருக்கு மய்ய -மாநில அர சுகளின் கல்வியிலும், வேலையிலும் முறையே 25%, 40%, 70% இட ஒதுக் கீட்டினைப் பண்டித நேரு அர சு வழங்கியிருக்கவேண்டும். அப்படி வழங்கியிருந் தால் கடந்த 52 ஆண்டுகளில் மய்ய அர சு வேலையிலும் கல்வியிலும்; மாநிலங்கள் அர சுக் கல்வியிலும் வேலையிலும் எவ்வளவு பெரிய வளர்ச்சியைப் பெற்றிருப்பார்கள் என்பதை எண்ணினால் நெஞ்சு கொதிக்கும். ஆனால் அதற்கு மாறாக, 1961 மே திங்களில் பண்டித நேரு அமைச்சரவை கலேல்கர் பட்டியலையும் பரிந் துரையையும் ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. அம் முடிவை அப்படியே 1961 ஆகஸ்டில் எல்லா மாகாண முதலமைச்சர்களுக்கும் கமுக்கமான மடல்கள் (ம்.நு. ஸிeமிமிer) எழுதி அவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதிலும் உள்ள இந்து பிற்படுத்தப் பட்டோருக்குப் பண்டித நேருவும், காங்கிரசும் 1961இல் இழைத்த இந்த அநீதியைப் போக்கிடத் தந்தை பெரியார் இறுதிவரை முயன்றார். 1973இல் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அலகாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது “பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அர சு வேலையில் இடஒதுக்கீடு வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

இந்த நெடிய வரலாற்றில் இந்தியக் குடியர சுத் தலைவர் என். சஞ்சீவி ரெட்டியிடம் 8.5.1978இல் அதிகாரப் பூர்வமான முறையில் கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்தது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாகும். அக் கோரிக்கையை அன்று அவரிடம் முன்வைத்த நால்வருள் -வே. ஆனைமுத்து, சீர்காழி மா. முத்துச்சாமி, தாதம்பட்டி எம். இராஜு, நாடாளு மன்ற உறுப்பினர் வாழப்பாடி கூ. இராம மூர்த்தி -இன்று இருபெரும் தலைவர்கள் நம்மிடையே இல்லை.

7.5.1978இல் முசாபர் நகரில், “உத்தரப் பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டை''த் தொடங்கிவைத்து, நான் ஆற்றிய உரை உ.பி. பிற்படுத்தப்பட்டோரிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அம்மாநாட்டில் அளிக்கப்பட்ட 2000 இந்தி அறிக்கை ஆவணம் உ.பி.யைச் சேர்ந்த எளியோருக்கும் அதைப் புரியவைத்தது. அதனை அடுத்து ஆக்ராவிலும், மீரட்டிலும், லக்னோவிலும, அலிகரிலும் 1980 முதல் 2008 வரை எண்ணற்ற கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டினோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 17.9.1978 முதல் 18.10.1978 முடிய பீகார் மாநிலத்தின் 31 மாவட்டங் களிலும் இராம் அவதேஷ் சிங் ஏற்பாடு செய்த பெரியார் நூற்றாண்டுவிழாக் கூட்டங்களில் நானும் மற்றும் மூன்று தோழர்களும் மேற் கொண்ட சூறாவளிப் பரப்புரை, அன்றைய தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாயைப் பீகாருக்கு ஓடிவரச் செய்தது. அவர் அங்கே பாடம் கற்பிக்கப்பட்டார். அதன் விளைவாகவே, 20.12.1978இல் அறிவிப்புச் செய்து, 1.1.1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி. பி. மண்டல்) தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் குழுவை அவர் அமைத்தார்.

23.3.1979இல் பெரியார் நூற்றாண்டு விழாவை ஒட்டித் தில்லியில் வரலாறு காணாத -30,000பேர் கொண்ட பேரணியை நடத்தினோம். சரண்சிங் பிரதமராக இருந்தபோது, 15.11.1979 முதல் 1.12.1979 முடிய புதுதில்லியில் போராட்டம் நடத்தினோம். 1770 ஆடவர், மகளிர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத் தில் வைத்திட வேண்டி நானும், அ. சித்தய்யன், எம். இராஜு ஆகியோரும் முயன்றோம். மா.பெ.பொ.க. தோழர்கள் 26.1.1982இல் பல ஊர்களில் கறுப்புக்கொடி ஏற்றி, “குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாடி'' நூற்றுக்கு மேற் பட்டோர் சிறைப்பட்டனர். 25.1.1982இல் அன்றைய உள்துறை அமைச்சர் மாமனிதர் கியானி ஜெயில் சிங் அவர்களை நம் பேரவைத் தலைவர்களுடன் நேரில் கண்டு விரிவாக, நான் விவாதித்தேன். எனக்கு அன்றும், 4.3.1982 இலும் அளித்த வாக்குறுதிப்படி, 30.4.1982இல் மண்டல்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஜெயில் சிங் வெளியிட்டார்.

காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, இந்தியத் தலைமை அமைச்சராக வி சுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பொறுப்பேற்றபோது, நம் பேரவைத் தலைவர் இராம் அவதேஷ் சிங், மாநிலங்கள் அவையில் பலதடவைகள் தலைமை அமைச்சரின் கவனத்தை ஈர்த்து, மண்டல் பரிந் துரையை அமலாக்கும் நிலையை உருவாக் கினார். 1990 மே மாதம் -வி.பி. சிங் அவர்களால் ஒப்படை செய்யப்பட்டிருந்த இராம் விலாஸ் பஸ்வானிடம் வே. ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் இருவரும் தெளிவான விளக்க ஆவணத்தை அளித்தனர். அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் தி.க. தலைவர் கி.வீரமணி போன்றோரும் மற்ற தலைவர்களும் இந்தியத் தலைமை அமைச்சருக்கு அழுத்தம் தந்தனர்.

இவற்றின் விளைவாகவே, வி.பி.சிங் மத்திய அர சு வேலையில் முதன் முதலாகப் பிற்படுத்தப் பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு அளித்து 13.8.1990இல் ஆணை பிறப்பித்தார். அம் மாமனிதர் இன்று நம்மிடையே இல்லை.

இப்போது உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அர சு, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எஸ்சி., அய்.அய்.எம்., முதலான வற்றில் 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் 15% இடங்களைப் பட்டியல் குலத்தாருக்கும், 7.5% இடங்களைப் பழங்குடியினர்க்கும் ஒதுக்கீடு செய்வதற்காக என்று 2006இல் நிறைவேற்றிய "கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுச் சட்டம்' என்பது ஒரு மோசடித் திட்டமாகவே ஆகிவிட்டது. இதற்குப் பாடுபட்ட எல்லோருடைய முகத்திலும் கெட்டியான கரியைப் பூசிவிட்டு -நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரலாற்றில் என்றுமே நடந் திராத தன்மையில் -"இந்திய உயர்கல்வி நிறு வனங்களில் என்றென்றும் 18% மட்டுமே உள்ள மேல்சாதி வகுப்பினருக்குத் தொடர்ந்து 70 விழுக்காடு இடங்கள் அட்டியின்றிக் கிடைப்பதற்கு' வழிசெய்து விட்டது.

தேசிய அறிவார்ந்தோர் குழு (National Knowledge Commission), மேற்றிறமை கொண்டோர் குழு (Committee of Excellence) என்னும் பெயர்களில் அமெரிக்க நாட்டு முறையை அடியயாற்றி உருவாக்கி மேல்சாதி -மேல்தட்டு -முன்னேறிய 18% வகுப்பு மக்களின் கல்வி நலன்களைக் காக்கும் அரசாகவே பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அர சு இயங்குகிறது.

இது இந்தியா முழுவதிலும் உள்ள இந்து பிற்படுத்தப்பட்டோர் 50 கோடிப் பேருக்கும், பட்டியல் குலத்தார் 17 கோடிப் பேருக்கும், பழங் குடியினர் 7.5 கோடிப் பேருக்கும், இ சுலாமியர் 13 கோடிப் பேருக்கும், சீக்கியர் 2.5 கோடிப் பேருக்கும், கிறித்தவர் 2.5 கோடிப் பேருக்கும் நேர் எதிரான அரசாகும். இந்தியாவிலுள்ள 112கோடி மக்களுள் 93 கோடிப்பேர்களாக உள்ள இவ் வெகு மக்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அளிக்க விரும்பாத அரசு எதுவானாலும் -அது எந்தக் கட்சியின் தலைமையில் உள்ள அர சு ஆனாலும் அந்த அரசைத் தூக்கி எறிவது இவ்வகுப்பு மக்களின் இன்றியமையாத கடமையாகும்.

இன்றைக்கு உள்ள அரசியல் அமைப்பு 1. வருணத்தை ஒழிக்காது, 2. முதலாளித்துவ அமைப்பை மாற்றாது, 3. உண்மையான மதச் சார்பற்ற தன்மையிலான கொள்கையை ஏற்காது, 4. நாட்டின் செல்வம் முழுவதும் மிகச் சிலரிடம் குவிக்கப்படுவதைத் தடுக்காது. இந்நிலையில், எல்லா மக்களுடைய வரிப் பணத்தைப் பெற்றும் -எல்லா மத, சாதி வகுப்பு மக்களின் வாக்குகளைப் பெற்றும் ஆட்சிக்கு வருவோர் மய்ய அரசிலும் மாநில அர சுகளிலும் கல்வியிலும், வேலையிலும் இருக்கிற மொத்த எண்ணிக்கை இடங்களையும் அந்தந்த மத வகுப்பு, சாதி வகுப்பு எண்ணிக்கைக்குச் சரி சமமாகப் பிரித்துத் தர ஏற்ற வகையில் இன்றுள்ள அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு பற்றிய விதிகளைத் திருத்தியே தீரவேண்டும்.

இது இந்தியா முழுவதையும் தழுவிய பெரும்பணி. மக்கள் நாயகக் கோட்பாட்டை முழுவதுமாக வென்றெடுக்கும் இப்பணிக்கு நம்மை நாம் மேலும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுவோம், வாருங்கள்! இருக்கிற அமைப்பை மாற்றுவதற்கு, இது ஓர் அடித்தளம் இடும் வேலையாகும். வெகுமக்களின் பேராளர்களாக -இந்தியா முழுவதிலும் நாம் பயணித்து விகிதாசார வகுப்புவாரி உரிமையை வென்றெடுப்போம், வாரீர்! வாரீர்!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com