எம் ஈழத் தமிழர்தந்த எண்ணிலா விலைகள்!
கவிவேந்தர் கா. வேழவேந்தன்
தாயகத்துத் தமிழ்த்தோழா! வணக்கம். உன்றன்
தமிழச்சொந்தம் ஈழநண்பன் எழுதுகின்றேன்
பேயாட்டச் சிங்களவன் குண்டு வீச்சில்
பேரிழப்பைப் பெற்றதனால் நார்வே நாட்டில்
தாயோடு தப்பிவந்தே பிழைக்கின் றேன்நான்!
சரித்திரத்தில் எம்மைப்போல் புவி யின்மீதில்
ஓயாத கொடுமைகளைச் சுமந் தோர்யாவர்?
உளம்நொறுங்கிப் போவாய்நீ முழுதும் கேட்டால்!
மொழிஉரிமை, இனஉரிமைப் போரால் இன்றோ
மூன்றில்ஓர் ஈழத்தார் அகதி யானோம்!
கொழுந்துவிட்டு எரிந்திட்ட மானப் போரில்
குட்டிமணி செகன்போன்றோர் விழிகள் தம்மைக்
கழுகுகளாய்ப் பிடுங்கிவைத்தான் சிங்க ளத்தான்!
கடை விரித்துத் தமிழர்களின் மாமி சத்தைக்
கழிவுவிலை யில்விற்கப் பலகை வைத்தான்!
கற்பழித்தான் எங்கள்குல மகளிர் தம்மை!
ஒப்பில்லா ஓர்இலட்சம் நூல்கள் கொண்ட
உயரியொழ் நூலகத்தைப் பொசுக்கிப் போட்டான்!
எப்பொழுதும் எங்கேயும் கிடைத்தி டாத
ஈடில்லாப் பனுவல்களை எரித்தான்! நெஞ்சில்
தப்பறியாச் செஞ்சோலைப் பிஞ்சை யெல்லாம்
தணற்குண்டால் பிணமாக்கிக் கருகச் செய்தான்!
அப்பாவி அம்பாறைப் பெண்ணு றுப்பில்
அனல்வெடியைத் திணித்துப்பின் வெடிக்க வைத்தான்!
ஆயுதத்தைத் தாங்காத தமிழ்ச் செல்வத்தை
அநீதியுடன் புறமுதுகில் குத்தி விட்டான்!
தீயமனச் சிங்களத்து மூர்க்கன் ஆங்கே
தினம்ஆடும் வெறியாட்டம் ஒன்றி ரண்டா?
ஆயிரம்பல் லாயிரமாய்த் தமிழி னத்தார்
அழிந்தபின்னர் சாம்பல்மே டொன்றே மிஞ்சும்!
பாய்போட்டே உறங்கியது போதும், நண்பா!
பார்அறிய உரத்தகுரல் எழுப்பு வாயா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|