புலி பசித்தாலும்...
பாவலர் வையவன்
இனபேதம் கூடாது எனப்பேசும் பெரியோரே
இலங்கையிலே நடப்பது என்னவாம்?
தினவோடு திமிர்கொண்டு திரிகின்ற சிங்களரின்
தீர்மானம் கொலைவெறி அல்லவா?
மனவேறு பாடங்கு மாத்தமிழர் மேல்கொண்டு
மாய்க்கின்ற போக்கென்ன நியாயமா?
சினவேங்கைக் கூட்டங்கள் இடும்பரை எதிர்கொள்ளச்
சீறினால் அதுமட்டும் குற்றமா?
பிரிவினை கூடாது எனப்பேசும் பெரியோரே
பிரித்தாளும் போக்கங்கு இல்லையா?
நரிமனச் சிங்களத் தலைவர்கள் தமிழ்மக்கள்
உரிமைக்கு உலைவைக்க வில்லையா?
சரிநிகர் மனிதராய்த் தமிழரை நடத்தினால்
சமரங்கு இதுவரையில் நீளுமா?
எரிநிகர் புலிகளும் எதிரியின் படைகளும்
எந்நாளும் போராடி மாளுமா?
மோப்பத்தைப் பிடித்திங்கு வாக்கு வங்கியில்
மூழ்குதல் தமிழ்த்தலைவர் வாடிக்கை
ஏப்பத்தை விடுமளவு எல்லாம் விழுங்குதல்
இந்தியத் தலைவர்கள் வேடிக்கை
ஆப்பத்தைப் பங்கிடும் அரசியல் குரங்குகள்
ஆதரவைப் புலிஇனம் நாடுமா?
மாப்பற்றை மண்மீது வைத்தபின் தமிழ்ஈழம்
மலராமல் தம்கண்ணை மூடுமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|