நல்ல தொடக்கம் - தொடரட்டும் தவமிருக்கத் தயக்கம் வேண்டாம்
இராமியா
நம் இந்திய சமுதாயத்தில் உயர்சாதிக் கும்பலின் மக்கள் தொகை 20 விழுக்காட்டுக்குள் இருக்கிறது என்பதையும், அவர்கள்தான் இந்திய நாட்டின் செல்வங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்பதை யும் தெரிந்து கொள்வதற்குப் புத்திசாலித்தனம் தேவை யில்லை. ஆனால் இந்த உயர்சாதிக் கும்பலினர் இப்படிச் சுகம் அனுபவிப்பதற்குக் காரணம் அவர்களுடைய புத்திசாலித்தனம் அல்ல என்றும் அயோக்கியத்தனமான ஆட்சி அதிகாரம்தான் காரணம் என்றும், மநு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, பகவத் கீதை போன்ற சனாதன நூல்களில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டு இருப்பதை அறிஞர்கள் எடுத்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அயோக்கியத் தனம் என்று வந்தபிறகு அதைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியுமா? ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எந்த முன் முயற்சியையும் நம் நீதிபதிகள் சர்வ சாதாரணமாக முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறார்கள்.
அதுபோல நடக்கும் நிகழ்வுகள்தான் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய விகிதாசாரம் தெரியவில்லை என்றும், அதன் கணக்கீடு முடக்கிப் போடுவதும் போன்றவை. பிற்படுத்தப்பட்ட மக்கள் 50%க்கும் மேல் இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு 27% ஒதுக்கீடு என்பது தேவையைவிடக் குறைவானதுதான் என்பதும் அடிமுட்டாள்கூடப் புரிந்து கொள்ள முடிகின்ற விவரமாகும். ஆனால் நம் நீதிபதிகள் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதற்கான பழைய (1931ஆம் ஆண்டு) விவரங்கள்தான் உள்ளது என்றும் இன்றைய விவரம் இல்லை என்றும் கூறி ஆகவே 27% என்று நிர்ணயித்து இருப்பதை ஏற்க முடியாது என்றும் ஆகவே அதுபற்றிய சட்டமே செல்லாது என்றும் தீர்ப்புக் கூறுகிறார்கள்.
இத்தகைய முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர். இராமதாசு பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரது முயற்சி இன்று வளர்ந்துள்ளது. புது தில்லியில் 24.10.2008 அன்று பாட்டாளி மக்கள் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, தி.மு.க., காங்கிரசு, சமாஜ்வாத கட்சி, ராஷ்ட்ரிய சனதா தளக் கட்சி, ஆகிய கட்சிகளைச் சார்ந்த 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலைச் சந்தித்து, வருகின்ற 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசின் நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் அன்புமணி விடுத்திருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, 25.10.2008 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி நடுவண் அரசுக்கு ஆணை பிறப்பித்து உள்ளது. இச்செய்தி வெளியான உடனேயே 26.10.2008 அன்று மருத்துவர். இராமதாசு இதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்றுகூறி வரவேற்று இருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளும் இதைத் தொடர்ந்து இக்கொள்கைக்கு மேலும் வலுச் சேர்க்கவேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மற்ற மாநில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முதல் முதலாகக் குரல் கொடுத்திருப்பது ஒரு நல்ல தொடக்கம். அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் நடுவண் அரசுக்கு இட்டிருக்கும் ஆணை நல்ல தொடர்ச்சி. இது சரியான வழியில் வளர்ந்து வெற்றிபெற நாம் தொய்வின்றிப் பணியாற்றவேண்டும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி வாரிக் கணக் கெடுப்பு இடம்பெறாமல் இருக்க உயர்சாதிக் கும்பல் பல சதித் திட்டங்களைத் தீட்டலாம். இதை விழிப்புடன் இருந்து முறியடிக்கவேண்டும். கணக்கெடுப்பின் போதுகூட பொய்மூட்டை களைத் திணிக்க உயர்சாதிக் கும்பல் சற்றும் தயங்காது. அதையும் மிகமிக விழிப்புடன் இருந்து முறியடிக்கவேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதில் மிகப்பெரிய பொறுப்பு உண்டு. பொதுமக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவ்வலுவலகங்களில் இருந்து விவரங்களைப் பெற்று அவற்றைக் களத்தில் சரிபார்க்க வேண்டும். இப்பணி தவமிருப்பதைப் போன்று ஒரு கடினமான செயலே. கூடவே அது மிகமிக முதன்மையான பணியுமாகும். இப்பணியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக ஈடுபடவேண்டும். நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் உயர்சாதிக் கும்பலின் சதித் திட்டங்களுக்கு உதவி செய்வதாக முடியும். இப்போது மருத்துவர் ச. இராமதாசு தொடங்கி இருக்கும் முயற்சி நல்ல விதமாகத் தொடர்ந்து வெற்றிபெறும் வரை விழிப்புடன் இருந்து பணியாற்ற அனைவரும் உறுதி கொள்வோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|