நற்செவிலி
கி.த. பச்சையப்பன்
(வண்ணனைப் பா)
உன்னைப் பற்றி உரைக்கின்றேன்
உவந்தே பாடல் உருவினிலே
என்ன வகையின் நோயரையும்
இன்பாய் அன்பாய் ஏற்கின்றாய்
கண்ணைக் காக்கும் இமைபோலே
காக்கும் பண்பில் மிகவுயர்ந்தாய்
பொன்னைப் பொருளைப் போற்றாமல்
பொறுப்பாய்ப் பணிசெய் நற்செவிலி
உறக்கம் உன்றன் கண்களிலே
ஊஞ்சல் கட்ட வருகையிலும்
உறக்கம் ஓட்டி ஊக்கமுடன்
உறங்கும் நோயர் எழுப்பியவர்
சிறக்க மருந்தைத் தருகின்றாய்
சிறந்த வாழ்வைப் பெறுகின்றார்
இறக்கும் நிலையில் இருப்போரும்
எழுந்தே இயங்க முயல்கின்றார்
பிறக்கும் மகவைப் பேணிடுவாய்
பெற்ற தாய்க்கும் தாயாவாய்
கிறக்கம் உன்றன் பணிகளிலே
கிளப்பார் உண்டோ எங்கணுமே?
துறக்கம் தனியே இல்லையம்மா
தொண்டில் உண்டு நம்பிடுவாய்
மறக்க ஒண்ணா இத்தொண்டில்
மகிழ்ந்தார் பிளாரன்சு நைட்டிங்கேல்
இப்படி அப்படி அசைவோரை
இருக்கும் இடத்தில் இருத்திவைத்தே
எப்படி இந்த நோயுடையார்
எழுந்து நடப்பார் என்றெண்ணி
ஒப்பி ஒதுக்கும் மருந்துகளை
உரிய தாயாய் அருத்துகின்றாய்
செப்பற்(கு) அரிய செயலாற்றும்
செவிலி வாழ்க பல்லாண்டு
(வேறு)
உள்ளோடு குருதி நாடி
உடல்வெப்பம் குறித்து வைப்பாய்
கள்ளோடு களித்த நோயர்க்
கவனிக்கும் பண்பில் மிக்காய்
வெள்ளாடை உடுத்தி வந்து
வெள்ளன்னப் பெடைபோல் நிற்பாய்
உள்ளாடை அவிழ்ந்த நோயர்க்(கு)
உடுத்துகை ஒப்பாய் வாழ்க!
புலவர்
கி.த. பச்சையப்பன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|