Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
என்னருமைத் தோழர்களே! நம் குறிக்கோளை முன்னிறுத்துங்கள்!
என் பணிச்சுமையைப் பங்கு போட்டுக்கொள்ள முன்வாருங்கள்!
வே. ஆனைமுத்து

aanaimuthu அன்பார்ந்த மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களே!

தந்தை பெரியார் அவர்கள், அரசுக் கல்வியிலும் அரசு வேலையிலும் எல்லா வகுப்பினருக்கும், அவரவர் வகுப்பு எண்ணிக்கைக்குச் சமமாக இடப் பங்கீடு செய்து பெறுவதை 1919 முதலே மேற்கொண்டார்.

தமிழ்நாட்டு அரசிலும் இந்திய அரசிலும் விகிதாசாரப் பங்கு கிடைக்கவேண்டும் என, 1934இல் அறிவித்தார். 1935இலேயே இந்திய அரசு வேலையில், சென்னை மாகாணத்தில் மட்டும் - பார்ப்பனர் அல்லாதாருக்கும், பட்டியல்குலத்தாருக்கும் அவர் இடப்பங்கீடு பெற்றுத்தந்தார். இதை இந்தியருள் பலரும் அறிந்திருக்கவில்லை. இச் செய்தியை 1990இல் முதன்முதலாக நாமே வெளிக் கொணர்ந்தோம்.

இதை அறிவதற்கு முன்னரே, 1975 முதலே, நாம் இன்றுள்ள இந்திய அரசமைப்புச்சட்டப்படி இந்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இடஒதுக்கீடு கோரினோம்.
“பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசில் இடஒதுக்கீடு தர, சட்டத்தில் எங்கே அய்யா இடம் இருக்கிறது?'' என்றுதான் - 29.04.1978 முதல் 10.05.1978 வரையில் - தில்லியில், என்னிடமும் தோழர்கள் மா. முத்துச்சாமி, எம்.இராஜு, ஆகியோரிடமும் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் வினா எழுப்பினார்கள்.
இது கண்டு நாம் சோரவில்லை; வெகுளவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தில் உள்ள உண்மையான நிலைமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் புரிய வைத்திட எல்லாம் செய்தோம். இதற்காக பீகாரில் 1978 செப்டம்பர் - அக்டோபரில் நெடும்பயணத்தை மேற்கொண்டோம்; போராடினோம். முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை 29.04.1981இல் புதுதில்லியில் நடத்தினோம்; 15 உறுப்பினர் பெருமக்கள் அக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பங்கேற்றவர்களுள் மதிப்புமிகு எம். கலியாணசுந்தரம் (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி) அவர்கள் மட்டுமே, “தமிழ்நாட்டில் இன்று பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் இந்திய அரசிலும் இவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்'' என உறுதிபடச் சொன்னார். இதை அன்றே நாம் “சிந்தனையாளன்'' ஏட்டில் பதிவு செய்தோம். அக்கூட்டத்தில் பங்கேற்ற மதிப்புமிகு உறுப்பினர்கள் அப்போதே அதைப் புரிந்துகொண்டனர்.

அப்படிப் புரிந்துகொண்டவர்களுள் உ.பி.யைச் சார்ந்த அலகாபாத் வழக்குரைஞர். ஜெய்பால் சிங் கஷ்யாப், ஆர்.என். ராகேஷ் இருவரும் 1984 முடிய இக்கோரிக்கையை, நம் சார்பில் மக்களவையில் நாள்தோறும் எழுப்பிக் கொண்டே இருந்தனர். நான் பலமாதகாலம் தில்லியில் தங்கி இவர்களைத் தூண்டினேன். இதற்கிடையில், 25.01.1982 அன்றைய நேர்காணலின் போது, இடஒதுக்கீட்டுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்த அன்றைய மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் அவர்கள் அரசமைப்பு விதிகள் 16(4), 338 (3) இவற்றின் பொருளடக்கத்தை என் மூலமாக அப்போதுதான் முதன்முதலாக அறிந்தார். இதை நேரில் என்னிடம் மகிழ்ச்சி யுடன் கூறிய அப் பெருமகனார், “மண்டல்குழு அறிக்கையை மக்களவையின் முன் வைப்பேன்; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்'' என அப்போதே உறுதிபடக்கூறினார்.

“கொள்கையை நிறைவேற்றவேண்டியவர் புரிந்து கொண்டார்; இனி வெற்றிபெறுவோம்'' என்கிற நம்பிக்கை அன்றுதான் எனக்கு உறுதிப்பட ஏற்பட்டது. அவர் 30.04.1982இல் மண்டல்குழு அறிக்கையை வெளியிட்ட சில வாரங்களில் குடியரசுத் தலைவராக உயர்த்தப் பட்டுவிட்டார். அப்பதவி மிக உயர்வானது என்பது உண்மைதான். ஆனால் அதிகாரம் இல்லாத ஒரு பொம்மைப் பதவி அது. எனவே, மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை 3.3.1982, 29.4.1986, 5.12.1995 ஆகிய நாள்களில் நடத்தினோம்.
இதற்கிடையில் 790 நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் 16.2.1982இல் “WHITHER BACKWARD CLASSES” என்னும் ஆங்கிலக் குறுநூலை நான் அஞ்சலில் விடுத்தேன். அடுத்து “PROPORTIONAL RESERVATION” என்னும் ஓர் ஆவண நூலை 1994, 1995 ஆண்டுகளில் இரண்டு தடவைகள் 790 உறுப்பினர்களுக்கும் இலவசமாக விடுத்தோம்.

அதன் தொடர்ச்சியாக, அய்ந்தாவது தடவையாக 29.10.2008இல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்திட வேண்டி, 21.10.2008இல் 790 உறுப்பினர்களுக்கும் அஞ்சலில் அழைப்பை விடுத்தோம். எதிர்பாராத தன்மையில் 24.10.2008 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் 27, 28.10.2008 தீபாவளி விடுமுறைநாள்கள். இந்நிலையிலும் திட்டமிட்டபடி, 29.10.2008 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினோம். மாண்புமிகு இந்திய அரசின் இணை அமைச்சர் திரு.க. வேங்கடபதி, ஒரிசா மாநிலப் பட்டியல் வகுப்பு உறுப்பினர் திரு. ராதாகாந்த் நாயக் (ஆர்.கே. நாயக்) இருவர் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் நம் முன்னுள்ள பணியோ மிக மிகக் கடினமானது; சுமையானது. ஏன்?

790 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில், 600 பெயர்களுக்காவது, விகிதாசார வகுப்புரிமை பற்றி நாம் புரிய வைத்தால்தான், அரசமைப்புச் சட்டத்தில் விகிதாசார வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்கிற திருத்தங்கள் நிறைவேற்றப்பட முடியும். இது, நம் வாழ்நாள் காலத்தில் - நம்மால் முடியமா என்பதும், இதை நிறைவற்றுவதற்கான வாழ்நாள் நீட்டிப்பு 85ஆவது அகவைக்குப் பிறகும் எனக்கு இருக்குமா என்பதும் மிகமிகப் பொருள் பொதிந்த கேள்வியாகும். இது மிக மிகப் பொருத்தமானதும் கூட. ஆனால் ஒன்றைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும் வாழ்ந்த காலத்தில் கல்வி அறிவே பெற்றிராதவர்களாக ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இருந்தனர். 1952இல் மக்களவைக்கு வந்த உறுப்பினர்களுள் சிலர் கைநாட்டுக்காரர்களாக இருந்தனர்.

ஆனால் இன்று பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், மதச் சிறு பான்மையினரிடையே பல இலக்கம் பேர் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், மற்றும் இந்திய ஆட்சிப் பணி (I.A.S.), காவல் துறைப் பணி (I.P.S) முதலான உயர் பதவியாளர்கள் உருவாகிவிட்டனர்.

பெரியார் - அம்பேத்கர் - லோகியா ஆகிய பெருமக்களின் நீண்ட நெடிய உழைப்பால் பயன்பெற்ற - இப்படிப்பட்ட கோடிக்கணக்கானோர், “நமக்கென்ன வந்தது?'' என்று கருதி, வாளாவிருப்பதோ, இதன் முதன்மையைப் புரிந்துகொள்ள மறுப்பதோ, இதற்கான அறிவைப் பெருக்கிக் கொள்ளாமல் இருப்பதோ, அவரவர் தம் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி இதன் முழுவெற்றிக்குப் பணி புரியாமல் இருப்பதோ, அறிவு உழைப்புத் தராமல் - பணப்பங்கு அளிக்காமல் இருப்பதோ எப்படிச் சரியாகும்? இது எப்படி மனித வாழ்க்கையாகும்? என்பதை எண்ணிப் பாருங்கள்.

பெரியார் - அம்பேத்கர் உழைப்பினால், 60 ஆண்டுகளில் பட்டியல் வகுப்பினரில் 4% பேர், பிற்படுத்தப்பட்டோரில் 4% பேர் உயர் கல்வியும், உயர் வேலையும் பெற்றுவிட்டால், அவற்றால் அந்தந்த வகுப்பு முன்னேறிவிட்டதாகப் பொருளா? முறையே இவ்விரு வகுப்பினரில் ஒரு 120 பேர்களும், ஒரு 300 பேர்களும் நாடாளு மன்ற உறுப்பினர்களாகப் பதவி பெற்றுப், பணம் தேடினால் போதுமா? இவ்விரு வகுப்பினருள் முறையே 900 பேர்களும், 2,000 பேர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் களாக வந்து வீடு, வாசல், பணம், ஓய்வூதியம் தேடிக்கொண்டால் போதுமா?

இவற்றை இன்று பெற்றுள்ள அரசியல்வாதிகளும் அலுவலர்களும் மேலும் மேலும் பலகோடிப் பேருக்கு உயர் கல்வியிலும் அரசு வேலையிலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகள் வந்துசேர உரிய பங்களிப்புச் செய்ய வேண்டாமா? என்பதுபற்றிச் சிந்தியுங்கள்! இது கருதிப் பணிபுரிய விரும்பும் நான், என் எழுத்துப் பணிகளோடு ஒதுங்கி நிற்கவேண்டும் என்று, அன்புகூர்ந்து எண்ணாதீர்கள். முதுமை என்னைத் துரத்துகிறது - சாவு வா, வா என என்னை அழைக்கிறது என்பது உண்மைதான்!

என் முன்னுள்ள எழுத்துப்பணி - முதலில் இரு ஏடுகளை நடத்துவது. இப்பணியில் பெரும்பகுதிச் சுமையை ஏற்றுக் கொள்ள நம் தோழர்களில் சிலர் முன்வாருங்கள்.
என்னால் செய்யப்படவேண்டிய நூல்கள் வெளியீட்டுப் பணிகளை உறுதியாக, 2009இல் முற்றுப்பெறச் செய்வேன். இதற்கும் உரிய பங்களிப்புச் செய்ய முன்வாருங்கள்.
என் களப்பணி தமிழ்நாட்டையும், இந்தியா முழுவதையும் எல்லையாகக் கொண்டது. எனவே, தமிழ்நாட்டில் 33 மாவட்டங் களுக்கும் 33 பேர்கள் - குடும்பத்தை மறந்து - குறைந்த வசதிகளுடன் கட்சிக் களப் பணியாற்றிட முன்வாருங்கள்.

இப்படி என் சுமைகளை இறக்கி வைத்து, என் பணிகளைப் பங்கிட்டுக்கொண்டு நீங்களே தூக்கிட முன்வாருங்கள்! அத்துடன்கூட, “பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் அன்று'' என்கிற முழு மூடநம்பிக்கையிலிருந்து, பெரியார் தொண்டர்களை விடுவிக்கும் பணியில் நம் மா.பெ.பொ.க. தோழர் ஒவ்வொருவரும் முனைப்புக் காட்டுங்கள்! அப்படி முனைவதற்கான பெரியாரியக் கொள்கைப் புரிதலையும், இந்திய அரசமைப்புப் பற்றிய புரிதலையும், உலக அரசியல் அமைப்புகள் - உலகச் சமுதாயங்களின் அமைப்புத் தன்மை இவற்றைப் புரிந்து கொண்டு, பெரியார் காண விரும்பிய ஒரு சமதரும ஆட்சியை அமைப்பதற்கான திக்கை நோக்கி மக்களை அழைத்துச் செல்லுங்கள்! இன்றைக்கு உள்ள அரசமைப்பானது அரசுக் கல்வி, அரசு வேலை என்பவை எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசாரம் தரப்பட வேண்டும் என்பதற்கு மட்டுமே - இருப்பதில் உரிய பங்கு பெறுவதற்கு மட்டுமே பயன்படும் என்பதை அன்புகூர்ந்து உணருங்கள்!

பெரியாரை நன்கு படியுங்கள்! அம்பேத்கரை ஆழமாக அறிந்திடுங்கள்! மார்க்சியத்தை மனத்தில் தேக்குங்கள்! இலெனினை ஆய்வுசெய்யுங்கள்! இவர்களின் பெயர்களை, நாம் ஓதினால் - புகழ்ந்தால் மட்டும் போதாது. வருண அமைப்பு ஒழிக்கப்படவோ, மூடநம்பிக்கை அழிக்கப் படவோ, வறுமை கொல்லப்படவோ, ஆண் - பெண் சமஉரிமை நிலை நிறுத்தப் பெறவோ - இங்கும், தில்லியிலும் எவர் ஆட்சி புரிவதனாலும், இன்றுள்ள அரசமைப்பு அடியோடு தூக்கி எறியப்படாமல் ஒருக்காலும் முடியாது என்கிற நம் குறிக்கோளை அப்போதுதான் நீங்கள் உறுதிபடப் பற்றிக் கொள்ளமுடியும். அப்படியெல்லாம் செய்து, மேலும் மேலும் அவரவர் பங்களிப்பைச் செய்திட அருள்கூர்ந்து ஆயத்தம் ஆகுங்கள்!
முட்டையை அடைகாக்கும் கோழிபோல், தமிழ்நாட்டிலேயே அடைந்து கிடந்துகொண்டு, இதை நாமோ, மற்றும் எவரோ, எந்த மொழிக்காரரோ எப்போதுமே சாதிக்க முடியாது! முடியாது! முடியாது! - என்பதை மனத்தில் தேக்குங்கள். இதை எனக்குத் தந்தை பெரியார் உணர்த்தினார்.

இரண்டு கைகளையும் அகல விரித்துக்கொண்டு, ஒரு வீரனைப்போலவே ஆட்டி ஆட்டி, ஆத்திரமும், காத்திரமும் பொங்கிட என்னிடம் - (வே. ஆனைமுத்துவிடம்) தந்தை பெரியார் மனந்திறந்து கூறினார் : “ஏம்ப்பா! நாம இந்தியையும் எதுத்துத் தொலைச் சுட்டோம்; இங்கிலீ´லும் எனக்குச் சரளமாப் பேச வரலே; எனக்கு இந்திமட்டும் தெரிஞ்சிருந்தா இந்த இந்தியாவையே ஒரு ஆட்டு ஆட்டி வெச்சிருக்க மாட்டேன்!'' என, இரண்டு தடவைகள், 1972இல் மனந்திறந்து அவர் கூறினார். இந்தியாவை ஆட்டிவைக்காமல் - வலிமையான ஒற்றை ஆட்சி இந்தியாவைக் கலகலக்கச் செய்யாமல் எந்த மொழி மாநில அரசுக்கும் எப்போதும் தன்னாட்சி உரிமை வராது என்பதை உணருங்கள்!''

ஒரு கொள்கையினைக் கட்டிக்காப்பது முதலில் அரசுதான். “இந்திய அரசு'' மட்டுமே இங்கு “அரசு - State'' ஆகும். அது வருண ஒழிப்பு - வறுமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு அரசாக - ஒரு கூட்டாட்சியாக மாற்றி அமைக்கப்படவேண்டும். இதுவே நம் குறிக்கோள். இக் குறிக்கோளின் ஒரு பகுதியான வகுப்புவாரி உரிமை, ஒடுக்கப்பட்ட வகுப்பினர் ஒற்றுமை ஆகிய இரண்டு செய்திகளை யும் முன் வைத்துத்தான், 29.04.1978 முதல் நானும் நம் தோழர்களும் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்கிறோம்.

1978, 1979, 1981 - 1987, 1990 - 1995, 2000 - 2005 ஆண்டுகளில் பீகார், உ.பி. இராசஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், அசாம், பஞ்சாப் முதலான வட மாநிலங் களிலும்; மற்ற தென் மாநிலங்களிலும் 500 பொதுக் கூட்டங்களில் நான் பேசியிருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் பேசினேன். அந்தச் சரக்கு வடமாநிலத்தவர்களுக்குப் புதியது; தேவையானது. எனவே துன்பப்பட்டுப் பேராசிரியர்கள் இந்தியில் என் பேச்சை மொழி பெயர்த்தனர். 1978-1991இல் மா. முத்துச்சாமி பல ஊர்களில் தமிழில் சிறப்பாகப் பேசினார்; அதை நான் ஆங்கிலப்படுத்திட, அடுத்து இராம் அவதேஷ்சிங் இந்தியில் அதைப் பெயர்த்துக் கூறுவார். மிகக் கடினமான ஒரு பணி.

பெரியார் விரும்பியதை, இந்தியில் பரப்புரை செய்வதை - நான் கடந்த 30 ஆண்டுகளில் செய்திடத் தகுதி பெற்றிருக்க வேண்டும். அவருடைய கொள்கையை விதைக்கும் ஒரு பரப்புரையாளன் நான். எனவே அது என் கடமை. எனக்குள்ள இந்த மாபெரும் குறையை நீக்கிட, 1991 முதல் எனக்குத் தோன்றாத் துணையாக விளங்குபவர் பல மொழிகளைப் புரிந்தவரும், எம்.காம். பட்டம் பெற்றவரு மான சங்கமித்ரா ஆவார். ஆங்கிலத்தில் அவர் அருமையாக உரையாற்றுவார்; இந்தியில் கொச்சை நடையில் மணிக்கணக்கில் பேசுவார் - அது இந்தி பேசுவோர் நெஞ்சங்களில் நேரே பதியும். இவரைப் போல மேலும் பலர் நம்மிடையே உருவாக வேண்டும்.

இப்படிப் பல தோழர்கள் - பல இந்திய மொழிகளிலும் பேசிடவும் எழுதிடவும் - அத்தகுதியுடன் இந்தியா முழுவதும் சென்று பெரியாரை - அம்பேத்கரை விதைக்கவும், அதன்வழி ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே ஒற்றுமையை உண்டாக்கவும், நாம் விரும்பும் சமதருமக் கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றி அமைக்கவும் கட்டாயம் உறுதியாக நம்மால் முடியும்.
நாம் - மா.பெ.பா.க.வினர் கோரும் உண்மையான இந்தியக் கூட்டாட்சியில், இந்தி அரசு மொழியாக - அலுவல் மொழியாக (Official language) - இராது. அந்தந்த உறுப்புக் குடியரசின் மக்கள் பேசும் மொழியே ஆட்சி மொழியாக - கல்விக்கான மொழியாக - அரசு அலுவலுக்கான மொழியாக - நீதிமன்ற மொழியாக இருக்கும்
.
அருள்கூர்ந்து நம் மா.பெ.பொ.க. தோழர்கள் இவற்றை மாந்துங்கள்; உளம் கொள்ளுங்கள்; உழைக்க முன் வாருங்கள். நான் எப்போது மறைந்தாலும் - நம் குறிக்கோள் அப்போதுதான் வெற்றிபெறும்.

1.12.2008 - வே. ஆனைமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com