ச.தமிழ்ச்செல்வன் தொடருக்கு ஒரு எதிர்வினை
காலத்தின் தேவை ஈவ் டீசிங் ஆகுமா?
- வேம்பு மணிசாமி,கம்பிக்குடி
‘உற்பத்தியும் மறு உற்பத்தியுமே மானிட வாழ்வின் பிரதான அடிப்படைகள்’ என்கிறது மார்க்சியம். இதில் உற்பத்தி என்பது மனித சமூகம் இந்த பூமியில் வாழத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட் களையும் தங்கு தடையின்றி உருவாக்கி, வழங்குவதையும்; மறுஉற்பத்தி என்பது மனித இனத்தின் பெருக்கத்தையும் குறிப்பதாகும். முற்கால உலகம் காடுகளும், விலங்கினங்களும் பல்கிப் பெருகிய ஒரு சூழலைக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் மனித இனமானது ஒரு சிறுபான்மைச் சமூகமாக, இயற்கைக்கும், பிற விலங்கினங்களுக்கும் அஞ்சிக் கட்டுப் பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தது.
மனித இனம் அறிவு பெற்று மெல்ல மெல்ல பிற விலங்கினங்களையும் இயற்கையையும் மீறி வளரத் துவங்கிய காலத்தில் அந்தப் போராட்டத்திற்குத் தேவையான அளவுக்கு ஜனத் தொகை என்பது இல்லாமலிருந்தது. அப்போது மனித இனப்பெருக்கத்தின் தேவையென்பது அவசியமானது. இந்த அவசியத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டே பல விதமான உத்திகளையும் மனிதன் உருவாக்கிக் கொண்டான். லிங்க (ஆண்குறி) வழிபாடும், ஆவுடை(பெண் குறி) வழி பாடும் உருவாக்கப்பட்டது. ஆலயங்களில் பிரமிப்பூட்டும் பெண்ணுடல் சிற்பங்களும், ஆண் - பெண் கலவி லீலைச் சிற்பங்களும் வடித்தனர். கலை - இலக்கியங்கள் மூலம் ஆண் - பெண் கலவி குறித்தான சொல்லாடல் புனைவுகளும் இதன் பொருட்டே உருவாயின. அதாவது, பெண்ணின் முகமும் தடமுலைகளும் காம நுகர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டே பார்வைக்கும், சிந்தைக்கும் வைக்கப்பட்டன. அதாவது பெண்ணுடல் இயல்பு மீறிய கவர்ச்சிப் பொருளானதற்கும் ஒரு தேவை என்பது இருந்தே இருக்கிறது. அதுதான் மனித இன உற்பத்திப் பெருக்கம் எனும் தேவை. அது அந்தக்காலத்தின் தேவை.
காலத்தின் தேவையாய் எழுந்த சிலைகளும், இலக்கிய சிந்தனைகளும் இன்றைக்குக் காலப் பொருத்தப்பாடு இல்லாமல் லிங்க காலம் போய் சிவப்பு முக்கோண காலமாய் ஆகிப் போயிருக்கலாம். ஆனால், தன் காலத் தின் அதி அவசியத் தேவையைப் பாடிய அந்தநாள் புலவன் எப்படி ஈவ்டீசிங் செய்தவனாவான்? பழந்தமிழ் இலக்கியங்களை இந்த அடிப்படை யிலேயே நாம் அணுக வேண்டும். ஆண்-பெண் உறவின் அவசியத்தை வள்ளுவன், கம்பன், பாரதி என்று எந்தத் தமிழ்ப் புலவனும் ஒதுக்கித் தள்ளிடவில்லை. இதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.
எனவே, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கால - தேச வர்த்தமானங்களைக் கடந்த ஒரு உண்மையாக இதனைச் சித்தரிப்பது எப்படிச் சரியாகும்? லிங்க - ஆவுடை வழிபாட்டுச் சின்னம் என்பது அந்தக் காலத்தின் தேவை, சிவப்பு முக்கோணச் சின்னம் இந்தக் காலத்தின் தேவை அல்லவா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|