இளமதி பதில்கள்
ச.மணிகண்டன், பாலக்காடு
அண்மையில் தங்கள் மனதைக் கலங்கச் செய்த செய்தி எது?
ஒன்றல்ல, பல இருக்கின்றன. பெரம்பலூர் அருகே கண் சிகிச்சை செய்து கொண்ட ஏழை மக்களில் சுமார் 50 பேர் தங்களின் கண்பார்வையை இழந்துள்ளனர். அலட்சியத்தால் அறிவியலின் பலன் ஏழை களுக்குச் சென்று சேர்வதில்தான் எவ்வளவு இடர்கள்?
இலங்கையில் இனப்பிரச்சனை காரணமாக புலம் பெயர்ந்து தமிழகத்தில் சுமார் 117 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அடுத்த தலைமுறை வாரிசுகளும் இங்கேயே பிறந்து வளர்ந்து நிற்கின்றனர்.
இதில் என்ன சோகம் என்றால், அந்த மக்கள் தங்களது பூர்வீகப்பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்து விட்டதுதான். புதிய தலைமுறையினரிடையே அவர்களின் தனித்துவமான வழக்குத் தமிழ் தொலைந்துவிட்டது. அவர்களின் வீரத்தையும், வாழ்க்கையையும் சொல்லும் நாட்டார் பாடல்கள் மறக்கப்பட்டுவிட்டது. அரைப் பாவாடை, சட்டை உடுத்தும் அந்தத் தமிழ் இளம் பெண்கள் இன்று சேலை, சுடிதாருக்கு மாறிவிட்டனர். தமிழகத்துப்பாணி வழிபாட்டு முறைகளும், சாதிய உணர்வுகளும் அவர்களையும் கவ்விவிட்டன. இவையெல்லாம் நமக்கும் கவலையைத் தரும் சோகமென்றால் இதைவிடப்பெரிய சோகம் இது: இந்த நிலைமையைப் போக்கி, அவர்களின் பூர்வீக அடையாளங்களை மீட்டுவோர்க்கும் விழிப்புணர்வுக் கலை முயற்சிகளுக்கும் அந்த இளைஞர்களிடையே பெரிதாக வரவேற்பு இல்லையாம்!
கே.ஆர். தாமோதரன், பட்டீஸ்வரம்
‘அவாள்’ எப்போதும் நமக்குச் சவால்தானா?
இந்திய நாட்டுக்கு, நம் தாய்த்திருநாட்டுக்குச் சவால்களாக இருப்பன இன்றைக்கு இரண்டு விஷயங்கள்: ஒன்று அமெரிக்காவிடம் இந்த நாட்டின் இறையாண்மையை அடகுவைக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு துடியாய்த் துடிப்பது. மற்றொன்று, இந்த நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கு விடுவிக்கப்பட்டுவரும சவால், அது இந்துத்துவா மதவெறி அபாயம். இந்த இரண்டு அபாயங்களையும் முறியடிக்கும் லட்சியப்போர்தான் இன்றைய முதற்பெரும் தேவையாகும்.
மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் இந்த நேரங்களில் முதன்மையான அணு ஒப்பந்தம் குறித்து தமிழக முதல்வரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையே தனது கடமையாகக் கருதும் காங்கிரஸ் அவருக்குச் சவாலாகத் தோன்றாமல் போய்விட்டது! மதவாதத்தை, சாதியத்தை எந்தவித ஊசலாட்டமும் இன்றி எதிர்த்துக் களம் காணுவது இடதுசாரிகள்தான். இந்த உண்மையை மறைக்கும் விதமாக முதல்வரும், அவரது அமைச்சர்களும் பேசிவருவது முறையற்றது. ‘அவாள்’ என ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சொல்லிச் செல்வதால் தனது இந்த வரலாற்றத் தவறுகளுக்கு அவர் பரிகாரம் காணமுடியாது. இந்துத்துவா அபாயத்தைக் குறுக்கி, ஒரு குறிப்பிட்ட சாதியின் தலையில் அதைச் சுமந்தப் பார்ப்பது சரியான அணுகு முறையாக இருக்க முடியாதென்றால், இடது சாரிகளின் விமர்சனங்களை இவ்வாறாக எதிர்கொள்வதென்பது மகா அபத்தமானதாகும்.
எச். காதர்பாட்சா, மேலப்பெருமாள் பட்டி.
அண்மையில் தாங்கள் ரசித்த நகைச்சுவை எது?
வடிவேலு, விவேக் வகையறாக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்கள் விஜயகாந்த் கட்சிக்காரர்கள். விருதுநகரைச் சேர்ந்த அவரது கட்சிக்காரர் ஒருவர் நாளிதழ் ஒன்றில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவரை ஆற்றலில் அலெக்சாண்டர் என்றும், வீரத்தில் நெப்போலியன் என்றும், அரசியலில் சாணக்கியன் என்றும், அறிவில் அண்ணா என்றும், எளிமையில், கடமையில் காமராஜர் என்றும், மனித நேயத்தில் புரட்சித் தலைவர் என்றும் ஒரு ‘அவியல்’ போற்றி பாடியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பு ஜோக் என்ன வென்றால், தத்துவத்தில் காரல்மார்க்ஸ் என்று அவரை விளித்துப்போற்றியிருப்பது. இதைவிட என்ன காமெடி வேணும் உங்களுக்கு?
ஈ சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சீனா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றிருக்கும் போது இடதுசாரி கட்சிகள் மட்டும் இங்கே எதிர்ப்பது ஏன்?
சீனா 1992லேயே அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது. அப்போது இந்த ஹைடு சட்டம் இல்லை. இது நம்மை கொத்தடிமையாக்கும் சட்டமாகும். இது நம் இந்தியாவுக்கு மட்டுமே திணிக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் கையெழுத்துப்போடத் தயாரானாலும்கூட யுரேனியம் சப்ளை செய்யும் நாடுகள் இந்தியாவுக்கு மேலும் பல புதிய நிபந்தனைகளை விதிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குள் இந்தியாவை கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்று புஷ் துடியாய்த்துடிக்கிறார்.
நா.கலைமதிராஜன், கோவை - 6
நாடாளுமன்றத்தில் அணிமாறி வாக்களித்தும், வாக் களிப்பில் பங்கேற்காமல் ‘டிமிக்கி’ கொடுத்தும் நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை என்னதான் செய்வது?
கொறடா உத்தரவை மீறிய அந்தந்தக் கட்சி உறுப்பினர்களை விசாரித்து, பதவிநீக்கம் செய்ய சட்டமிருக்கிறது. அந்த விசாரணைக்கான கோப்பு சபாநாயகரிடம் ஆய்விலிருக்கிறது. இப்படி அணி மாறி தன் சொந்தக்கட்சிக்கே துரோகமிழைத்திட அளிக்கப்பட்ட கோடிகள் அனில் அம்பானி அமர் சிங் மூலமாகத் தந்தவை என்பது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. இப்போது மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு நம் நாட்டின் கோடிக் காணக்கான தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பிராவிடன்ட் ஃபண்டுப் பணத்தை - சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை அம்பானியிடம் கொடுத்துவிட்டது. இப்படித்தான் பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இதேபோல பிராவிடன்ட் ஃபண்டுப் பணத்தைத் தனியார் முதலாளிவசம் தந்தார்கள். திடீரென அந்தக் கம்பெனி திவாலாகி விட்டதாக அறிவித்தது. அரசு நிவாரணம் தரவில்லை. அந்தத்தொழிலாளிகள் நடுத்தெருவுக்கு வந்தனர். இதே நிலைதான் இங்கும் வர வேண்டுமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|