சூழ்ச்சியும் இல்லை திரையும் இல்லை
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் - என்று மனம் வெதும்பினான்; கண்களிரண்டை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? - என்று எள்ளி நகையாடினான். அந்த மகாகவி பாரதியின் இந்த வைர வரிகள் இன்றும் அப்படியே ஒலிக்கின்றன.
அணுசக்திக்காக தேச சுதந்திர மேன்மைகளை ஏகாதிபத்திய அமெரிக்காவின் கரங்களிடம் பறிகொடுக்க அசுர முனைப்போடு நடவடிக்கையில் இறங்கிச் செயல்படுகிறது காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங்கின் ஐ.மு. கூட்டணி அரசு.
தேச சுதந்திரத்திற்காக வெஞ்சிறைப்பட்டு - இன்னுயிர் ஈந்து போராடிய கம்யூனிஸ்ட்டுகள் - இடதுசாரிகள் நாட்டைக் காப்பதற்காக காங்கிரசிடமும் அதன் ஐ.மு. கூட்டணித் தலைவர்களிடமும் ஒருமுறை இருமுறையல்ல ஓயாது பலமுறை பேசிப் பார்த்தனர். அதுவிழலுக்கு இறைத்த நீராகிப் பலனின்றிப் போகவே, ‘போது மடா சாமி.... இனி விட்டு விலக வேண்டியதுதான்’ என்று - 61 எம்.பி.க்கள் பலம் இருந்தும், அமைச்சர்ப் பதவி சுகம் நாடாமல், புறத்திருந்து அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். வீழ்ந்து போக இருந்த ஐ.மு.கூ. அரசைக் காப் பாற்ற குதிரை பேரம் நடத்தி, பணமூட்டையால் முட்டுக் கொடுத்து நிலைநிறுத்திக் கொண்ட அவலம் அரங்கேறியது நாடறியும்!
ஒருபக்கம், தேசத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அமெரிக்கா விடம் அடகு வைக்க முனைந்துள்ள காங்கிரஸ் - மற்றொரு பக்கம், மதப் பகைமையை மூட்டி மக்களைக் கூறுபடுத்தும் பிஜேபி. இத்தகைய இரு கட்சி களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகளோடு இனி உறவு இல்லை என்பதும், காங்கிரஸ் - பிஜேபிக்கு பதிலாக ஒருபுதிய மாற்று அணி கட்டமைப்பது என்பதும் கம்யூனிஸ்ட்டுகள் - இடதுசாரிகள் மேற்கொண்டுள்ள நிலை.
இதைக் கண்டு கலைஞர் “சுருண்டு கிடந்த சூழ்ச்சித் திரை விரிந்து விட்டது” என்று கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறாகச் சொல்லம்பு எய்தார். அணுசக்தி ஒப்பந்தத்தின் சூழ்ச்சித் திரையைக் காணாமல் இடதுசாரிகளிடம் சூழ்ச்சித் திரை என்று கூறுவது எவ்வகை நியாயம்?
“அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் இருந்த இடம் தெரியா மல் போவார்கள்” என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி அரசியல் முதிர்ச்சியற்ற வார்த்தைகளை அள்ளி வீசியது எவ்வகை நாகரிகம்?
அணுசக்தி ஒப்பந்தத்தில் மட்டுமே அக்கறையும் அவசரமும் காட்டி, மக்களை தினம்தினம் மூச்சுத்திணற வைக்கும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற வற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய - பெரும் பண முதலைகளுக்கு மட்டுமே சேவகம் செய்கிற காங்கிரஸ் அண்மைக் காலத்தில் தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று பிஜேபி ஆட்சியதிகாரத்திற்கு வர வழி வகுத்துத் தந்தது. தொடர்ச்சியாக தோல்விப் பாறைகளின் மீது மோதுவதால் காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்தான். அதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு அறிவுறுத்தியது, மூழ்கும் கப்பலில் பயணிக்க வேண்டாமென்று. அந்த கூடா நட்பு வேண்டாம் என்கின்றனர் இடதுசாரி கள். காங்கிரஸ் - பிஜேபிக்கு பதிலான ஒரு மாற்று அணிக்கு தி.மு.க.வும் வந்தால் அதை மக்களும் வரவேற்பார்கள்.
- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|