எதுவும் நடக்கலாம்
ஒரிய மூலம் : அபி நாராயண் நாயக்
ஆங்கிலத்தில் : துர்க்காபிரசாத் பாண்டே
தமிழில் : எல்.பி.சாமி & ராகுல் ஆனந்த்
கடவுளால் கைவிடப்பட்ட
இந்த நிலப்பரப்பில்
எதுவும் நடக்கலாம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் பிணம்
மின் கம்பத்தில் தொங்குவதை...!
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட
அமைச்சர் கோர்ட்டிலிருந்து
பல்லிளித்துக் கொண்டு வெளிவருவதை...!
மழையில்லாது காய்ந்த காலகந்தி மண்
வேற்றுலக சாபக்கேட்டால்
எரிந்து சாம்பலாவதை!
நாளிதழைத் தோண்டும் சிலர்
தங்கள் ஆசைக் கனவுகளின்
மக்கிய எலும்புக்கூடுகள் கூட
கிடைக்காமல் வருந்துவதை...!
இல்லையென்றால்
சில குள்ளநரிகள்
நமது ஜனநாயகத்தின் சடலங்களில்
மிஞ்சியதைக் கடித்துக் குதறுவதை
பார்க்கக்கூடும்!
அத்தியாவசிய பொருள்களின் விலை
கட்டுக்கடங்காமல் போவதை!
சக்கரவள்ளிக் கிழங்கும், வேம்பும்
தேசிய மயமாக்கப்பட்டு
பழங்குடியினரின்
மரபுரிமை பறித்துக் கொண்டு
அரிசிக் கஞ்சியைத்
தேசிய பானமாக அறிவிப்பதை!
ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்
அந்தப்புரமாக வேடந்தரித்து
கருப்புத் தோல்கள்மீது
வெள்ளைத் தோல்கள்
தாகம் தீர்ப்பதை..!
உருளைக்கிழங்கு முதல்
தீட்டுத் துணிகள் வரை
வெளிநாட்டு நிறுவனங்கள்
தயாரிக்க அனுமதிப்பதை!
மருத்துவமனைகளும்
அனாதை ஆசிரமங்களும்
சில அட்டைகளிடம்
கைமாறுவதை!
தொழிற்சாலைகள்
காடுகள் சுரங்கங்கள்
தாயின் மார்புகளும்
வெளிநாட்டாருக்கு
ஏலமிடுவதை
பார்க்க நேரலாம்!
கடவுளால் கைவிடப்பட்ட
இந்த நிலப்பரப்பில்
எதுவும் நடக்கலாம்! செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|