தமிழ் ஒளி பரவட்டும்!
இரா. தெ. முத்து
ஊரை எழுப்பிய தாரை
தமிழ்ச்சாதி விழித்திட
முழங்கிய பேரிகை.
காலத்தின் சூழ்நிலையைக்
கருத்தரித்த கவிதை
கனன்ற பெருநெருப்பு.
யாவருக்குமான வாழ்வை
மானுடத்தை
முன்னெடுத்த கவிக்குயில்.
கவித்துவம் கம்பீரம்
பொதுமை நோக்கோடு இயங்கிய
தனித்த அடையாளம்
எளிய மக்கள் ஏற்றம் பெற
எழுதுகோல் தரித்த சூறாவளி.
சமூகத்தின் உயிர்ப்புகளை
வரைந்த தூரிகை
இழிநிலைக்கு எதிரான
சுயமரியாதை.
வரலாறு காவியம் கதைகள்
இவைகளில் சொல்லப்பட்ட
அநீதிகளுக்கு மாற்றான நீதி.
வர்ணங்களில் கலப்பையும்
மனங்களில் கலப்பையும்
ஆதரித்தவன்.
எனினும்
மொழிக்கலப்பை
வழிமொழியாத
தனிமொழி
வாழ்வு பற்றிய புரிதலை
நேர்படச் சொன்ன
விஞ்ஞானி
படைப்பின் வடிவங்கள் தோறும்
வண்ணக்கோலம் காட்டிய
வானவில்.
யாக்கை சிலிர்க்க
யாப்பைத் தொடுத்தவன்
உலகம் வியக்க சொற்கோலம்
போட்டவன்.
கொடுமையை எதிர்த்து
கொதித்த இவன் பேனா-
காதல் என்றால்
கசிந்துருகும்;
பாவை வாயூறும் நீருக்கு
இளநுங்கு நீரை
உவமை சொல்லும்.
சிலரின் திருப்திக்கும்
சில்லறைக்கும் எழுதி
கவிதைக்குக் கல்லறை
கட்டுவோர் மத்தியில்
இருள் கிழித்து எழுந்த சுடரொளி
சாதியக் கூண்டுகளில்
சிக்காத தமிழ்ப்புலி.
வாழ்ந்த காலத்தில்
வாழ்க்கை மறுக்கப்பட்டவன்;
வாழ்கிறான் இன்றும் என்றும்
மனங்களில்.
மாயைகள் மடிய
பொய்மைகள் பொசுங்கிட
மண்ணெங்கும் மனமெங்கும்
பரவட்டும் தமிழ் ஒளி!
(புதுச்சேரியில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஊராகிய கருவாக் குப்பத்தில் செப்டம்பர் 21 அன்று புதுச்சேரி அரசும், தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய கவிஞர் தமிழ்ஒளி 85வது பிறந்தநாள் விழாவில் கவியரங்கத் தலைமையேற்று வாசித்த கவிதை)
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|