காந்திஜியும் தமிழும்
“கப்பல் டாக்டர் எனக்கு, ‘தமிழ்ச் சுயபோதினி’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமாயின், உருதுமொழி தெரிந்திருப்பதும் சென்னை இந்தியருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
“தமிழிலோ, நல்ல அபிவிருத்தி அடைந்து வந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், ‘தமிழ்ச் சுயபோதினி’ நன்றாக எழுதப்பட்ட புத்தகம். இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.
இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்த பிறகும், இம்மொழிகளைத்தொடர்ந்து படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால், அது சாத்தியமில்லாது போயிற்று. 1893க்குப் பிறகு நான் அதிகமாகப் படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில், தமிழிலும், உருதுவிலும் எனக்குக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் தமிழ் படித்தேன்; உருது படித்தது எராவ்டா சிறையில். ஆனால், தமிழ் பேசக் கற்றுக் கொள்ளவே இல்லை. நான் படித்த கொஞ்சம் தமிழும், பயிற்சி இன்மையால் துருப்பிடித்துக் கொண்டிருந்தது.
தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என்மீது பொழிந்த அன்பு, இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும், தெலுங்கரும் காட்டிய விடா முயற்சியையும், தன்னலமற்ற தியாகத்தையும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை.
அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள். அவர்கள் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர்; ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப் பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதற்கு, அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியது போல், தமிழ்க் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன்”.
-காந்திஜி
(காந்திஜி எழுதிய சுயசரிதையாகிய “சத்திய சோதனை” நூலிலிருந்து)
கன்பூசியஸ்
கன்பூசியஸ் சீனப் பேரறிஞரும் தத்துவ ஞானியுமான கன்பூசிய சின் 2559 வது பிறந்தநாள் 28.9.2008 அன்று சீனாவில் கொண்டாடப்பட்டுள்ளது. அவர் காலத்தில் மிகச்சிறந்த கல்வி யாளராய் அவர் திகழ்ந்தார். ஏராளமான மாணவர்களுக்கு அறிவு புகட்டினார். அவர் உருவாக்கிய சிந்தனைப் பள்ளி சீனாவில் பல தலைமுறைகளாய் வழிகாட்டியது.
இன்றைய நவீனக் கல்வியாளர்களும், தத்துவ ஞானிகளும்கூட கன்பூசியசைப் போற்றி வருகிறார்கள். அவர் பிறந்த ஷான்டாங் மாநிலத்தில் பாரம்பரிய முறையிலும், நவீன காலமுறையிலும் மிகச் சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாடி யுள்ளனர். இதில் மதம் எதுவுமில்லை. சீனத் தத்துவ ஞானக் கலாச்சாரத்தின் பிதாமகனாக கன்பூசியஸ் இன்று வரை திகழுகிறார்.
கன்பூசியசின் புகழ் பெற்ற வாசகம் இதோ:
“நண்பர்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளனர்.
எத்தனை மகிழ்ச்சி நமக்கு!
நான்கு மாகடல்களுக்கிடையே வாழும் அனைவருமே
நமது சகோதரர்கள் என்று உணர்வீர்!”
அண்மையில் சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சியில் கன்பூசியசைப் போல பாரம்பரிய உடை யணிந்து அவரது மேற்கண்ட வாசகத்தைக் கூறிக் கொண்டே தொண்டர்கள் மைதானத்தைச் சுற்றி வந்தனர். புத்தரையோ, மகாவீரரையோ நமது நாட்டில் இப்படிக் கொண்டாடுகிறோமா என்ன?
கன்பூசியஸ் நல்மொழிகள் :
* மன்னன் தான்தோன்றித்தனமானவனாக இருந்தால் அவனைப் புரட்டி எடு.
* அழியும் உலகில் அழியாத மனிதர்களை உருவாக்குவது நூல்கள் மட்டுமே.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|