"கண்ணா ஆ!" சிறுகதை குறித்து
மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்
செம்மலர் பிப்ரவரி 2009 இதழில் வெளிவந்த தேனி சீருடையான் அவர்களின் "கண்ணா ஆ!" சிறுகதை குறித்துப் பேசுமுன் சில விபரங்கள்:
தாய்மையும் குழந்தைப் பேறும் காலங்காலமாக இருந்து வருபவை.
பிரசவத்தின் போது தாய்க்குப் பிறப்புறுப்பில் கடுமையான ரணம் ஏற்படுவது இயல்பு. இதைக் குறைப்பதற்கே, தற்போது அவசரத்திற்குக் கோணிப்பையில் ஓட்டைபோட்டு அரிசி எடுப்பதைப் போல் கத்தியால் ஓரத்தில் கிழித்துக் குழந்தையை எடுக்கிறார்கள். பின்னர் இதற்குத் தையல் போடுகிறார்கள். இதற்குப் பெயர் "சுகப் பிரசவம்".
பிள்ளைக்குப் பாலூட்டும் காலம் முழுவதும் பெரும்பாலும் மாதவிடாய் தள்ளிப்போவது இயல்பு. இது அடுத்த குழந்தையைத் தள்ளிப்போட உதவுகிறது. பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்கிறது. இரவு பகல் பாராமல் குழந்தையின் சிறுநீர், மலம் இவற்றைத் துடைத்து, துணிகள் துவைத்து, பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாய்க்குத் தனது நலன் குறித்த கவனம் குறைந்து விடும். இத்தருணங்களில் பெண்களுக்கு உடலுறவு மீதான நாட்டம் குறைவது இயல்பு. இத்தனை சிரமங்களும், மனநிலையும் ஆண்களுக்குப் புரியாமல் போவது அதைவிட இயல்புதான்.
பெண்களின் இயல்பான ஆசைகள், தேவைகள் மீதான சமூக ரீதியான கட்டுப்பாடு, குறிப்பாக, கருவுற்ற காலத்திலிருந்து பாலூட்டும் காலம் வரை மிக அதிகம். இவை பெரும்பாலும், மூட நம்பிக்கையை அல்லது போலி நம்பிக்கையைச் சார்ந்ததாக இருக்கிறது. மிகச் சில விஷயங்கள் மட்டுமே மருத்துவ அறிவியல் விளக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றன. இந்த நிராசைகள், அடக்கப்பட்ட உணர்வுகள், பயம், கோபம், அழுகை... இவை தொடர்பான நுண்ணிய மாற்றங்கள் தாயையும், குழந்தைகளையும் பாதிப்பதாக அமையலாம்.
குழந்தையின் உலகமோ மிக மென்மையானது, விசித்திரமானது. மனிதக் குழந்தைதான் மிக நீண்ட காலத்திற்குப் பெற்றோரைச் சார்ந்ததாக இருக்கிறது. குழந்தைகளின் உணர்வுகள் மிக நுண்ணியவை. தன்னைத் தொடுவது தாயா, பிறரா, அந்தத் தொடுதல் அன்பானதா, போலியானதா என குழந்தைகளால் உணர முடியும்.
எனவே, தாயின் உணர்வுகள் - ஆசை, கோபம், இயலாமை, நிராசை,.... இவை தாயிடமிருந்து குழந்தைக்கு ஒரு பார்வையிலோ, கொஞ்சலிலோ அல்லது தாய்ப் பாலிலோ சென்றுவிட வாய்ப்பு உள்ளது.
இதுபோலவே, பெற்றோரின் உடலுறவுக் காட்சியைப் பார்க்க நேருவதாலோ அல்லது அத்தேவையை மறுத்துக் கொள்ள நேரும் போது தாய்க்குத் தோன்றும் உணர்வுகளோ, சேர்க்கை நடந்தது குறித்துத் தாய்க்கு ஏற்படும் குற்ற உணர்வோ குழந்தையின் உடல், மன நலன்களைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவர் - மருத்துவம் என்கிற நிலையில், குழந்தையின் உடல் நலன் குறித்த விசாரணையை மேற்கொள்ளும் போது, பெற்றோரின் - குறிப்பாகத் தாயின் உடல் நலன் மற்றும் மனநல உணர்வுகள், குடும்பச் சூழல் முதலியவை குறித்தான விசாரணையும் அதில் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததாகிறது.
இப்போது கதைக்கு வருவோம். குழந்தையின் அழுகையை, தாயின் உணர்வுகளை, நரைத்த கிழவியின் பாரம்பரிய மருத்துவ அறிவை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.
ஆனால், தாயின் பாலியல் தேவையை - அவள் தனது உடலும், மனமும் அதற்குத்தயார் என்று நினைக்கும் போது - ஏதோ உணர்ச்சிவசப்பட்ட சூழலில் தவறுதலாக நடந்தது போல் குறிப்பிடுவது மூட நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பதே. இதன் உச்சகட்டமாக, பக்கத்து வீடு, எதிர் வீடு என்று வம்புக்கிழுத்திருப்பது தேவையற்றது. இயற்கையான மாதவிலக்கு, தாம்பத்தியம் போன்றவை இத்தனை நாள் கடவுளர்க்கு எதிராக இருந்தது. இப்போது குழந்தைகள் சார்ந்தும் வருகிறதே... ('கலாச்சாரக் காவலர்கள்' கண்ணில் இக்கதை படாமல் இருக்கக் கடவதாகுக!)
குழந்தைப் பேறும், உடலியல் தேவைகளும், குழந்தையின் அழுகையும் எல்லா சமூகத்திற்கும் உரியது - இது எப்படி நம் நாட்டு 'நோயாகும்' என தெரியவில்லை.
உலகில் பெரும்பாலான மக்கள் பாரம்பரிய மருத்துவ முறையையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைவுதான். நமது நாட்டுப் பெரியம்மை தடுப்பு முறைதான் - ஆங்கிலேயர்கள் மூலம் காப்பியடிக்கப்பட்டுப்பின் புதிய வடிவிலே பெரியம்மை தடுப்பு முறையாக அறியப்பட்டது. நமது நம்பிக்கைகள், நடைமுறைகள், மரபுசார் அறிவு அனைத்தையும் அறிவியல் பார்வையில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய நிலைக்கு மக்களைத் தயார் செய்வதே சமூக அறிவியலாளர்கள், கலை இலக்கியவாதிகளின் கடமையாக இருக்க வேண்டும்.
உண்மைச் சம்பவமாக அறிந்த நிகழ்ச்சியொன்று இந்தக் கதையின் கருவாக அமைந்திருக்கக் கூடும். ஆனால், அதன்வழி தேனி சீருடையான் சொல்லும் செய்தி மேற்படி அளவுகோல் வைத்து உரசப்படாமல் வெளிப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
- மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்
சென்னை - 34
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|