பா.உஷாராணி கவிதைகள்
அன்பின் சம்பளம்
உன்னுடைய
எல்லா பிரியங்களும்
எல்லா கோபங்களும்
எல்லா மறக்கப்பட்டவைகளும்
உனைச் சார்ந்த
எல்லா தகவல்களும்
நிரப்பப்பட்டிருக்கிறது
எனது உயிர் பலூனில்...
பறக்கும் கனவுடன் எழும்பும்
அதனை
உடைப்பதற்கென்றே
எப்போதும்
உன் கைவசமிருக்கின்றன
புறக்கணிப்பின் ஊசிகள்...
பூத்து உதிரும் பூக்களென
காலடியில் உதிர்கிறது
உன்னைக் கடக்க
நினைக்கும் உறுதி...
வார்த்தைகளற்ற பிரதேசத்தின்
வல்லரசாக நீ
உன்னைப் பிரகடனப்படுத்திக்
கொண்டதொரு பொழுதில்
அன்பின் சம்பளம்
அவஸ்தை என முழக்கமிட்டது
சாத்தானின் குரல்.
அந்த வினாடி...
முன்தினம் பெய்ததின் குளிர்ச்சி
இன்னும் விலகாதிருக்கிறது...
இன்னும் பெய்கிறது...
தாரைதாரையாய்
வழியும் நீரை
சன்னல் வழி
பார்க்கப் பார்க்க
வாழ்க்கை மிகவும்
ரம்யமாகத் தோற்றமளித்தது
தூக்கமில்லா இரவுகளையும்,
காசில்லா பகல்களையும்,
விற்காத பொருள்களையும்,
சுமந்தலையும்
அந்த நடைபாதை விற்பனையாளன்
என்னைக் கடக்கும்
வினாடிக்கு
முன் வரை....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|