மூடி வைக்கப்படும் பெரியாரின் நூல்கள்
எஸ்.ஏ.பி.
கலை, இலக்கியம், கவிதை, அறிவியல் நூல்கள் பலவும் தமிழகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. தற்போதைய பட்ஜெட்டில் கூட 28 அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் பெரியார் ஈவெரா அவர்களின் நூல்கள் மட்டும் நாட்டுடைமையாக்கப்படவில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியும் தமிழக அரசு ஏனோ மறுத்து வருகிறது.
தமிழகத்தை ஆளுவோர் தங்களைப் பெரியாரின் வாரிசுகள் என்று அழைத்துக் கொள்வதால் வாரிசுரிமையை விட்டுத்தர மறுக்கிறார்களா என்பது பலருக்கும் புரியவில்லை. பெரியாரின் எழுத்துக்கள், உரைகள், கட்டுரைகளின் மூலம் தமிழக மக்கள் பகுத்தறிவு பெறுவார்கள். அப்படி ஆகிவிடக்கூடாது என்பது அரசின் எண்ணம் போலும். கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வ.,சுந்தரராமசாமி ஆகியோரின் வாரிசுகள் தங்கள் தந்தையரின் நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மரபுரிமை உள்ளவர்கள் ஏற்காவிட்டால் நூல்கள் நாட்டுடைமையாவது கட்டாயமில்லை என்று அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால் பெரியார் நூல்கள் நாட்டுடைமையாவதை கி.வீரமணி தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை.
பாரதியார், பாரதிதாசன் போன்ற நாட்டுக்குழைத்த நல்ல கவிஞர்களின் நூல்களை கடந்த கால அரசுகள் நாட்டுடைமையாக்கியதால் அவர்களது பாடல்களும் கவிதைகளும் மக்களைச் சென்றடைந்தன. அதேபோல் பெரியாரின் நூல்களும் மலிவுவிலையில் தமிழகத்தின் பட்டிதொட்டிகளெல்லாம் பரவச் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
மேலும், பெரியாரின் நூல்களை வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று வீரமணி நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். அந்த நீதிமன்றத் தடையை எதிர்த்து அரசே தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆவதைத் தடுப்போர் எவராயினும் அவர்களை வரலாறு மன்னிக்காது.
லத்தீன் அமெரிக்கா
லத்தீன் அமெரிக்கா இடதுசாரிகளின் தலைவராய்த் திகழும் வெனிசுலா அதிபர் சாவேஸ் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்றுள்ளார். சாவேஸ் ஏற்கெனவே இருமுறை அதிபராக வெற்றி பெற்றவர். அந்நாட்டுச் சட்டப்படி அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அரசியல் சாசனத்தைச் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்காக கடந்த பிப்ரவரி 15ம் நாள் வாக்கெடுப்பு நடந்தது. இதில் 54 சதவீத வாக்குகளைப் பெற்று சாவேஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் சாவேஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். சாவேசின் ஆட்சியில் வெனிசுலா கடந்த ஆண்டு 13 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்க ஆதரவு அரசுகள் முப்பதாண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தன. தற்போது இடதுசாரிக் காற்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் வீசத் தொடங்கிவிட்டது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|